Thursday, July 24, 2008

வவுனிக்குளம் பிரதேசத்தில் 10 சதுர கிலோ மீற்றர் பரப்பளவான பிரதேசத்தைப் படையினர் கைப்பற்றியுள்ளனர்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வவுனிக்குளம் குளக்கட்டுப் பகுதி உட்பட்ட 10 சதுர கிலோ மீற்றர் பரப்பளவான பகுதியை, பாண்டியன்குளத்தில் இருந்து முன்னேறிச் சென்ற படையினர் இன்றுகாலை 10 மணியளவில் கைப்பற்றியிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது. மல்லாவியில் இருந்து தென்கிழக்காக 3 கிலோ மீற்றர் தொலைவில் இந்த இடம் அமைந்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது,

செறிவான எறிகணை மற்றும் மோட்டார் தாக்குதல்களி;ன் உதவியோடு முன்னேற்ற நடவடிக்கையில் ஈடுபட்ட படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் சண்டைகள் மூண்டதாகவும், இதன்போது குறைந்தது 25 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தனது செய்தியில் தெரிவித்துள்ளது.

இறந்தவர்களில் 7 விடுதலைப் புலிகளின் சடலங்களையும் ஆயுத தளபாடங்களையும் கைப்பற்றிய படையினர், உழவு இயந்திரம் ஒன்று, 2 மோட்டார் சைக்கிள்கள் உட்பட வேறு பொருட்களையும் கைப்பற்றியிருப்பதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டையொட்டி, இம்மாதம் 26 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 4 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் ஒரு தலைப்பட்சமாக போர்நிறுத்தத்தைக் கைக்கொள்ளப் போவதாக 22 ஆம் திகதி விடுதலைப் புலிகள் வெளியிட்ட போர்நிறுத்த அறிவித்தல் வெளியாகிய இரண்டு தினங்களில் வன்னிப்பிரதேசத்தின் உட்பகுதியில் அமைந்துள்ள வவுனிக்குளம் பகுதியை படையினர் விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது,

No comments: