Wednesday, June 4, 2008

பாரிஸில் சமய நிகழ்வென்ற பெயரில் பால்ராஜ் இரங்கற் கூட்டம்

யாழ்ப்பாணத்தில் ஒரு இரகசியமான நிலையத்தில் 1976 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் திகதி பிரபாகரன் முதலாக அவருடைய சகாக்கள் ஒன்றுகூடி விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆரம்பித்தனர். இந்த நிகழ்வின்போது பிரபாகரன் தலைமையில் 40 பேர் முதல் 50 பேர் வரையிலான நபர்கள் கூடி இவ்வாறு இந்த புலிகள் இயக்கத்தை அமைத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1976 லிருந்து இன்றுவரை சுமார் 32 வருடங்கள் புலிகள் இயக்கம் எண்ணுக்கணக்கற்ற பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இவ்வாறு கடந்த 32 வருடங்களாக புலிகள் இயக்கம் தமிழர்களின் வாழ்வை இருளில் தள்ளிப்பல்வேறு இன்னல்களுக்கும் கொடுமைகளுக்கும் உள்ளாக்கி வந்துள்ளது. இதுவரை மனிதத்தன்மையற்ற முறையில் பல்வேறு தாக்குதல்களை புலிகள் இயக்கம் மேற்கொண்டுவிட்டது. இந்த அரக்கத்தனமான போரில் கடந்த 32 வருடங்களில் பல படையணிகளையும் படையணித் தலைவர்களையும் பலிகொடுத்துவிட்டது புலிகள் இயக்கம். இறுதியில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் பால்ராஜ் எனப்படும் புலிகள் இயக்கத்தின் சிரேஷ்ட தலைவர் உயிரிழந்தார்.

பிரான்ஸ் நாட்டில் புலிகள் இயக்கமும் அதன் ஆதரவுச் செயற்பாடுகளும் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் மேற்படி பால்ராஜ் உயிரிழந்ததையிட்டு இரங்கற் கூட்டம் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அங்குள்ள புலிகள் இயக்கத்தினர் மற்றும் ஆதரவாளர்களால் நடத்தப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் இந்த நிகழ்வு புலிகள் இயக்கத்தின் கூட்டம் போலன்றி சமய நிகழ்வு என்ற பெயரிலும் போர்வையிலும் நடத்தப்பட்டுள்ளதாக பாரிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன. இவ்வாறு பிரான்ஸில் புலிகள் இயக்கச் செயற்பாடுகள் சட்டபூர்வமாகத் தடை செய்யப்பட்ட பின்னர் அங்குள்ள புலிகள் இயக்கத்தினரும் ஆதரவாளர்களும் சமய நிகழ்ச்சிகள், கலை கலாசார நிகழ்ச்சிகள் என்ற போர்வையிலேயே புலிகள் இயக்கம் சம்பந்தப்பட்ட கூட்டங்கள், மாநாடுகள், ஊர்வலங்கள் ஆகியவற்றை நடத்தி வருகின்றனர். இந்த வகையில் இறுதியாக மேற்படி பால்ராஜ் இரங்கல் கூட்டம் சமய நிகழ்ச்சி என்ற பெயரில் நடத்தப்பட்டுள்ளது. இதில் பிரான்ஸில் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாக இரகசியமாகவும் வேறு அமைப்புகள் பேரிலும் செயற்படும் பாரிஸில் வாழும் பல தமிழ்ப் பிரமுகர்கள் கலந்துகொண்டுள்ளனர். இதில் புலிகள் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து அதன் சாதனைகள், உயிரிழந்த தலைவர்கள் மற்றும் பிரபாகரனின் தலைமைத்துவம் ஆகியவற்றைப் பாராட்டிப் பாரிஸில் வாழும் புலிகள் இயக்கப் பிரமுகர்கள் உரையாற்றியுள்ளனர்.

லங்காதீப: 01.06.2008

No comments: