Saturday, July 5, 2008

வங்குரோத்தை வெளிப்படுத்தி நிற்கும் புலிகளின் பாசிசம்

- அகதிதமிழன்

புலிகள் இருப்பதால்தான் தமிழினம் வாழ்கிறது அவர்கள் இருப்பதால்தான் கொஞ்சமேனும் அரசாங்கம் பயப்படுகிறது அவர்கள் இல்லாவிட்டால் தமிழர்களுக்கு எதுவும் கிடையாது ஆகிய வார்த்தைகள் எமது சமூகத்தில் பரவலாக புழக்கத்தில் உள்ளவை. உண்மையில் இந்த வார்த்தைகளுக்கு ஏதாவது அர்த்தம் உள்ளதா?

ஒரு சிறந்த விவசாயியை அறுவடையைக் கொண்டே அளக்கலாம். சிறந்த ஓவியனை ஓவியத்தின் உயிரோட்டத்திலிருந்துதான் அறியலாம். சிறந்த கட்டிட கலைஞனை கட்டிடத்தின் அழகு, விசாலம், வலிமை என்பவற்றை வைத்து அறியலாம்.

அதேபோன்றதுதான் இதுவும். கடந்த 30 வருடங்களாக தமிழர்களுக்கு தமிழீழம் எடுத்துத் தருவதாக கூறி தமிழர்களுக்கு எவையெவை நல்ல சிறந்த அம்சங்களாக இருந்தனவோ அவையெல்லாவற்றையும் அழித்து தலைவர்களையெல்லாம் கொன்றுதள்ளி தமிழர்கள் வாழ்ந்த பூமியின் ஒருபகுதியை உயர்பாதுகாப்பு வலயங்களாக அரச படைகளுக்கு பறிகொடுத்து மிதிவெடி புதையாத இடமே இல்லையென்ற மாதிரி ஊரெல்லாம் மாற்றி சமூகத்தின் ஒரு பகுதியினரை அங்கவீனர்களாக மாற்றி கணவனை இழந்த மனைவியரையும், மனைவியை இழந்த கணவரையும் அநாதரவான குடும்பங்களையும் உருவாக்கி சிங்களப் படையினரை கொண்டுவந்து படலைக்குள்ளும், வளவுக்குள்ளும் நிறுத்திவிட்டு, வந்த உருப்படியான தீர்வுகளையெல்லாம் பாழ்படுத்தி பல்லாயிரக்கணக்கான இளைஞர்களையும், யுவதிகளையும் கொன்றுதள்ளி, பலிகொடுத்து, இணைந்த வடக்கு கிழக்கையும் பிரிபதற்கான ஏதுநிலைகளை உருவாக்கி, எம்முடன் உற்ற சுற்றமாக வாழ்ந்த முஸ்லீம் மக்களை உடுத்த துணியுடன் வெளியேற்றி, தமிழர்களுக்கு தலைவர்களே இல்லா நிலையை உருவாக்கி, மிச்சம் மீதியிருந்த கல்விமான்களையும் கொன்று, அவர்களில் பலர் நாட்டைவிட்டு ஓட வழிவகுத்து, தமிழர்கள் வீதியில் நடமாடும் நிலைமையையும் மட்டுப்படுத்தி, திறந்தவெளி சிறைச்சாலை போன்று தமிழர்கள் தமது பிரதேசங்களில் திட்டுத்திட்டாக வாழும் நிலைமைகளை உருவாக்கி, அகதிகளாக தார்பலின் சீலைகளின் கீழ் பிச்சாப் பாத்திரத்துடன் வாழ வழிசமைத்து, பெருமளவில அகதிகளாக தஞ்சம் புகுந்த அண்டைநாடு தொப்புள் கொடி உறவுடனும் வாழ முடியாமல் அங்கு வன்முறைகளை விதைத்து, உலகில் சந்தேகத்துக்குரிய சமூகம் என்ற நிலைமைகளை உருவாக்கி வைத்திருப்பதைத் தானா இவ்வாறு அர்த்தப்படுத்துகிறார்கள்.

இவையெல்லாம்தான் புலிகள் தமது விடுதலைப் போராட்டப் பாதையில் தமிழர்களுக்கு பெற்றுக்கொடுத்த வாழ்வு. உண்மையில் தமிழ் மக்களின் நலன்களில் அக்கறை கொண்டவர்கள், சுதந்திரமான வாழ்வில் அக்கறை கொண்டவர்கள் இந்த காரியங்களை செய்ய முடியுமா?

ஆயுதங்களை வாங்கி குவித்து சிறுவர்களையும், சிறுமியரையும், இளைஞர்களையும், யுவதிகளையும் ஆயுதபாணிகளாக்கி அதில் ஒரு பகுதியினரை கரும்புலிகள் என்ற பெயரில் வெடிகுண்டுகளாக மாற்றி அவர்கள் எத்தனை ஆயிரம் பேரின் அழிவுக்கு வித்திட்டார்கள். துரோகிகள் என்ற பெயரில் எத்தனை ஆயிரம் தமிழர்கள் அவர்களால் கொல்லப்பட்டார்கள். தமிழர்களின் உழைப்பு, வளங்கள் எல்லாமே இங்கு புலிகளின் அழிச்சாட்டியத்திற்காக வன்பறிப்பு செய்யப்பட்டன.

அண்டை நாட்டையும், பல உலக நாடுகளையும் தமது பலாத்கார நிதி திரட்டலுக்கானதும் ஆயுதங்களை கடத்துவதற்குமான தளங்களாக பாவிக்க முற்பட்டதால் அந்தந்த நாடுகளில் தமிழர்களின் வாழ்வு பெரும் இடையூறுகளுக்கும் அனர்த்தங்களுக்கும் உள்ளாகியது.

உள்ளுரிலும் சரி, உலகளாவிய ரீதியிலும் சரி தமிழர்களுடைய சொத்துக்கள் கலாச்சார நிறுவனங்கள் கோயில்கள், பாடசாலைகள் ஏன் சிவில் நிர்வாகம் கூட சுதந்திரமாக இயங்க முடியவில்லை. அத்தனையின் மீதும் புலிகளின் விரல்கள் இரும்புக் கரங்கள் மறைந்திருந்தன. அரச சார்பற்ற நிறுவனங்கள் மனித உரிமை அமைப்புக்கள் கூட சுதந்திரமாக இயங்க முடியவில்லை. தமிழ் அரசியல் என்பது புலிகளின் முகவர் அரசியலாகவே ஏற்றுக்கொள்ளப்பட்டது. சுதந்திரமான கருத்துடையோர் உடல் மீதியின்றி அழிக்கப்பட்டார்கள்.

ஊடகங்கள் முகவர்களாகவே தொழிற்பட்டனர். மீறி சுதந்திரமாகச் செயற்பட்ட ஊடகவியலாளர்கள், மனித உரிமையாளர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.

பாசிசம் எவ்வாறு சமூகத்தின் அத்தனை வளங்களையும் சூறையாடும், மனிதர்களின் உயிர்களை காவுகொள்ளும், தம்முடன் சேர்த்து ஒரு சமூகத்தையே உடன்கட்டை ஏறச் செய்யும் என்பதற்கு கடந்த 25வருட காலம் புலிகளின் செயற்பாடுகள் புத்தி பேதலிக்காத தமிழர்களுக்கு சிறந்ததொரு அனுபவமாகும்.

வரலாற்றில் இழைக்கப்படும் பாரதூரமான மனிதகுல விரோத தவறுகளுக்காக அந்தத் தவறுகளை இழைத்தவர்கள் ஏதோவொரு கட்டத்தில் பாரிய விலையைச் செலுத்த வேண்டிவரும். அந்த விலையைத்தான் தற்போது புலிகள் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். புலிகள்தான் போராடுகிறார்கள் . அவர்கள் இல்லாவிட்டால் நாதியே இல்லை என்று துதிபாடியதற்காக தமிழர்களும் அதற்கான விலையை செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு பாராதூரமான நோய் பரவுவதற்கு அனுமதித்ததற்காக, அதற்கு உடந்தையாக இருந்ததற்காக இன்று முழுச் சமூகமும் சொல்லொணா துயரங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறது. அழிவின் விளிம்பில் நிறுத்தப்பட்டிருக்கிறது.

பாசிசத்தின் வழியை பின்பற்றியவர்கள் அந்த பாசிச பிதா மகர்களின் மீள முடியாத பாதையில் நின்று கொண்டிருக்கிறார்கள்.

தற்போது தன்னும் எமது சமூகத்தின் கணிசமானவொரு பகுதியினர் விழித்துக் கொள்ளாவிட்டால் இன்னும் ஓரிரு தசாப்தத்தில் தமிழர்களின் வாழ்வு இலங்கையில் என்னவாகும் என்பது நினைத்துப் பார்க்க முடியாததொன்றாகும்.

புலிகளின் பயங்கரவாத பாசிசம் சிங்கள பேரினவாதத்தை போசித்து, வளர்த்து அதுவொரு பலம்பொருந்திய நிறுவனமாவதற்கு வழிவகுத்திருக்கிறது. தென்னிலங்கையில் உள்ள சாதாரண மக்கள் தமிழர்களின் நியாயங்களை சிந்திப்பதற்கான கதவுகளை அது அடைத்து விட்டிருக்கிறது. அன்றாடம் சாதாரண மக்களின் மீதான தாக்குதல்களை இலக்காக கொள்ளலாம் என்பதை ஜனரஞ்சகப்படுத்தியதும் புலிகளே.

புலிகள் இந்த லட்சணத்தில் இருக்கும் பொழுது புலிகளுடன் அமர்ந்து பேசுமாறு கோர எந்த நாடும் முன்வரப் போவதில்லை. எந்தவொரு ஆக்கபூர்வமான தீர்வு ஆலோசனைகளையும் முன் வைப்பதில் அவர்கள் தயக்கம் காட்டுவார்கள். ஏந்த ஆக்கபூர்வமான செயற்பாட்டையும் புலிகள் நிராகரிப்பவர்கள். அவற்றை முன்மொழிபவர்களையே அவமானப்படுத்துபவர்கள் அல்லது அவர்களின் உயிருக்கும் உலைவைப்பவர்கள். உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்வது புலிகளின் பிரதான இயல்புகளில் ஒன்று.

ஆக புலிகள் இயக்கத்தினுள் கூட பிரபாகரனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் விசுவாசமானவர்கள் நெருக்கமானவர்கள் தவிர மற்றெல்லோரும் சந்தேகத்துக்குரியவர்கள். உயிர் வாழ்வதற்குரிய தகுதியை மிகவும் குறைவாக கொண்டவர்கள்.

தமிழர்களின் உரிமை போராட்டத்தின் பெயரில் பிரபாகர பாசிச மையத்தை பலப்படுத்தும் செயற்பாடே கடந்த கால்நூற்றாண்டுகளில் மேற்கொள்ளப்பட்டு வந்தது. விஷத்தை பால் என்று நம்பி உள்ளுரிலும் , உலகத்திலும் வாழும் தமிழர்களில் ஒரு பகுதியினர் கிறங்கிக் கிடக்கிறார்கள். ஜனநாயக சூழலில் வாழும் அண்டைநாட்டு சர்வதேச பினாமிகள் கூட தன்னனலம் கருதுதியும் இன்னுமொரு பகுதியினர் அறியாத் தனத்திலும் புலிகளின் பாசிசத்தில் புரையேறிப்போய் கிடக்கிறார்கள்.

தமிழர்களின் வாழ்வு சுதந்திரத்தை நோக்கிச் செல்லவில்லை. அவை மிக மோசமான தனிமைபடுதலை நோக்கிச் செல்கிறது., போக்கிடமற்ற நிலையை நோக்கிச் செல்கிறது. ஏற்கனவே பலதும் நிகழ்ந்து விட்டன என்பதை புரியாதவர்களாக மிச்சமீதி உள்ளவர்களும் வாழ்ந்தால் அதுவொரு சமூகத் தற்கொலையாகும்.

புலிகளின் பாசிச நலனையொட்டி இன்று உலகம் முழுவதும் பின்னப்பட்டுள்ள மாயவலை தகர்க்கப்பட வேண்டும். அதன் நலன் சார்ந்து உருவாக்கப்பட்ட பாசிச பொருளாதார கட்டமைப்பு நிர்மூலம் செய்யப்பட வேண்டும். உள்ளுர் தமிழர்கள் மீதும், உலகத் தமிழர்கள் மீதும் இறுக்கப்பட்டுள்ள இரும்புப் பிடி அகற்றப்பட வேண்டும். அவர்கள் பயத்தில் இருந்து விடுபட வேண்டும். இதுதான் தமிழர்களின் சுதந்திரத்திற்கான, விமோசனத்துக்கான முதல் அடி வைப்பாக அமையும்.

அப்போதுதான் உலக நாடுகள் இநதியா உட்பட ஈழத் தமிழர்களின் தார்மீக கோரிக்கைகளுக்கு பங்களிக்க முன்வர முடியும். மற்றும்படி எதையும் செய்ய முடியாது என்பதையே யதார்த்தமாகும். அவ்வாறு செய்வதானது நல்லதோர் வீணை செய்து அதனை நலங்கெட புழுதியில் எறியும் செயற்பாடாகவே அமையும்.

தமிழ்நியூஸ்வெப்

3 comments:

Anonymous said...

ஒருவன் தாழ்ந்தால் ஏறி மிதிப்பது எமது தழிழினம் மட்டும்தான், புலிகள் இல்லை எண்றால் , யார் உங்களுடனா சமாதானம் கதைப்பது, 22,000 மாவீரரை இழந்து இருக்கிறோம், அவர்கள் ஆத்மா உங்களை மண்னிக்குமா? நீரும் , ஒரு தழிழனா? உதவி செய்யாவிடினும் பரவாயில்லை , உபத்திரவம் செய்யாம்ல் இரும்ஜயா

Anonymous said...

ஒருவன் தாழ்ந்தால் ஏறி மிதிப்பது எமது தழிழினம் மட்டும்தான், புலிகள் இல்லை எண்றால் , யார் உங்களுடனா சமாதானம் கதைப்பது, 22,000 மாவீரரை இழந்து இருக்கிறோம், அவர்கள் ஆத்மா உங்களை மண்னிக்குமா? நீரும் , ஒரு தழிழனா? உதவி செய்யாவிடினும் பரவாயில்லை , உபத்திரவம் செய்யாம்ல் இரும்ஜயா

Orukanani said...

உமது இலவச ஆலோசனைக்கு நன்றி. இந்த ஆலோசனையை இதனை எழுதிய இணையதளத்திற்கு தெரிவிக்கவும். ஒரு கணணிக்கு எழுதி எதுவித பிரயோஜனமுமில்லை.

நன்றி
ஒருகணணி