லண்டனில் தனிமையிலும் மன அழுத்தத்துடனுமிருந்த இலங்கைத் தமிழ் பெண்ணே தனது பிள்ளைகளைக் கொலை செய்ததாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
லண்டனுக்கு தெற்கே காஷல்ரன் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு, இளந்தாயொருவர் தனது மூன்று குழந்தைகளையும் கொலை செய்யும் நோக்கில் வெட்டியுள்ளார்.
இதில் 5 வயதான ஆண்பிள்ளையும் 4 வயதான பெண் பிள்ளையும் உயிரிழந்ததுடன் 6 மாத பெண் குழந்தை ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
மூன்று பிள்ளைகளையும் கழுத்தை வெட்டியே கொலை செய்ய தாயார் முயற்சித்துள்ளார். இதில் மூத்த இரு பிள்ளைகளும் உடனடியாக உயிரிழக்க மூன்றாவது பிள்ளையும் உயிரிழந்துவிட்டதாக தாயார் நினைத்துள்ளார்.
இந்த நிலையில், இரவு வீடு திரும்பிய கணவன் விபரீதத்தை உணர்ந்து உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அறிவிக்கவே அங்கு விரைந்த டாக்டர்கள், இரு பிள்ளைகள் உயிரிழந்ததை உறுதிப்படுத்தியதுடன் 6 மாதக் குழந்தையை உடனடியாக ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்று அனுமதித்தனர்.
இதையடுத்து அங்கு விரைந்த பொலிஸார், பிள்ளைகளின் தந்தையான நவராஜா நவநீதனையும் (39 வயது) அவரது மனைவியான சசிகலாவையும் (35 வயது) கைது செய்தனர்.
விசாரணையின் பின் கணவனை விடுதலை செய்த பொலிஸார், பிள்ளைகளின் தாயான சசிகலாவை தடுத்து வைத்து விசாரணை நடத்தியதுடன் பின்னர் மனநலச் சட்டத்தின் கீழ் அவரை மனநல ஆஸ்பத்திரியில் தடுத்து வைத்து சிகிச்சையளித்து வருகின்றனர்.
கடந்த நான்கு வருடங்களுக்கு முன் இந்தத் தம்பதியர் இலங்கையிலிருந்து லண்டன் வந்துள்ளனர். சசிகலாவின் சகோதரனும் அவரது மனைவியும் இவர்களுடனேயே தங்கியிருந்தனர்.
இரு வாரங்களுக்கு முன் அவர்கள் வேறு வீட்டிற்கு சென்றுவிட்ட அதேநேரம், வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக நவநீதனும் பாதிக்கப்படவே அவர் இரவு வேளைகளில் வீடு திரும்புவதில் பெரும் தாமதமேற்பட்டது.
இதனால், தனிமையாலும் மனஅழுத்தத்தாலும் சசிகலா பெரிதும் பாதிக்கப்பட்டிருந்ததாக உறவினர்கள் பொலிஸ் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் பிரிட்டனில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் பிரிட்டனுக்கு புலம்பெயர்ந்த வெளிநாட்டவர்கள் மத்தியில் பாரிய உளவியல் பிரச்சினை இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment