"விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் என் காலில் மண்டியிடும் வரை, போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை" என்று, இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே ஆவேசம் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடக்க உள்ள சார்க் மாநாட்டையொட்டி விடுதலைப்புலிகள் தரப்பில் போர் நிறுத்தம் அறிவிக்கப் பட்டுள்ளது. ஆனால், போர் நிறுத்தத்துக்கு இலங்கை இராணுவம் மறுப்பு தெரிவித்து, தொடர்ந்து தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் இலங்கை அரசும் போர் நிறுத்தத்துக்குச் சம்மதிக்கப் போவதாக, "டி வி' சேனல்களிலும், பத்திரிகைகளிலும் செய்தி வெளியானது. விடுதலைப் புலிகளுடனான போரில் காயமடைந்த இராணுவ வீரர்களுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
காயமடைந்து அனுராதபுரம் இராணுவ முகாம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இராணுவ வீரர்களிடம், இலங்கை அதிபர் ராஜபக்சே, உடல் நலம் விசாரிக்கச் சென்றிருந்தார். அப்போது ஒரு இராணுவ வீரர், போர் நிறுத்தத்துக்கு இலங்கை அரசும் சம்மதிக்கப் போவதாக வெளியான தகவல் குறித்து ராஜபக்சேவிடம் கேள்வி எழுப்பினார். அப்போது ஆவேசமடைந்த ராஜபக்சே, "விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், என் காலில் மண்டியிடும் வரை போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை' என்று கூறினார்.
இதற்கிடையே, மகிந்த ராஜபக்சேவின் சகோதரரும், இலங்கை இராணுவ செயலருமான கோத்தபாய ராஜபக்சே, "விடுதலைப் புலிகள் சீட்டுக்கட்டுப் போல குலைந்து வருகிறது. இன்றோ, நாளையோ அவர்கள் முழுவதுமாக அழிக்கப்பட்டுவிடுவர்' என்று கூறியுள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளில் இராணுவத்தில் இருந்து வெளியேறிய 10 ஆயிரம் வீரர்களை மீண்டும் இராணுவத்துக்குத் திரும்பும் படியும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
"ராணுவ வீரர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக ஏராளமான நேரமும், பணமும் செலவிடப்பட்டுள்ளது. அது பயனற்றதாகப் போய்விடக் கூடாது' என்று கோத்தபாய அழைப்பு விடுத்துள்ளார். இதுவரை இலங்கை இராணுவத்தில் இருந்து 30 ஆயிரம் பேர் இடையிலேயே பணியில் இருந்து விலகி உள்ளனர். வீரர்கள் விலகுவதால் புலிகளுடனான போரில் அவ்வப்போது இராணுவத்துக்கு பின்னடைவு ஏற்பட்டு வந்தது. தற்போது முழுவீச்சில் போர் நடந்து வருகிறது.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment