Tuesday, June 3, 2008

வெடிபொருட்களை அனுப்ப விடுதலை புலிகளிடம் ரூ.15 லட்சம் வாங்கியதாக ஆதரவாளர் திடுக் தகவல்

இலங்கையிலுள்ள விடுதலை புலிகளுக்கு வெடிபொருட்களை அனுப்ப இதுவரை ரூ.15 லட்சம் வாங்கியதாக கைதான புலி ஆதரவாளர் ஜெயராஜா, போலீசாருக்கு அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். மதுரையில் மே 18ம் தேதி ராஜா மில் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்ட கியூ பிராஞ்ச் இன்ஸ்பெக்டர் வெங்கடேஸ்வரன் தலைமையிலான போலீசார் சுமோ காரை கைப்பற்றினர். அதிலிருந்து இலங்கையை சேர்ந்த ஜெயராஜா, பதம்ராஜன் மற்றும் டிரைவர் செந்தில்குமாரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து விடுதலை புலிகளுக்கு கடத்தவிருந்த 44 வாக்கி டாக்கிகள், ஐந்து கேன்களில் ரெஸின்(படகு ஓட்டைகளை அடைக்க உதவும் ரசாயனம்) மற்றும் ரூ. 44 லட்சம் ஆகியவற்றை கைப்பற்றினர். மூன்று பேரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர்.

ஜெயராஜா அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது: 1999ல் சகோதரியின் கணவர் சகாயராஜை கொலை செய்து கைதானேன். என் மீது குமார், அசோக்குமாரை கொலை செய்ய முயன்றதாக வழக்குகள் பதிவாகி வாரன்ட் உள்ளது. அதிக வழக்குகள் இருந்ததால் அடிக்கடி கோர்ட் செலவுக்கு பணம் தேவைப்பட்டது. அப்போது புலிகளுக்கு பொருட்களை கடத்தினால் பணம் கிடைக்கும் என தோன்றியது. நான், பத்மராஜன், விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த சசி ஆகியோர் டிரைவர் செந்தில்குமார் உதவியுடன் புலிகளுக்கு பொருட்களை வாங்கி கடத்தினோம். 2007ல் கேரளாவில் அஜிம்பாயிடம் ரூ.மூன்று லட்சம் வாங்கி ஒன்றரை லட்சம் டெட்டனேட்டர், இரும்பு பால்ரஸ் குண்டுகளை வாங்கி அனுப்பினோம்.
´
அவற்றை கொண்டு செல்லும் வழியில் சசி கடற்படையால் சுடப்பட்டு பலியானார். அதன் பிறகு இலங்கையில் இருந்து புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த ரவி கூறியபடி பொருட்களை வாங்கி அனுப்புவோம். இதற்காக புலிகளிடமிருந்து ரூ.15 லட்சம் வரை வாங்கியுள்ளோம். பத்மராஜன் இலங்கை தமிழில் பேசுவார். அதனால் அடையாளம் தெரிந்து விடும் என்பதால் நான் தான் பொருட்களை விலைபேசி வாங்குவேன். அவர் பணம் மட்டும் கொடுப்பார். வாக்கி டாக்கிகள் வாங்க ரூ. மூன்றரை லட்சம் கொடுத்துள்ளோம். மேலும் வாக்கி டாக்கிகள் வாங்க ரூ. ஐந்து லட்சம் கொடுத்து வைத்துள்ளோம். செந்தில்குமாருக்கு சுமோ கார் வாங்க ரூ.90 ஆயிரம் கொடுத்துள்ளோம். ரசாயனத்திற்கு ரூ. 30 ஆயிரம் செலவழித்தோம். ரங்கா என்பவரிடம் வாங்கிய ரூ. 50 ஆயிரத்தை திருப்பி கொடுத்துள்ளோம். இவ்வாறு கூறியுள்ளார். விசாரணை முடிந்து மூன்று பேரும் நேற்று இரண்டாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை ஜூன் 16ம் தேதி வரை ரிமாண்டில் வைக்க மாஜிஸ்திரேட் (பொறுப்பு) ஜெ. வெங்கடேசன் உத்தரவிட்டார்.

1 comment:

Anonymous said...

Concentrate to the things that could give information to the people.