உலகமெங்குமிருக்கும் தமிழ் மக்கள் 1983ம் ஆண்டு இனக்கலவரத்தைப் பற்றிய கருத்தரங்கங்களையும் , ஒரு சிலர், இனக்கலவரத்தை நினைவு கொள்ளும் சாட்டில் கேளிக்கைகளையும் வைத்து ஓய்ந்து விட்டார்கள். இன்று, இலங்கையின் வடக்கில் தொடரும் போரால், அல்லற்படும் மக்களின் நிலையை உணர்ந்து அவர்களுக்கு எப்படி உதவிசெய்யலாம் என்று பல மனித உரிமைவாதிகள் திண்டாடுகிறார்கள். விடுதலைப்புலிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் மக்களை வெளியே விடாது தடுத்து வைத்திருக்கிறார்கள். இராணுவம் , கிளிநொச்சியை நெருங்கினால், மக்கள் புலிகளின் மனிதக்கேடயமாக்ப்பாவிக்கப்படபோகிறார்கள் என்பது பலரும் அறிந்த உண்மை.
இதில் அழியப்போவது எண்ணிக்கையற்ற பொதுமக்களே. இலங்கையில் உக்கிரமடையும் போர்பற்றியோ மக்களின் துயர் பற்றியோ உலக மனித உரிமைவாதிகள் என்ன சொன்னாலும், அங்கு இருக்கும் நடைமுறை வேறு. எப்படியும் , கிளிநொச்சிக்குள் அகப்பட்ட மக்களை வெளியேற்ற முடியுமான முன்னெடுப்புக்களைப் பலரும் எடுப்பது மிகவும் அத்தியாவசியமாகும். இது பற்றி, கொழும்பிலுள்ள தமிழ்த் தலைவர்களான, திரு, சித்தார்த்தன், திரு சிறிதரன், திரு ஆனந்தசங்கரி அவர்களுடன் தொடர்பு ஏற்படுத்தியபோது, அவர்களின் கருத்துப்படி, தொடரும் போரால் மன்னார்ப்பகுதியிலிருந்து வெளியேறும் மக்கள் கிளிநொச்சியை நோக்கிப்போகிறார்கள். போரை முன்னெடுக்கும்போது, அங்கிருந்து வெளியேறும் மக்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் இடங்களோ வசதிகளோ இல்லை என்றார்கள்.
''. கொழும்பில் வாழும் தமிழ்த் தலைவர்கள் அத்தனைபேரும் சேர்ந்து, போர்ச்சூழலிருந்து வெளியேறும் மக்களுக்குப்பாதுகாப்பு, அடைக்கல வசதிகள் கொடுக்கும் விடயங்கள்பற்றி ஜானாதிபதியுடன் தொடர்பு கொண்டீர்களா,மக்களை வெளியேற்றிவிட்டுப்போரைத் தொடரும்படி அரசாங்கத்தையும் விடுதலைப்புலிகளையும் கேட்டீர்களா? இது பற்றி, நீங்கள் மூவரும் இணைந்து, உடனடியாக ஒரு வேண்டுகோளை ஜானாதிபதிக்கும், உலகநாடுகளுக்கும் வெளியிடவேண்டும்'' என்று கேட்டுக்கொண்டேன்.இதுபற்றி உடனடி நடவடிக்கைகள் எடுப்பதாச் சொன்னார்கள்.
திரு சித்தார்தன் அவர்கள்:(புளொட்) ''போர் தொடரும், மன்னார் வன்னிப்பகுதிகளுக்குத் தேவையான, நிவாரணப்பொருட்கள் செல்வதே கஷ்டமாகவிருக்கிறது. அரசாங்கம், இந்தக்கடமையைச் செய்தாலும் துரிதகெதியில் எதுவும் நடக்க எந்த வாய்ப்பும் இல்லை. மக்களுக்குத்தேவையான சாமான்கள் போய்ச்சேர எத்தனையோ தடைகள் இருக்கின்றன. உணவு, மருந்துபோன்ற சாமான்கள் விரைவில் அனுப்பும் வழிமுறைகள் முன்னெடுக்கப்படவேண்டும். மன்னாரில் நடக்கும் போரிலிருந்து தப்பியோடும் மக்கள் சாரி சாரியாகக் கிளிநொச்சிக்கு வந்துகொண்டிருக்கிறார்கள். உடனடித்தாக்குதல் மட்டுமன்றி, தூரத்துப் பீரங்கி வெடிகளின் தாக்குதலுக்குப்பயந்தும் மக்கள் அப்பகுதிகளிலிருந்து வெளியேறத் தொடங்கி விட்டார்கள். ஒரு ஷெல் அடித்தால் அதன் தாக்கம் 10-12 கி மி வரை இருக்கிறது. இப்போது தொடரும் போரில் இராணுவம் முன்னேறிக்கொண்டிருந்தாலும், இராணுவத்தைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வரவிட்டு ஒரு பிரமாண்டமானதாக்குதலை விடுதலைப்புலிகள் நடத்துவார்கள் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுவதால், மக்களிடையே பெரியபீதி காணப்படுகிறது. முல்லைத்தீவு , கிளிநொச்சி மக்கள் என்ன செய்வது என்று தவிக்கிறார்கள். நிலைமைகள் மிகப்பரிதாபமாகவிருக்கிறது. புலிகளின் கட்டுப்பாட்டுப்பிரதேசத்தில் கிட்டத்தட்ட 300.000-400.000 மக்கள் வாழ்கிறார்கள். இவர்களிற் பலர் ஏற்கனவே மனிதக்கேடயங்கள். இவர்களின் எதிர்காலம் நிலையற்றதும், மிகவும் அபாயகரமானதாகவுமிருக்கிறது. சர்வதேச சமூகம் ஒன்றுகூடி இம்மக்களின் அன்றாட தேவைகள், பாதுகாப்பு, அடைக்கலம், மட்டுமன்றி வன்னியிலிருந்து வெளியேறவும் உதவவேண்டும். அகில உலகெங்கும் பரந்திருக்கும் தமிழ்ச்சமுதாயம் இந்தக் கொடுமையில் அகப்பட்ட மக்களுக்காக்குரல் கொடுக்கவேண்டும். நீங்கள் கேட்டபடி நாங்கள், உடனையாக ஒருவேண்டுகோளை ஜானாதிபதிக்கும் சர்வதேச சமூகத்தலைமைகளுக்கும் அனுப்பி வைக்கிறோம்''.
''எப்படியும் இந்தப்போர் முடிந்து மக்களுக்கு நல்லநிலை கிடைக்கவேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். கிழக்கில் கிடைத்த வெற்றிபோல் இம்மக்களும் நிம்மதியாகவாழ்வேண்டும். ஒருகாலத்தில் ஆயுதாரிகளாகவிருந்து, இன்று மக்களுக்காக உழைக்க வந்தவர்களிடம் அரச ஆட்சிபோனால் நேர்மையுடன் நடக்கும் என்று எதிர்பார்க்கலாம்.அதைக்கிழக்கில்ச் சரிவரச்செய்ய இன ஒற்றுமையும் ஒத்துழைப்பும் தேவை. ஆயுததாரிகளாகவிருந்து அரச நிர்வாகத்துக்கு வந்தவர்கள் நேர்மையாகத் தங்கள் உழைப்பை மக்களுக்கு அர்ப்பணிப்பவர்கள். அது இங்கு நடக்கும் யாதார்த்தம். ஆனால், இன்று புலிகளின் கட்டுப்பாட்டிலிருக்கும் பகுதிகளிலும் புலி அதரவாளர்கள் நல்ல வடிவாகப் பல ஊழல்களை இராணுவத்துடன் செய்து செய்கிறார்கள். ஒரு இடத்திலுள்ள மக்களுக்கொடுக்க,300 பொருட்கள் தேவை என்றால் 400 என்று, மக்களுக்கு பொருட்களை வினியோகிக்கும் புலி ஆதரவாளர்கள்(GS) கேட்பார்கள். 300ஐயும் மக்களுக்குகொடுத்துவிட்டி மிகுதி 100ஐயும் தங்களுக்குள் பிரித்துக்கொள்வார்கள். இப்படியான அநியாயங்களால் மக்களுக்குக்கிடைக் கூடியநன்மைகள் எவ்வளவோ லஞ்சதாரிகளிடம் போய்ச்சேருகிறது. எப்படியும், தற்போதைய நிலைக்குள் மாட்டிக்கொண்டு தவிக்கும் மக்களுக்கு எங்களால் னதைச்செய்வோம்.அரச நிர்வாகத்துக்கு வரும் சாதாராண அரச ஊழியர்களிடம் லஞ்ச உணர்வு கூடவுண்டு. அவர்கள் எப்போதும் தங்கள் பணப்பைகைகளை லஞ்சத்தில் நிறைக்கவே பார்ப்பார்கள். அந்த நிலை மாறித் தமிழ் மக்களின் நலனுக்கு உழைப்பவர்கள் சமுதாயதில் வளரவேண்டும். வடக்கில் மக்கள் இன்னும், தங்கள் பாதுகாப்புக்காக, இடத்துக்கு இடம் ஓடிக்கொண்டேயிருக்கிறார்கள்.கிழக்கில் எப்போதோ அகதியான மக்கள் பலருக்கு இன்னும், மீழ்குடியேற்றத்திட்டங்கள் முழுக்கவும் நிறைவேற்றப்படவில்லை. எங்கள் சமுதாயம் சிதைந்த சமுதாயம். தொடர்ந்து போரும் இட மாற்றங்களும் நடந்து மக்களைத் துயர்படுத்துகிறது''.
திரு சிறிதரன் அவர்கள் (ஈ.பி.பி.ர்.எல்.எப் பத்மனாபா அணி): ''அரசு,தனது இராணுவ முன்னெடுப்பை எடுக்கும்போது மக்களைப் போர் நடக்காத இடங்களுக்கு அனுப்ப முயற்சிகளை எடுக்கவேண்டும். மன்னாரில் அடிபட்ட மக்கள் வேளாங்குளம், தேவன்பிட்டி போன்ற பகுதிகளிலிருந்து கிளிநொச்சிக்கு ஓடுகிறார்கள். ஏற்கனவே படு மோசமானநிலையிலிருக்கும் மக்களின் வாழ்க்கை நிலை இந்தக் கொடுரத்தால் இன்னும் தாங்கமுடியாத சோகத்துக்குள் மக்களைத் தள்ளிவிட்டிருக்கிறது. இது பற்றி நாங்கள் மூவரும் , நீங்கள் கேட்டபடி , எங்கள் வேண்டுகோள்களை அனுப்புவோம், எங்களால் முடிந்ததை நாங்கள் செய்வோம். மக்களுக்கு விடுதலை தேவை. இன்று கிழக்கில் ஒரு தேர்தல் நடந்திருக்கிறது. அந்த நிர்வாகம் சரிவர நடக்க அரச நிறுவனங்கள் (iNSTITUTIONS) ஒத்துழைக்கவேண்டும். போரில் நீண்டநாள் அல்லற்பட்ட கிழக்கின் சமுதாய நிலை பல்விதத்திலும் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதை நிவர்த்திசெய்ய விரைவான திட்டங்கள் செயற்படுத்தவேண்டும். இன்று, முதலமைச்சராக வந்திருக்கும், திரு சந்திரகாந்தன் என்ன படித்திருக்கிறார் என்பது பிரச்சினையல்ல, அவரின் செயற்பாடுகள்தான் முக்கியம் . இன்று,கிழக்கின் அதிகாரத்துக்கு வந்திருப்பவர்கள், மக்களைக்காப்பாற்ற ஆயுதம் எடுத்தவர்கள். அவர்களிடம் நேர்மையிருக்கும் என்று எனது அபிப்பிராயம்.
கிழக்கில் 13 வது சரதுக்குரிய அதிகாரப்பரவல்கள் கொடுக்கப்படவேண்டும். அரசாங்கம் பல திட்டங்களைச்செயற் படுத்துகிறார்கள் என்று கேள்வி, அத்தனையையும் சீர்திருத்தமாகச்செய்ய ஒரு நல்ல நிர்வாகம் தேவை. யார் பதவிக்கு வந்தார் என்று கேள்வியல்ல, கொடுத்த கடமையைச்சரிவரச் செய்வதுதான் முக்கியம். அரச நிர்வாகத்துக்கு வரும் சாதாராண அரச ஊழியர்களிடம் லஞ்ச உணர்வு கூடவுண்டு. அவர்கள் எப்போதும் தங்கள் பணப்பைகைகளை லஞ்சத்தில் நிறைக்கவே பார்ப்பார்கள். ஆனால், போராளிகளாயிருந்து வந்தவர்களிடம் அந்தப்பழக்கமில்லை.கிழக்குக்கு இன்று தேவையானது , இன ஒற்றுமையும், மக்களுக்கு வேலைசெய்யும் நல்ல மனிதர்களுமே. கிழக்கின் மேயர் திருமதி சிவகீதா பிரபாகரன், சமூகநலவாதியான திருமதி ஜெசிமா இஸ்மாயில் போன்றோரின் ஆளுமைபற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். இப்படியானவர்கள் சமுதாயத்தைக்கட்டியெழுப்ப உதவுவார்கள். புலிகள், படித்த சமுகத்தைக் கொலைசெய்து தள்ளிவிட்டதால், மக்களுக்களுக்குத் தன்னலம் இன்றிச் சேவைசெய்யும் மனிதர்கள் அரிதாகிவிட்டார்கள். இன்று, வடக்கில் தொடரும் போர் காரணமாக, மக்களுக்குத் தேவையான சேவைகள் எத்தனையோ இருக்கின்றன. நிரந்தர நிர்வாகமற்ற இடங்களில் மக்கள் சேவையை முன்னெடுப்பதும் கடினமாகவிருக்கிறது.''
''தற்போது, மன்னார்ப்பகுதி, வன்னிப்பகுதிகளில் போர் நடக்கும் இடங்களில் அகப்பட்ட மக்களுக்குகுரல் கொடுக்க யாருமில்லை.புலிகள் தங்களைக் காப்பாற்றத்தான் முனைகிறார்கள். இராணுவத்திடம் வடக்கில் அகப்பட்ட புலிகள் இப்போது, இராணுவத்தின் கவனத்தைத் திருப்புவதற்கு என்று சொல்லிக்கொண்டு, வடக்கிலிருந்து, கிழக்கு நோக்கியும் போயிருக்கிறார்களாம். ஆயித்திமலைப்பகுதியில் கிளைமோர் வைத்திருக்கிறார்கள்.கஞ்சிகுடியாறு பக்கத்தில் 100-200 புலிகள் போயிருப்பதாகக்கதைகள் அடிபடுகின்றன.லவுகலையில் அதிரடிப்படைக்கு அடிகொடுத்திருக்கிறார்கள் என்று சொகிறார்கள். எப்படியும் , தொடர்ந்தும் போரைத் தொடர்வதும் மக்களுக்குத் துயர் கொடுப்பதும் என்று புலிகள் கங்கணம் கட்டியிருக்கிறார்கள். அத்துடன் புலிகள், எப்படியும் தமிழ் இனத்தை அழிப்பது என்றே முடிவு கட்டிவிட்டார்கள்.வேலுப்பிள்ளையாரின் மகன் பிரபாகரன், தமிழ் மக்களை நாடோடியாக்கிவிட்டுப் பங்கருக்குள் பத்திரமாகவிருக்கிறார்.இங்கு மக்கள், உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றிக் காடு, வயல்கள்கடந்து ஓடிக்கொண்டேயிருக்கிறார்கள்''
திரு ஆனந்தசங்கரி அவர்கள், (தமிழர் விடுதலைக்கூட்டணி) '' வடக்கில் தொடரும் போரால் மக்கள் படும் அவலம் பற்றி நான் பிரபாகரனுக்கு எழுதிவிட்டேன். மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப்பொருட்கள், அடைக்கலம், என்பதுபற்றிய கோரிக்கையை மற்றத் தமிழ்த் தலைவர்களுடன்சேர்ந்து கொடுக்கவேண்டிய தலைமைகளுக்கு உடனடியாகக்கொடுப்போம்'' என்றார்
போரில் அல்லற்படும் மக்களுக்குத்தேவையான அத்தியாவசியப்பொருட்கள் எப்படிக் கொடுக்கப்படுகின்றன என்பது அறிய, இலங்கை சமூகசேவை அமைச்சரை திரு டக்லஸ் தேவானந்தாவைத் தொடர்பு கொள்ள முயன்றபோது அவரின் தொடர்பு கிடைக்கவில்லை.
இலங்கையில் நடக்கும் போரை உடனடியாக நிறுத்தச்சொல்லிப் புலி ஆதரவாளர்கள் பிரசாரங்கள் செய்கிறார்கள். புலிகள், சாதுர்யமாகப் பின்வாங்குவதாகவும், இராணுவத்தைத் தங்களின் கட்டுப்பாட்டுப்பிரதேசமான வன்னிக்குள் வரவிட்டு ஒரு பெரிய தாக்குதல் நடத்துவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், நூற்றுக்கணக்கான தற்கொலைதாரிகள்,' தங்கள் கடைசித் தாக்குதல்களுக்கு வடக்கு, கிழக்கு, கொழும்பு, சிங்களப்பகுதிகளுக்குள் அனுப்பபட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஒரு சில புத்திசாலிகள், 'புலிகள் தலிபான்கள்மாதிரி, தோற்றதுபோற் காட்டிக்கொண்டு சாதுர்யப் பின்னடைவு செய்கிறார்கள்.மிகப்பயங்கர பலத்துடன் போருக்குத் திரும்பிவருவார்கள்' என்று நப்பாசையுடன் கதையளக்கிறார்கள். தலிபான்கள், தங்களின் தத்துவத்தின் அடிப்படையில் இணைந்தவர்கள். பல நாடுகளிருந்துபோய் ஆபுகானிஸ்தானிற் போர்புரிபவர்கள்.புலிகள் தங்களுக்குப் பணம் பறிக்க, இலங்கையில் ஒரு குழுவை நாட்டில் உண்டாக்கி, ஊரைவிட்டு ஓடிவந்து விட்டு உலகமெல்லாம் கோடி கோடியெனச் சேர்த்துவைத்துக்கொண்டு, இலங்கையிலிருந்து தப்பியோடமுடியாத ஒரு ஏழைச் சமுதாயத்தைப்பலி கொடுப்பவர்கள்.இதுவரையும், புலிகள் மக்களுக்காக எதையும் செய்யவில்லை. போராட முன்வந்த தமிழ் இளைஞர்களை, மாற்றுகருத்துக்கள் என்ற காரணம் காட்டி வேட்டையாடி முடித்தார்கள். மாத்தையா போன்ற தங்கள் தலைவர்களையே போட்டுத்தள்ளினார்கள்.வாழவேண்டிய ஆயிரக்கணக்கான இளைஞர்களைப்போர்க்களம் அனுப்பி மரணக்கட்டிடங்களைக்கட்டினார்கள். மக்கள் இருக்கும் இடங்களைப் பாலைவனங்களாக்கினார்கள். தங்கள் குழந்தைகளை வெளிநாடுகள் அனுப்பிப்படிக்க வைத்தார்கள் இலங்கையில் ஏழைத் தமிழ்க் குழந்தைகளை மூளைச்சலவை செய்து கொலைக்களம் அனுப்பினார்கள். மரியாதையாக வாழ்ந்த சமுதாயத்தை, கள்ளர்கள் காவாலிகள்,பயங்கரவாதிகள் என்று உலச சமுதாயம் முத்திரை குத்தவைத்தார்கள். வடக்கில் தமிழர்களுடன் ஒற்றுமையாய் வாழ்ந்தமுஸ்லிம் மக்களை அனாதைகளாக்த் துரத்தியடித்தார்கள். பிராந்தியப் பிரிவினைகளை உண்டாகினார்கள். இ¢ந்தியாவின் முன்னாட் பிரதமரைக் கொலைசெய்து இந்திய மக்களை எதிரியாகினார்கள். சமாதானம் செய்விக்க வந்தவர்களையும் அதிருப்திப்படுத்தினார்கள்.இன்று, தமிழர்களுக்காகக் குரல் கொடுக்க உலகில் யாரும் முன்வராத நிலையை உண்டாக்கியிருக்கிறார்கள்.
இனி ஒருபோதும் புலிகள், பழையபடி எந்தப் பெரிய வெற்றியையும் அடையமாட்டார்கள், தமிழர்களுக்கு விடுதலை எடுத்துக்கொடுக்க மாட்டார்கள் என்று பெரும்பாலொருக்குத் தெரியும். இன்னும் கொஞ்சகாலம் தங்களுக்குப் பணம் பறிக்கப் பல தமிழ் உயிர்கள் பலியாகப் போகின்றன என்பதுதான் உண்மை. விடுதலைப்புலிகள் தமிழ் மக்களில் உண்மையான அக்கறை கொண்டவர்களென்றால் மக்களை வெளியே அனுப்பட்டும். தாங்கள் மட்டும் எதிரியுடன் போரிட்டு வெற்றிவாகை சூடட்டும். அதை அவர்கள் செய்யமாட்டார்கள்.எவ்வளவு படித்த தமிழ்ச் சமுகம் இப்படி ஏமாற்றப்பட்டதும், சொல்லாத் துயர்களைத் தொடர்ந்து அனுபவிப்பதும் பெரிய துக்கமானவிடயமாகும்.
இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment