Tuesday, June 3, 2008

கிழக்கு மாகாண சபை இன்றைய நிலையும் அதிகாரப் பகிர்வும் (பகுதி - 2)

வடக்கு கிழக்கு மாகாணசபை முன்னாள் முதலமைச்சர் தோழர் அ.வரதராஜப்பெருமாள் எழுதுவது

உறுதி கொண்ட ராஜபக்ஷ

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் மாகாண ஆட்சியமைப்பு தனித் தனியாகவே அமைய வேண்டும்
ஒற்றையாட்சி அரசியலமைப்பில் எந்தவித மாற்றமும் செய்யப்படக்கூடாது…,
புலிகளுக்கு எதிராக எந்தவித தயவுதாட்சண்யமும், தங்குதடையும், அச்சபயமும் இன்றி போரைத் தொடர வேண்டும்
ஆகிய விடயங்களில் ஜனாதிபதி ராஜபக்ஷ மிகவும் உறுதியுடன் தீர்மானகரமாக செயற்பட்டு வருகின்றமை வெளிப்படையானவையாகும் அவை மட்டுமல்லாது தனக்குச் சார்பான சமூகக் குழாத்தினர், தனது உண்மையான நண்பர்கள், தன்னை விசுவாசித்திருப்பவர்கள், தன்னில் தங்கியிருப்பவர்கள், தனது அரசியல் சமூக இலக்குகளுக்குப் பயனுடையவர்கள் என்போரை கணக்காக அடையாளம் கண்டு அதைச் சுற்றி தனது ஆட்சி அதிகார வட்டத்தை அமைப்பதில் திறமையானவர் என்பதையும் இதுவரை நிரூபித்திருக்கிறார்.தனது எதிரிகளையும் தன்னால் நம்ப முடியாதவர்களையும் எது வரை ஒட்டி வைத்திருக்க வேண்டும் எப்போது என்ன விதமாக வெட்டிவிட வேண்டும் என்பதிலும் அவர் இதுவரை தனது திறமையை வெளிப்படுத்தி வந்திருக்கின்றார்.

இதேபோலவே, இனப்பிரச்சினைக்கான அரசியற் தீர்வு விடயங்களைக் கையாள்வதிலும் ராஜபக்ஷ அவர்கள் மற்றவர்களால் சுலபத்தில் எதிர்வுகூற முடியாத அளவுக்கு தான் தீர்மானிப்பவற்றை தனது காலநேர கணிப்பீடுகளுக்கேற்ப செய்பவர் என்ற பெயரையும் கடந்த ஓரிரு ஆண்டுகளுக்குள் பெற்றிருக்கிறார். அதன் உச்சமாக, கிழக்கு மாகாணத்திற்கான முதலமைச்சரை நியமிப்பதில் அவர் செயற்பட்டுள்ளவிதம் தனக்கு முந்தைய கால - தனக்குச் சமகால அரசியற் தலைவர்கள் அனைவரையும் மிஞ்சிய வகையில் அவர் மிக உறுதியோடு செயற்பட்டிருப்பதைக் காண முடிகின்றது.தனது கட்சியின் மாகாண சபைப் பிரதிநிதிகளில் ஆறு பேரே தமிழர்கள் ஆனால் எட்டுப் பேர் முஸ்லிம்கள். கிழக்கு மாகாணசபைக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மொத்த உறுப்பினர்களில் முப்பந்தைந்து பேரில் 16 முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகளும், பதினொரு தமிழர் பிரதிநிதிகளுமே ஆயினர். இந்த நிலையில் தமிழர் ஒருவரை ஜனாதிபதி முதலமைச்சராக நியமிப்பார் என யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. தேர்தல் முடிவுகள் வெளியான போது ஜனாதிபதி வெளிநாடு சென்றிருந்தார். முதலமைச்சர் யார் என்ற விவாதங்கள் தலைதூக்கிய போது யாருக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என்ற கேள்விக்கு பஸில் ராஜபக்ஷ கூட உறுதியாகப் பதில் கூறமுடியாமல் இருந்தார். தனக்குத்தான் முதலமைச்சர் பதவி என்று சொல்லிக் கொண்டிருந்த பிள்ளையான் தொடர்ந்தும் அக்கருத்தையே ஊடகங்களுக்கு வெளியிட்டுக். கொண்டிருந்தபோதிலும் ஓரிரு தினங்களில் தனக்கு அப்பதவி கிடைக்குமா என்பதில் தயக்கமும் தடுமாற்றமும்; கொள்ளத்தொடங்கியதை அரசியல் அவதானிகள் கண்டிருக்க முடியும். ஆனால் எல்லாருடைய கணக்குகளையும் மீறி ஜனாதிபதி ராஜபக்ஷ தான் கொண்ட விடையையே அக்கணக்கின் முடிவாக நிலைநாட்டியுள்ளார். தற்காலிகமாகவோ என்னவோ அது தொடர்பாக எழுந்த நெருக்கடிகளையம் சமாளித்துள்ளார். ஹிஸ்புல்லா அடங்;காது வெகுண்டெழுந்தமையும், முஸ்லிம் மக்கள் சமூகமே கொதித்தெழுந்தது போன்ற தோற்றங்களையும் மஹிந்த ராஜபக்ஷ தனது அரசியல் - இராணுவ நகர்வுகள் மூலம் குளிர்காண வைத்தவிட்டார் என்றே கூறவேண்டும்.

இலங்கையில் இப்போது நடைமுறையிலிருக்கும் அரசியல் அமைப்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரமானது ஓர் ஆணைப் பெண்ணாகவோ அல்லது ஒரு பெண்ணை ஆணாக்கவோ மாட்டாதே தவிர ஏனைய எதையும் செய்யக் கூடியது என ஜே.ஆர் .ஜெயவர்த்தனா கூறினார். இலங்கை மக்களை இனப்போருக்குள் தள்ளிவிட்டுவிட்டு இலங்கை சுதந்திரம் பெற்ற நாள் தொட்டு முப்பது ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த இலங்கையின் பொருளாதாரக் கொள்கைகளையும் அமைப்புக்களையம் மூன்றே மாதத்தில் அடியோடு மாற்றி அமைத்து மீண்டும் அதனை யாரும் திருப்பி மாற்றியமைக்க முடியாத ஒன்றாக நிலைநாட்டினார்.

60000 சிங்கள இளைஞர்களை மூன்றே மாதத்தில் கொன்றொழித்து விட்டு எந்தப் பாவத்தையுமே செய்யாத ஒரு புத்தசாதுவைப் போல் புன்முறுவலோடு அனைத்து அமைச்சுக்களையம் தனது ஐந்து விரல்களுக்குள் வைத்து ஆண்டு வந்தார் அடுத்த ஜனாதிபதி பிரேமதாசா.

நல்ல நினைப்புகளைக் கொண்டிந்தவர் என்ற பெயரைப் பெற்றிருந்த போதிலும் தான் சொன்ன – உறுதியளித்த எதையும் செய்யத் தெரியாதவராக – சாதிக்க முடியாதவராக பத்து ஆண்டு காலம் அந்தப் பதவியில் இருந்து விட்டுப் போனார் அடுத்த ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா.

ஆனால் மஹிந்த ராஜபக்ஷ தான் ஒரு வித்தியாசமானவர் என்பதைக் காட்டியுள்ளார். பிரபாகரன் பாராட்டியதை போல ராஜபக்ஷ மிகவம் யதார்த்தமாக சவால்களை எதிர்கொள்ளும் திறமையைக் கொண்டிருக்கின்றார் என்பதை இப்போது பலரும் ஏற்கின்றனர். கிழக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தி அதன் மூலம் தான் நினைப்பவற்றைச் சாதிக்க வேண்டும் என்று திட்டமிட்டவற்றையெல்லாம் தன்னால் முடிந்த அளவுக்கு சாம பேத தான தண்டங்களையும் மிக நாசூக்காகப் பாவித்து நினைத்ததை நடத்தியே முடிப்பவன் என்ற பெயரை கிழக்கு மாகாண விடயத்தில் ஜனாதிபதி மஹிந்த இதுவரை நிலைநாட்டியுள்ளார்.

அரசியல் ரீதியான உண்மையான மாற்றங்களை எதிர்பார்த்திருப்போருக்கும் இலங்கைவாழ் அனைத்து மக்களுக்கும் கிழக்கு மாகாண ஆட்சியமைப்பானது நம்பிக்கை அளிக்கும் விதமாகவும் சொல்லொணாத் துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் உள்ளாகி நிற்கும் கிழக்கு மாகாண மக்களின் வாழ்வில் முன்னேற்றகரமான மாற்றங்களை ஏற்படுத்தும் விதமாகவும் ஜனாதிபதி அதேஉறுதியுடன் செயற்பட வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும்,, அதேஉறுதியோடு அவர் வாக்குறுதியளித்தவற்றைச் செயற்படுத்துவாரா????? என்பதே பலரது கேள்வியாகவும் இப்போது பரவலாக உள்ளன.

ஜனாதிபதி ராஜபக்ஷ உடனடியாக எதிர்கொள்ள வேண்டியுள்ள சவால்கள் - எட்டு முகக் கடமைகள்

1.ஜனாதிபதி கூறியபடியும் எல்லோரும் அவரை நம்பியுள்ளபடியும் 13வது திருத்தத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை கிழக்கு மாகாண சபைக்கு முழுமையாக வழங்குதல் வேண்டும்.

அவ்வாறாயின், எந்தவொரு விடயத்திலும் எந்தச் சந்தர்ப்பத்திலும் 13வது திருத்தத்தில் உள்ள குறைபாடுகளை மத்திய அரசிலுள்ள எவரும் பயன்படுத்தி மாகாண ஆட்சியைக் குறைப்படுத்தும் வகையில் நடந்துகொள்ளாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்..
அத்துடன் முடிந்த அளவுக்கு 13வது திருத்தத்தில் உள்ள குறைபாடுகளை நீக்கும் நோக்குடன் சட்ட அடிப்படைகளுக்கு முரணற்ற வகையில் மாகாண சபைக்கும் அதன் ஆட்சி அமைப்புக்களுக்கும் சார்பானதாக விளக்கமளித்து எதிர்காலத்தில் சட்ட மற்றும் நிர்வாக பூர்வமாக திருத்தங்கள் ஏற்பட வழிவகுக்க வேண்டும்.
13வது திருத்தத்தை நிறைவேற்றுவதற்குத் தேவையான சாதாரண சட்டங்களை நாடாளுமன்றத்தில் காலதாமதமின்றி நிறைவேற்றி மாகாண சபையை காத்திரமானதாகச் செயற்பட வைக்க வேண்டும்.
2. அரசியல் யாப்பின் 13வது திருத்தம் 1987ல் ஆக்கப்பட்டதன்; பிரகாரம் கணக்கிடின் மத்திய அரசாங்கம் அதனது 2008ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ள மொத்த செலவுத் தொகையில் (சுமார் 100000 கோடி ரூபாக்கள்) ஐந்து சதவீதத்தையாவது (அதாவது 5000கோடி ரூபாவையாவது) இலங்கையின் 7.5 சதவீத மக்கள் தொகையைக் கொண்ட கிழக்கு மாகாணத்தில் நேரடியாகச் செலவழிக்க வேண்டும்.

கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கான நடவடிக்கைகளை - “கிழக்கின் உதயம்” என்ற சுலோகங்களை அர்த்தமுடையதாக்க வேண்டின் அரசாங்கம் இவ்வருடத்தின் எதிர்வரும் ஆறு மாத காலங்களுக்குக் குறைந்த பட்சம் 3000 கோடி ரூபாக்களாவது அரசாங்கம்; செலவழிக்க வேண்டும்.
இதில் 2000 கோடி ருபாக்கள் அரசியல் யாப்பின் படி கிழக்கு மாகாண சபையின் வரவு-செலவுத் திட்டத்துக்கு உட்பட்டதாக – மாகாண அரசின் திட்டங்களுக்குச் செலவு செய்வதற்கென வழங்கப்பட வேண்டும் - இத்தொகை நேரடியாக கிழக்கு மாகாண ஆட்சியின் நிர்வாக அமைப்புக்களின் மூலமாகவே செலவு செய்யப்பட வேண்டும்.
இந்தவிடயத்தில்; சட்டரீதியாக மட்டுமல்ல கிழக்கு மாகாண மீள்கட்டுமானங்கள், மக்களுக்கு மீளவாழ்வளித்தல் மற்றும் அனைத்துத் துறைகளுக்குமான அபிவிருத்தி ஆகியவற்றுக்காக ஜனாதிபதி அவர்கள் தாராள மனதுடன் நிதி ஒதுக்கீடுகளை மேலதிகமாகவே மேற்கொள்ளுதல் வேண்டும்.
ஓர் ஆட்சியமைப்பின் உண்மையான அதிகாரம் என்பது அதன் நிதி ஆதாரத்திலேயே பிரதானமாகத் தங்கியுள்ளது. அதிகாரப் பகிர்வில் நிதிப்பகிர்வே பிரதானமானதாகும். சட்டங்களும் திட்டங்களும் நடைமுறையாவது பணத்தாலும் பலத்தாலுமே. சட்டவாக்க அதிகாரங்களை மட்டுமல்ல பணபலம் படைபலம் அகிய மூன்றையும் ஒரு சேரப் பகிர்வதே அர்த்தமுடைய அதிகாரப் பகிர்வாகும்.

3. மாகாண அரசோடு மத்திய அரசாங்கம் ஒரு போட்டி அரசாகச் செயற்படும் நிலைக்கு ஜனாதிபதி எவ்வகையிம் இடமளிக்கக் கூடாது.

முதலாவதாக மாகாண அதிகாரங்களுக்கு உரிய விடயங்களில் மத்த்pய அமைச்சர்களின் தலையீடுகளைத் தடுத்து நிறுத்துதல் வேண்டும்.
இரண்டாவதாக, அரசியல் யாப்பின் ஒன்பதாவது பட்டியலிணைப்பில் (9th Schedule) உள்ள பொதுநிரலில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களில் நாடாளுமன்றம் மற்றும் மத்திய அமைச்சரவை நேரடியாக நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ளினும் அவற்றை நடைமுறையில் நிறைவேற்றும் அதிகாரங்களை பெருமளவுக்கு மாகாண ஆட்சியின் நிர்வாகக் கட்டமைப்புகளுக்கு நிறைவேற்று அதிகாரங்களுக்கு உட்பட்டவையாக இருப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்படுதல் வேண்டும்.
அத்துடன் அந்த நிரலிலுள்ள விடயங்களில் எவையெவை கட்டாயமாக மத்திய ஆட்சியின் நிர்வாக அமைப்புக்களினூடாக மட்டுமே நிறைவேற்றப்பட வேண்டும் என்ற விபரத்தை ஜனாதிபதி மிகவிரைவில் நாடாளுமன்றத்தினூடாக தீhமானமான ஓர் அறிக்கை மூலம் வெளிப்படுத்துதல் வேண்டும் அதன் மூலம் மத்திய மாகாண ஆட்சிகளுக்கு இடையில் அந்த நிரல் தொடர்பாக ஆரம்பத்திலிருந்து நிலவிவரும் இழுபறி நிலையை நீக்குவதற்கு வழிவகுக்க வேண்டும். இந்த விடயத்தில் ஜனாதிபதி இந்தியாவில் கடைப்பிடிக்கப்படும் அதிகாரப் பகிர்வு முறையைக் கருத்திற் கொண்டு அந்த அறிக்கையைச் சமர்ப்பிப்பதே பொருத்தமானதாகும்.
4. மாகாண ஆட்சியானது அரசியற் சட்டரீதியான தனது பொறுப்புக்களை ஏற்று நிர்;வாகங்களைச் சிறந்த முறையில் மேற்கொள்வதற்கும் மக்களுக்குத் திருப்தியளிக்கும் வகையில் சேவையாற்றவும் தேவையான அளவுக்கு

அனுபவமும் திறமையும் நேர்மையும் மிக்க நிர்வாகிகள் மற்றும் ஆளணிகளை வழங்குதல் வேண்டும்.
போதிய அளவு கட்டிடங்கள், தளபாடங்கள், உபகரணங்கள், வாகனங்கள் மற்றும் தொடர்பு வசதிகளை வழங்குதல் வேண்டும்.
மாகாண நிரலிலும் மற்றும் பொது நிரலிலும் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பான அதிகாரங்களுக்கு உட்பட்டிருக்கும் அரசின் நிலப்பகுதிகள் மற்றும் அசையும் அசையாச் சொத்துக்களனைத்தையும் ஆவணங்களையும் மாகாண நிர்வாகத்திடம் காலதாமதமின்றி வழங்குதல் வேண்டும்.
5. இனப்பிரச்சினையின் முரண்பாட்டில் பொலிஸ், நிலங்கள் மற்றும் கல்வி தொடர்பான அதிகாரப்பகிர்வு விடயங்கள் மிகப்பிரதானமானவை என்பதை அரசியல் யாப்பின் 13வது திருத்தத்தில் உள்ள விசேட பின்னிணைப்புக்களே சான்று பகர்கின்றன.

அரசியல் யாப்பின்படி ஜனாதிபதி மாகாண பொலிஸ் அமைப்பை ஏற்படுத்துவதிலும் காத்திரமாகச் செயற்பட வைப்பதிலும்; உடனடி அக்கறையெடுக்க வேண்டும்..
மாகாணத்திலுள்ள பொலிஸ் அதிகாரிகள் அனைவரும் முதலமைச்சரின் சட்டபூர்வமான கட்டளைகளுக்கமைய செயற்படும் நிலைமையை ஏற்படுத்த வேண்டும்.
பொலிஸ் மா அதிபர் தன்னிச்சையாகத் தலையீடுகளை மேற்கொள்வதை ஜனாதிபதி தடை செய்தல் வேண்டும். மத்திய மாநில பொலிஸ் உறவுகளை தெளிவாக வரையறை செய்ய வேண்டும்.
அத்துடன் இன்றைய இலங்கையின் பொலிஸ் ஆளணியினரின் எண்ணிக்கைப்படி கிழக்குமாகாணத்துக்கு மாகாணப் பொலிஸாக மொத்தம் 3000 பேராவது இருத்தல் வேண்டும். அதில் குறைந்தபட்சம் 1250 தமிழர்களுள் 1000 முஸ்லிம்களும் இருத்தல் வேண்டும். எனவே அதற்குரிய வகையில் ஆட்சேர்ப்புக்களை மாகாண அரசாங்கம் துரிதப்படுத்த மத்திய அரசு ஒத்துழைப்புக்களை வழங்குதல் வேண்டும்.
இவ்வேளையில் தனிப்பட்ட அரசியற் கட்சிகள் மற்றும் தனியார் குழுக்கள் ஆயுதப்படைகள் வைத்திருப்பதில் முழுமையான மாற்றங்களை மேற்கொள்ளுதல் வேண்டும். அக்கட்சிகளின் இராணுவரீதியான உறுப்பினர்கள் அனைவரையும் துரிதமானதொரு திட்டத்தின் மூலம் முறைப்படியான பொலிஸ்காரர்களாகவோ அல்லது உத்தியோகபூர்வமாக இராணுவத்தின் ஏதாவதொரு படைப்பிரிவைச் சேர்ந்தவர்களாகவோ உள்வாங்கப்படல் வேண்டும்.
அந்தந்தப் பகுதிகளின் இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகள் அவரவது பகுதிகளில் இடம்பெறும் ஆயுதந்தாங்கியோரின் நடவடிக்கைகளுக்கு கணக்குக் காட்ட வேண்டிய - பதில் சொல்ல வேண்டிய பொறுப்புக்கு உள்ளாக்கப்பட வேண்டும்.
இன்று நிலவும் ஆயுதந் தாங்கியோரின் கட்டாக்காலித்தனத்துக்கு முடிவு கட்டவில்லையெனில் ஜனநாயகம் என்பதுவும் பொது மக்களின் சுதந்திரம் என்பதுவும் அர்த்தமற்றதாக அரசாங்கத்தாலேயே பறிக்கப்படுகின்ற ஒன்றாக ஆகிவிடும். இந்நிலைமை அரசின் சட்ட பூர்வமான காவல் மற்றும் இராணுவ அமைப்புக்களையும் ஊழல்கள் சமூகவிரோதங்கள் நிறைந்ததாக மாற்றிவிடும்.. ஏற்கனவே அந்த நோய் கணிசமான அளவுக்குப் பரவி வேரோடியிருக்கின்றது. ஜனாதிபதி விரைந்து இந்நோயை தீர்க்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
புலிகளின் பயங்கரவாதத்துக்கு எதிராக சிலவேளைகளில் பொதுவான சட்ட மற்றும் யுத்த மரபுகளுக்கு அப்பால் போராட வேண்டியிருக்கின்றது என்ற பெயரில் அரசாங்கமாக இருப்போரின் ஆயுதக் குழுக்கள் பொதுமக்களுக்கெதிராகவும் ஜனநாயக சக்திகளுக்கெதிராகவும் சட்டவிரோதமாக செயற்படுமாயின், அதனை காவல் துறையும் அரச படைகளின் அதிகாரிகளும் கண்டும் காணாததுவும் போல இருப்பார்களாயின் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவது சாத்தியப்படாததொரு விடயமாகி விடும்.
ஜனாதிபதியும் அவரது அரசாங்க அமைப்புக்களும்; சட்டவிரோதமான அமைப்புக்களுக்கும் சட்டபூர்வமான அமைப்புக்களுக்கும் இடையேயுள்ள வேறுபாட்டை உறுதியாக நிலைநிறுத்த வேண்டும்.
6. புலிகளின் போர் நடவடிக்கைகளை எதிர்கொள்ளவும், கிழக்கு மாகாணத்தில் சட்டரீதியான ஒழுங்குகளை முழுமையாக நிலைநாட்டுவதறகுமென அரசின் ஆயுதப் படைகள்; கிழக்குமாகாணத்தில் தொடர்ந்தும் சில காலங்களுக்கு அதிக அளவில் நிலை கொண்டிருப்பது இன்றைய நிலையில் தவிர்க்க முடியாததொன்றாக இருக்கலாம்.

அதற்காக இங்கு இராணுவ அதிகாரம் மாகாண ஆட்சிக்கும் மேலானதோர் அரச நிர்வாகமாக இருக்க முடியாது. மாறாக இராணுவம் மாகாண ஆட்சிக்குத் துணை செய்யும் ஓர் அமைப்பாகச் செயற்படும் நிலைமை உணர்வுபூர்வமாக உருவாக்கப்படல் வேண்டும்.
மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் மாகாண ஆட்சியின் நிர்வாகிகளுக்கு உரிய அந்தஸ்த்துகளையும் கௌரவங்களையும், உரிய வணக்கங்களையும் வரவேற்புக்களையும் இராணுவ மற்றும் பொலிஸ் உயரதிகாரிகள் வழங்கும் நிலை ஏற்படுத்தப்படல் வேண்டும்.. நேற்றுவரை தங்களுக்குக் கீழ்ப்பட்ட ‘பெடியன்’ களாக இருந்தவர்கள் தானே இந்த மாகாண அமைச்சர்களும் மாகாண சபை உறுப்பினர்களும் என்று இயல்பாகவே நிலவக் கூடிய மனேபாவத்தை அரசு திட்டமிட்டுக் கட்டுப்படுத்துவதும் – புதிய உறவுமுறைகளை நோக்கி நெறிப்படுத்தி வழிப்படுத்துவதும் மிகவும் உடனடியான – அவசியமான ஒன்றாகும்
இது தொடர்பான தெளிவான புரிதலும் அனுபவமும் உடைய இளைப்பாறிய அரசாங்க உயர் அதிகாரிகளைக் கொண்டு விளக்கம் வழங்கும் பயிற்சி ஏற்பாட்டுக்கு ஜனாதிபதி உடனடியாக ஏற்பாடு செய்வது பொருத்தமானதாகும்;..
7. ஜனாதிபதி மூன்றுபேரை அல்லது ஐந்து பேரைக் கொண்டதொரு “அதிகாரப் பகிர்வு ஆணைக்குழு” ஒன்றை முதற்கட்டமாக குறைந்த பட்சம் ஓராண்டுக்கென நியமிப்பது பயனுடையதாகும்.

ஜனாதிபதியே ஒவ்வொரு விடயத்திலும் தீர்வுதர வேண்டியவராக – தலையிட்டு செயற்பட வேண்டியவராக இருக்கும் நிலையை இது குறைக்கும் - மாற்றும் - இலகு படுத்தும்.
இவ் ஆணைக்குழுவானது மத்திய மாகாண அமைச்சர்கள் மற்றும் மத்திய மாகாண ஆட்சிகளின் நிர்வாகிகளுக்கு அதிகாரப் பரவலாக்கல் தொடர்பான ஆலோசனைகளை வழங்குவதோடு இரண்டு வகையான ஆட்சி நிர்வாக அமைப்புக்களுக்கிடையேயும் ஏற்படும் முரண்பாடுகளை சுமூகமாகத் தீர்த்து வைப்பதற்கும், மத்திய மாகாண நிர்வாக அமைப்புக்களுக்கிடையே அதிகாரப் பகிர்வு இயங்குவதில் சுமூகமான நிர்வாக சம்பிரதாயங்கள் உருவாகுவதற்கும் வழியேற்படும்..
8. ஜனாதிபதியின் மீது சந்தேகம் கிளப்பும் வகையிலும் - பாரதூரமாகக் குற்றங்களைச் சாட்டும் வகையிலும் சில குறிப்பிடத்தக்க கருத்துக்கள் சில வட்டாரங்களால் பரப்பப்பட்டுள்ளன. அவற்றுள் சில:-

அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் சிங்கள மயமாக்கல்களை விரிவுபடுத்தும் வகையில் குடியேற்றங்களைத் தொடர்ந்து நடத்தும் நோக்குடனேயே மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் கிழக்கு மாகாணத்தைப் பிரித்தது - தனி மாகாண சபை அமைத்துள்ளது ..….
சிங்கள இனவாதிகளின் பொம்மையாக இருப்பதற்காகவே மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பெரும்பான்மை ஆதரவைத் தானாகக் கொண்டிராத பிள்ளையானை முதலமைச்சராக்கியுள்ளா
மஹிந்த ராஜபக்ஷ அர்த்தமுடைய வகையில் அதிகாரப் பகிர்வு எதனையும் மேற்கொள்ளப்போவதில்லை. இந்தியா, ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் உலக நாடுகளின் கண்களில் மண்ணைத் தூவுவதற்காகவே இந்த கிழக்கு மாகாண ஜனநாயகம் என்னும் நாடகத்தை நடத்துகிறார்.
தமிழர் மற்றும் முஸ்லிம் இனங்களுக்கிடையே தீராத வகையில் பகைமையை நிரந்தரமாக்குவதற்கும், தமிழர் போராட்டம் தமிழர் சமூகத்தைச் சீரழித்தல் ஆகியவற்றை சிங்களப் பேரினவாதம் நடத்தி முடிக்கும் கட்டம் நெருக்குவதால் இனி அடுத்ததாக அதே பிரித்தாளும் தந்திரத்தை மறுவளமாகப் பிடித்து கிழக்கு வாழ் முஸ்லிம் சமூகத்துக்கு முடிவு கட்டுவதற்கான கட்டத்தைத்; தொடக்குவதற்குமே ஹிஸ்புல்லாவைத் தள்ளி விட்டுவிட்டு பிள்ளையானுககு முதலமைச்சர் பதவியும், அம்பாறையைச் சேர்ந்த சிங்களவரொருவரிடம் நிலம் நீர்ப்பாசனம் கல்வி ஆகியவற்றின் மாகாண அமைச்சர் பதவியும் கொடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஹெல உறுமய மற்றும் அரசின் அமைப்புக்களுக்குள் மறைவாக நின்று செயற்பட்டுக் கொண்டிருக்கும் சிங்கள வீரவிதான, சிங்கள பூமி புத்திரர்கள் போன்ற பேரினவாத அமைப்புக்கள் சிங்கள - தமிழ் - முஸ்லிம் மக்கள் மத்தியில் இனவாத வெறுப்புக்களையும் ஆத்திரங்களையும் அச்சங்களையும் வளர்த்துவிடும் வகையில் செயற்பட்டு வருவதை ஜனாதிபதி அனைத்து வழிவகைகள் மூலமாகவும் கட்டுப்படுத்துவதும், அவற்றின் செல்வாக்கெதுவும் அரசின் மீது இல்லை என்பதையும் நிரூபிப்பதற்கு வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். இவ்வாறாக ஜனாதிபதிக்கெதிராக உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பரவி வருகின்ற - பரப்பப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களையும், கிளப்பப்பட்டுள்ள சந்தேகங்களையும்; புறக்கணிக்காது மிகவிரைவில் இவற்றை பொய்யென நிரூபிப்பதை ஜனாதிபதி தனது தலையாய கடமையாகக் கொள்ள வேண்டும்.

இங்கு மேலே இதுவரை எட்டு வகைப்படுத்தப்பட்டு கூறப்பட்டுள்ள கடமைகளை நிறைவேற்றுவதை ஜனாதிபதி தன்னைப் பரிசோதிக்கும் சவால்களாகக் கருதி செயற்பட வேண்டும். அதில்தான் கிழக்கு மாகாண சபை அமைப்பின் வெற்றியும் எதிர்காலமும் தங்கியிருக்கின்றது. இதன் மூலமே அதிகாரப் பகிர்வின் மீது ஆவலும் இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான நியாயமானதொரு தீர்வு வேண்டுமென எதிர்பார்ப்புடன் இருக்கின்ற தேசிய மற்றும் வெளிநாட்டு சக்திகள் தம்மாலான, உரிய பங்களிப்புகளை வழங்க முன்வரும் நிலையை உருவாக்க வேண்டும். அப்போதுதான் அரசின் மீது பொதுமக்கள் கொண்டிருக்கும் ஆத்திரமும் நம்பிக்கையீனமும் குறையும். அப்போதுதான் அரசை எதிர்ப்பவர்களுக்கு மக்கள் அளிக்கும் ஆதரவு குறையும். கிழக்கு மாகாண சபை உதாரணமாக அமையும் வகை செய்ய வேண்டும்.
ஜனாதிபதி மட்டுமல்ல அவரோடு சேர்ந்து நிற்பவர்களான:-

1) கிழக்கு மாகாண அபிவிருத்தி விடயத்தில் பிரதான பாத்திரம் வகிக்கப் போவதாகக் கருதப்படும்; திரு..பஸில் ராஜபக்ஷவும்,
2) துணை ஜனாதிபதி என்று கூறக்கூடிய அளவுக்கு அதிகாரங்களையும் மற்றும் வல்லமையான அமைப்புக்களையும் தன்கீழ் கொண்டிருக்கின்ற பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவும்,
3) மத்திய ஆட்சியிலுள்ள பிரதானமான சிங்கள மற்றும் அமைச்சர்களும்,
4) முதலமைச்சர் பிள்ளையான் மற்றும் மாகாண சமூகநல சுகாதார அமைச்சரான ஹிஸ்புல்லா ஆகியோரும்

மேற்குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களில் அக்கறையுடனும் அர்ப்பணிப்புகளுடனும் செயற்பட வேண்டும். அதிகாரத்தில் இருப்பவர்கள் அந்தப்பதவிகளுக்கு எப்படி வந்தார்கள் என்பதல்ல முக்கியம். அந்தப் பதவிகளில் இருக்கும் காலத்தில் என்ன செய்தார்கள் - என்ன செய்கிறார்கள் என்பதே வரலாற்றால் கவனிக்கப்படும் - கணிக்கப்படும்.

இந்த முதலாவது கிழக்கு மாகாண சபையில் எதிர்க்கட்சியாக இருக்கப் போகின்றவர்களின் பிரதானமான தலைவர் ஹக்கீம் அவர்கள்… மற்றது ரணில் விக்கிரமசிங்கா அவர்கள்.. ஆளுங்கட்சியை எதிர்ப்பது அம்பலப்படுத்துவது என்ற மரபுரீதியான எதிர்க்கட்சிகளின் அணுகுமுறையில் மட்டும் அடங்கிப் போயிருக்காமல் ஆக்கபூர்வமாக கிழக்குவாழ் தமிழ் பேசும் மக்கள் அனைவரினதும் நீண்டகால நன்மைகளைக் கருத்திற் கொண்டு அவர்கள் செயற்பட வேண்டும். கிழக்கு மாகாணத்தின் பிரச்சினைகளை அவர்கள் ஒரு தேசிய நெருக்கடிகள் கொண்ட சவால்களாகக் கருத வேண்டும்.

தான் முதலமைச்சராக வரவேண்டிய சந்தர்ப்பம் அநீதியான முறைகளில் ட்டிப்பறிக்கப்பட்டுவிட்டது என ஹக்கீம் அவர்கள் கொண்டிருக்கும் சொல்லொணாக் கோபத்திற்கு அர்த்மேயில்லை என்று சொல்வதற்கில்லை. அதேவேளை கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் மக்களின் பிரதிநிதித்துவம் இனவிகிதாசாரத்தை விடக் கூடுதலாகவே கிடைத்திருக்கின்றது என்பதில் அவர் ஒரு சமூக ரீதியான மகிழ்ச்சியைக் கொள்ளுதல் வேண்டும்..

ஒஸ்லோ வரை சென்று சமஷ்டி அமைப்பு முறையை இலங்கையில் உருவாக்குதற்கு முயற்சி செய்தது மட்டுமல்லாது, நிலம் கடல் வான் ஆகிய அனைத்தின்; மீதும் தமக்கு இறைமையுண்டு என புலிகள் இடைக்கால அரசியற் தீர்வு யோசனைகளை முன்வைத்த போது அதனை முற்றாக நிராகரிக்காது புலிகளுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடருவதற்குத் தயாராக இருந்தவரே ரணில் விக்கிரமசிங்கா. ஜனநாயகத் தேர்தல்களில் கூடக்குறைய குறைபாடுகள் இருப்பதுவும், ஒரு கட்சிக்கு வெற்றியும் இன்னொரு கட்சிக்கு தோல்வியும் சகஜமே என்பதை அவர் ஓர் உதாரண ஜனநாய புருஷனாக ஏற்க வேண்டும். அவர் கிழக்கு மாகாண சபை திறம்பட இயங்கவும் மாகாண சபைகள் உண்மையில் சுயாட்சியுடையவையாக ஆகுவதற்கும் தேவையான ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும்.

திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் அரசின் திட்டமிட்ட குடியேற்றங்களின் விளைவாக அதிகரித்திருக்கும் சிங்களப்பிரதிநித்துவம்தான் கிழக்கு மாகாண முதலமைச்சர் யார் என்பதைத் தீர்மானிப்பதாக அமைந்திருக்கின்றமை கண்டு கிழக்கின் முஸ்லிம் தலைவர் எவரும் யார் மீதும் இப்போது கோபம் கொள்வதில் பயனில்லை. அந்தச் சிங்களக் குடியேற்றங்கள் தமிழர்களை முஸ்லிம்கள் மேவுவதற்கு அரசியல்ரீதியில் பயனுடையதாக இருக்கும் என்ற கணக்கில் - எதிர்பார்ப்பில் இப்போது சிறு மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இதற்காக கிழக்கு மாகாணத்திள்ள சிங்கள மக்கள் மீது ஆத்திரம் கொள்வது ஓர் இனவிரோதமாக - மக்கள்விரோதமாகவே முடிவடையும்.

எதிர்காலத்தில் ஜாதிக ஹெல உறுமய, மற்றும் ஜேவிபி போன்ற சிங்கள இனமேலாதிக்கவாதிகளின் செல்வாக்கை கிழக்கின் ஆட்சியில் குறைக்க வேண்டுமாயின்;; - அந்த நிலையை மாற்றுவதாயின் தமிழர்; - முஸ்லிம்களுக்கு இடையேயான ஒற்றுமையினால் மட்டுமே சாத்தியமாகும் இதைத் தடுப்பதில் சிங்களப் பேரினவாதிகளின் கூலிகளும் குறுகிய தமிழினவாதச் சண்டியர்களும் கைகோர்த்து நின்று செயற்படுவர் என்பதில் சந்தேகமில்லை. அதையும் மீறி தமிழ் - முஸ்லிம் மக்கள் மத்தியிலுள்ள முற்போக்கு சக்திகள் உறுதியோடு செயற்பட வேண்டும். சிறுபான்மையினங்களின் உண்மையான தலைவர்கள் ஆளையாள் வெட்டியோடி முன்னேற முயலும் குறுகிய அரசியலை நிறுத்த வேண்டும்

தமிழர்கள் தமது விடுதலைப் போராட்டத்தின் போது முஸ்லிம்களும் தமிழர்கள்தான் என்றார்கள். எனவே முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராகின்ற பொழுது தமிழர் ஒருவர்தான் முதலமைச்சராகியிருக்கின்றார் என்று ஏற்கும் நாள் வர வேண்டும். கிழக்கு மாகாணம் தனியானதாக வேண்டும் ஆனால் முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராகக் கூடாது என்று எதிர்பார்ப்பது நடைமுறைக்கொவ்வாத ஒன்றாகும்.

அதேபோலவே கிழக்கு மாகாணம் தனியாக வேண்டும் அதில் முஸ்லிம் ஒருவர்தான் முதலமைச்சராகவும் வேண்டும் என்பதுவும் எதிர்பர்க்கப்படக் கூடாத ஒன்றாகும். கிழக்கு மாகாணத்துக்குள்ளேயே தமிழர்கள் - முஸ்லிம்களுக்கிடையில் நீண்ட காலம் நிலைத்து நிற்கக் கூடிய நல்லுறவுகளை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான மாற்று அரசியலமைப்பு ரீதியான ஏற்பாடுகள் பற்றி தமிழ் மற்றும் முஸ்லிம் தலைவர்கள் தாமாகவே முன்னெடுக்கும் பேச்சுவார்த்தைகளை நடாத்த வேண்டும் அதற்கான முன்முயற்சிகளை எடுக்கக் கூடிய வல்லமையும் வாய்ப்புக்களும் இன்று ஹக்கீம் அவர்களிடம் உண்டு.

மிகவும் பலவீனமான ஆரம்பத்துடன் தொடங்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண ஆட்சியின் அமைப்புக்களைச் சீர்குலைப்பதன் மூலம் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு நீண்டகாலரீதியான அரசியற் தீர்வினைக் காண்பதற்கான முயற்சி எதனையும் பலம் பெற்றதொன்றாக ஆக்கிவிட முடியாது. விரும்பியோ விரும்பாமலோ கிழக்கு மாகாணம் தனி மாகாண ஆட்சியொன்றைக் கொண்டதாக ஆகியிருப்பதே யதார்த்தம். வடக்கு-கிழக்கு மீண்டும் இணைக்கப்படும் என்றால் கூட அது முன்னர் போலவே மீண்டும் அமைய முடியாது. இலங்கையின் இனப்பிரச்சினையின் பிரதான மையமே கிழக்கு மாகாணம் தான். கிழக்கு மாகாணத்திலுள்ள சிக்கல்களுக்குச் சுமூகமான தீர்வு.காணாமல் இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது என்பதை அங்கீகரித்தே ஆக வேண்டும். கிழக்கு மாகாணத்தி;ல் ஆட்சி அமைப்பொன்று ஏற்படுத்தப்பட்டுவிட்டதனால் இங்குள்ள இனச்சிக்கல்களுக்குத் தீர்வு காணப்பட்டுவிட்டது என யாராவது கூறுவாராயின் அவர் ஒரு அரசியல் ஏமாற்றுக்காரராக இருப்பார். அதனை யாராவது நம்புவாராயின் அவர் ஓர் அரசியல் ஏமாளியாக இருப்பார்.

அனைத்தும் மாறும் ஆனால் மாற்றங்கள் மட்டும் மாறாதவை
– பிரடெரிக் ஏங்கலஸ்

வரலாற்றில் மாற்றங்களின் போது தீர்;மானகரமாக இருந்த மனிதர்களைக் காணலாம். ஆனால் மாற்றமெதனையும் தடுத்து நிறுத்திய மனிதனெவனையும் காணமுடியாது.
கிழக்கு மாகாண சபையின் ஆக்கம்;. இலங்கையின் இனமுரண்பாட்டு அரசியல் மாற்றங்களில் ஒரு கட்டமே. மாற்றங்கள் பல இன்னமும் தொடர்ந்து கொண்டே இருக்கும். ஏற்பட்டுள்ள மாற்றம் மக்களுக்குப் பயனுடையதாக இருந்தால் - சமூகத்துக்குள்ளேயே தோன்றி வளருபவைகளுக்கு ஏற்புடையதாக இருந்தால் அது மேலும் முற்போக்கான நிலையை நோக்கிய மாற்றங்களுக்கு முன்னேறும். அவ்வாறில்லையெனில் எதிர்காலம் அதனை அழித்துவிட்டு புதிய மாற்றங்களை ஏற்படுத்தும். இதுவே இதுவரையான வரலாற்றிலிருந்து பெறப்படும் உண்மை.

1 comment:

Anonymous said...

Katon, Goukakyu no jutsu.