Monday, August 4, 2008

புலிகளுக்கு 54 வீத ஆதரவுள்ள தமிழகத்தில் நடந்த 'மாபெரும்" பேரணி

தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் தமிழீழக் கோரிக்கைக்கு ஐம்பத்திநான்கு வீதமான தமிழக மக்கள் ஆதரவு என்ற ஆனந்தவிகடனின் கருத்துக்கணிப்பு வந்த அந்த சஞ்சிகையின் விற்பனை முடிந்துவிடாத நிலையில், சென்னையில் நடைபெற்ற ஒரு ஈழ ஆதரவு பேரணியில் கலந்துகொண்டவர்கள் தொகை வெறும் முன்னூறைத் தாண்டாது. அதிலும் பேச்சாளர்களாக அழைக்கப்பட்டிருந்தவர்கள் சுமார் நூறு பேர். சிறிலங்கா அரசுக்கு ஆயுத உதவி செய்யும் இந்திய மத்திய அரசைக்கண்டித்து அனைத்துக்கட்சி, அனைத்து தமிழ்அமைப்புக்கள் சார்பில் இந்தப் போரணி நடாத்தப்பட்டிருந்தது.

முன்னதாக, கடந்த மாதம் 11 ஆம் நாள் சென்னையில் அனைத்துக் கட்சிகள் அனைத்து தமிழ் அமைப்புக்கள் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் முடிவில் சென்னையில் இந்திய அரசைக் கண்டித்துப் ஆகஸ்ட் 3ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பேரணி நடத்துவதென தீர்மானிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. ஆனால் சென்னை மாநகர காவல்துறை ஆணையாளர் பேரணி நடைபெறவிருந்த நாளுக்கு முதல் நாள் சனி இரவு, பேரணி தொடங்குவதாக இருந்த சென்னை பெரியார் சிலைக்குப் பதிலாக சென்னை சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டத்தை நடத்தலாம் என அறிவித்தார்.

அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு, சுவரொட்டிகள் மூலமாக பரப்புரைகளும் செய்யப்பட்ட நிலையில் இந்த திடீர் மாற்றத்தினை காவல்துறை அறிவித்தது அநியாயமானதுதான். அவசர அவசரமாக மீண்டும் அனைவருக்கும் செய்திகள் பரிமாறப்பட்ட நிலையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3:00 மணியிலிருந்தே சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் விடுதியின் முன் பெருந்திரளாக அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த தொண்டர்கள் கூடத் தொடங்கினர்.

செய்தி அறியாத பல தொண்டர்கள் பெரியார் சிலைக்கு சென்று விட்டு பின்னர் அங்கிருந்து சேப்பாக்கத்திற்கு வந்து சேர்ந்தனர். ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்தைச் சுற்றிலும் பாதுகாப்பிற்காகப் பெருமளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.சரியாக பிற்பகல் 4:00 மணிக்கு ஆர்ப்பாட்டம் தொடங்கியது. தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தியாகு முழக்கங்கள் எழுப்ப, தொடர்ந்து தலைவர்களும் குழுமியிருந்த தொண்டர்களும் உணர்ச்சியோடு முழக்கம் எழுப்பினர்.

கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் பலர் புலிகளிடம் மாத சம்பளம்பெற்றுவருபவர்கள். அவர்கள் தமக்கு கிடைக்கின்ற சம்பளத்திற்காக வேலைசெய்வதால் இதுபோன்ற பேரணிகளில் கலந்துகொண்டே ஆகவேண்டும். மற்றயவர்கள் அப்பாவிகள். தமிழ் உணர்வாளர்கள். பேரணியிலும் கூட்டத்திலும் கலந்துகொண்ட இந்த தமிழர்களிடத்தில்தான் ஆனந்தவிகடன் கருத்துக்கணிப்பு நடாத்தியதோ தெரியவில்லை.

தேணி இணைய‌ம்

No comments: