Saturday, August 2, 2008

அரசியல் துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் ஆனந்த விகடனுக்கு வழங்கிய பேட்டி!

தமிழீழம் மற்றும் விடுதலைப் புலிகள் போராட்டம் நியாயம் என்று தமிழ்நாட்டின் முன்னணி ஏடான "ஆனந்த விகடன்" நடத்திய கருத்துக்கணிப்பில் தமது உணர்வுகளை வெளிப்படுத்திய அத்தனை தமிழ் உள்ளங்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் நன்றி தெரிவித்துள்ளார்.

அரசியல் துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் ஆனந்த விகடனுக்கு வழங்கிய பேட்டி வருமாறு...

''இலங்கையில் இப்போதைய நிலவரம் என்ன?''

''முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இலங்கை அரசு, தனது ராணுவத்தின் உதவியுடன் தமிழ் மக்கள் மீதும் தமிழீழத் தேசத்தின் மீதும் மோசமான இனப் படுகொலையை மேற்கொண்டு வருகிறது. தமிழர்களின் வாழ்விடங்கள் மீது விமானக் குண்டுவீச்சுக்கள், பீரங்கித் தாக்குதல்கள் எனப் பல்வேறு வடிவங்களில் தாக்கி வருகிறது. தினமும் தமிழர்கள் கொல்லப் படுகின்றனர். உணவுப் பொருட்களுக்கும் மருந்துப் பொருட்களுக்குமே இங்கே இப்போது பெரும் தட்டுப்பாடு. மக்-களைப் பட்டினி போட்டுக் கொன்றொழிப்பதன் மூலம் விடுதலைப் போராட்டத்தை ஒடுக்கிவிடலாம் என இலங்கை அரசு எண்ணு-கிறது. அண்மைக் காலத்தில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் தமது வாழ்விடங்களைவிட்டு இடம் பெயர்ந்துள்ளனர். இத்தனை நெருக்கடிகளுக்கு மத்தியில், இந்த மக்களின் சுதந்திரமான வாழ்வுக்காக விடுதலைப் புலிகள் வீராவேசத்துடன் போராடி வருகின்றனர்!''

''ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பிறகு புலிகளின் போராட்-டத்துக்கு இந்தியாவின் ஆதரவு இல்லாமல் போய்விட்டது. இந்தநிலையில் குறிப்பாக, தமிழக மக்களின் ஆதரவை எந்த வகையில் எதிர்பார்க்கிறீர்கள்?''

''இதைப் புலிகளின் போராட்டம் என்று குறிப்பிடுவதைவிட தமிழ் மக்களின் போராட்டம் என்று சொல்வதுதான் பொருத்த-மானதாகும். எமது விடுதலைப் போராட்டத்துக்கான தமிழக மக்களின் ஆதரவு நீறு பூத்த நெருப்பாகவே இருந்து வருகின்றது. இதனைப் பிழையாக மதிப்பிட வேண்டாம். வரலாற்று ரீதியாக, இன, கலாசாரரீதியாக தமிழக மக்களுக்கும் எமக்கும் தொப்புள் கொடி உறவு இருந்து வருகின்றது. அவர்களுடைய ஆதரவு எமக்கு எப்போதும் இருந்தே வரும்.''

''தனி ஈழம் மற்றும் விடுதலைப் புலிகள் போராட்டம் நியாயமென்று சர்வேயில் பங்கேற்றவர்கள் தங்கள் கருத்துக்களை எங்கள் நிருபர்களிடமும் எங்கள் இணையதளத்திலும் எடுத்து வைத்திருக்கிறார்கள். ஆனால், ராஜீவ் கொலை வழக்கில் பிரபாகரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அதில் எழுப்பப்பட்டிருக்கிறது. இதுபற்றி தங்கள் கருத்து என்ன?''

''உணர்வை வெளிப்படுத்திய அத்தனை தமிழ் உள்ளங்களுக்கும் நன்றி. எமது விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருக்கும் இவர்கள், எமது தலைவர் தொடர்பாகத் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் தவறானவையாகும். வெகு விரைவில் இவர்களது கருத்துக்களில் மாற்றம் ஏற்படும் என உறுதியாகச் சொல்கின்றேன்.''

''இன்னும் எத்தனை காலத்துக்கு இந்தப் போராட்டம்?''

''விடுதலைப் போராட்டங்களுக்கு கால எல்லைகள் வகுத்துப் போராடுவதில்லை. ஆனால், முழு மக்கள் பலத்தோடு எமது விடுதலையை விரைவாக வென்றெடுப்போம்!''

''சர்வதேசச் சமூகம் உங்களையும் இலங்கை அரசையும் எப்படிப் பார்க்கிறது?''

''சர்வதேசச் சமூகம் இலங்கை அரசு பற்றி நன்றாகவே புரிந்துவைத்திருக்கிறது. அண்மையில்கூட ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சிலிலிருந்து இலங்கை நீக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தீவில் தொடர்ந்து நிகழும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக உலக நாடுகள், மனித உரிமை அமைப்புகள் தங்களது கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றன. சர்வதேசச் சமூகம் எமது போராட்டத்தைப் பற்றியும் இயக்கத்தைப் பற்றியும் நன்றாகப் புரிந்து வைத்துள்ளார்கள். எமது விடுதலைப் போராட்டம் அதர்மத்தை எதிர்த்து, தர்மத்துக்காக நடத்தும் போராட்டம் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும்!''

''இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை மாறியிருக்கிறதா?''

''இலங்கை அரசின் ராஜதந்திர நகர்வுகள் எப்போதுமே இந்திய வெளியுறவுக் கொள்கைக்குப் பாதகமாகவே இருந்து வந்துள்ளன. இந்தியாவுக்கு எதிரான சக்திகளுடனேயே அவர்கள் வரலாற்றுரீதியான உறவுகளையும் தொடர்புகளையும் பேணி வருகின்றனர். சிங்களக் கட்சிகளின் இந்தியா தொடர்பான அரசியல் கொள்கைகள் என்பன எப்போதுமே இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கு எதிரானவையே. தற்போதைய யுத்த சூழ்நிலையில் அது உச்சகட்டத்தை நோக்கி நகர்ந்து-கொண்டு இருக்கின்றது. இந்த நிலையில் இலங்கை விவ-காரத்தில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் ஏற்படும் என்பதை நம்பிக்கையுடன் எதிர்பார்க்கின்றோம்.''


நன்றி-ஆனந்த விகடன் (பதிப்பு-அன்பு)

No comments: