பொலிஸ் வாகன சோதனையில் சிக்கிய இலங்கையைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை விநியோகம் செய்வதில் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அண்மையில் பெங்களூர், அகமதாபாத் ஆகிய இடங்களில் தீவிரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பு சம்பவங்களையடுத்து தமிழ் நாட்டில் பொலிஸார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். தீவிர வாகன சோதனை, தங்கும் விடுதிகளில் அதிரடி சோதனை, கண்காணிப்பை பலப்படுத்துதல் என அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டதன் பயனாக விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த சிலர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், சென்னை நகர பொலிஸ் ஆணையர் சேகர் உத்தரவின் பேரில், பொலிஸார் பல்வேறு இடங்களில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர். இதன் ஒருபகுதியாக வெள்ளிக்கிழமை திருமங்கலம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் பொலிஸார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, வேகமாக வந்த ஒரு டாடா சுமோ காரை நிறுத்தி பொலிஸார் சோதனையிட்டனர். அந்தக் காரில் 6 பேர் இருந்தனர்.
அவர்களிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் அந்த 6 பேரும் இலங்கைத் தமிழர்கள் என்பது தெரியவந்தது. அவர்களில் செல்வம், பிரதீபம், அருள்தாஸ் ஆகிய 3 பேரும் புழலையடுத்த காவாங்கரை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. தினேஷ்குமார், சால் ஆகிய 2 பேர் செங்குன்றத்தையடுத்த வடகரை என்னும் இடத்தில் வசித்து வருபவரென்பதும் தகவல் விசாரணையில் வெளியானது. இவர்கள் 5 பேரும் அண்ணாநகர் பகுதியிலுள்ள திருமங்கலம் வசந்தம் கொலனியில் வசிக்கும் தனுஷன் என்ற தங்களது நண்பரை அந்தக் காரில் அழைத்துக் கொண்டு வந்ததாக பொலிஸிடம் தெரிவித்தனர்.
ஒரே காரில் இரவு நேரத்தில் எங்கே செல்கிறீர்கள் என்று பொலிஸார் கேட்ட போது, நண்பர்களாகிய நாங்கள், அடிக்கடி இப்படிக் காரில் ஜாலியாக சுற்றுவது வழக்கம் என்று தெரிவித்தனர். அவர்கள் தெரிவித்த விபரங்களில் திருப்தியடையாத பொலிஸார் சந்தேகப்பட்டு காரை தீவிரமாகச் சோதனையிட்டனர். அப்போது காரில் ஒரு நம்பர் தகடு கிடைத்தது. அதில் வேறு ஒரு பதிவு எண் இருந்ததை கண்ட பொலிஸார் அது பற்றி கேட்டனர். தங்களது காரில் இருந்த நம்பர் தகடு பழையதாகி உரிந்துவிட்டதால் புதிய தகட்டை பொருத்த இதை எடுத்து செல்வதாக அவர்கள் கூறினார்கள். காருக்குள் கிடந்த நம்பர் தகட்டை சோதனையிட்டதில் அது வேறு வாகனத்தின் பதிவு எண் என்பது தெரிந்தது.
இதையடுத்து பொலிஸாரின் சந்தேகம் மேலும் வலுவடைந்தது. உடனடியாக அவர்கள் 6 பேரையும் கைது செய்த பொலிஸார் விடிய விடிய அவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். அவர்கள் வைத்திருந்த செல்போன்களை வாங்கி, யார் யாருடன் தொடர்பு கொண்டுள்ளார்கள் என்பதை சோதனையிட்டனர். இவர்களுக்கு விடுதலைப் புலிகளுடன் தொடர்பு உள்ளதா, ஆயுத விநியோகத்தில் சம்பந்தப்பட்டவர்களா என பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அகதிகள் முகாமில் இருந்த இலங்கைத் தமிழர்கள் அங்கிருந்து இரவு நேரத்தில் எப்படி வெளியேறினார்கள் என்பது பற்றியும் பொலிஸார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment