போலி கடவுச்சீட்டு மூலம் மலேசியாவில் இருந்து சென்னை வந்து கடந்த எட்டு ஆண்டுகளாக தங்கியிருந்த இலங்கை நபரை பொலிஸார் கைதுசெய்தனர். கைதானவர் விடுதலைப் புலிகளின் கூட்டாளியா என்று விசாரித்து வருகின்றனர்.
பெங்களூர் மற்றும் அகமதாபாத் ஆகிய இடங்களில் அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்பைத் தொடர்ந்து சென்னை நகரில் உள்ள விடுதிகள் மற்றும் வாகனங்களை சோதனை செய்யும்படி பொலிஸ் ஆணையாளர் சேகர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை, அயனாவரம் சாமி பக்தன் தெருவில் பி.கே.எஸ்.மேன்சனில் வெளியாட்கள் யாராவது தங்கியுள்ளார்களா என்று தலைமைச் செயலகப் பொலிஸார் சோதனை செய்தனர். அங்கு தங்கியிருந்த சூரியகுமார் என்பவரிடம் விசாரித்ததில் மதுரை கோரிப்பாளையத்தைச் சேர்ந்தவர் என்றும் சென்னையில் கடந்த நான்காண்டுகளாக தங்கியதால் முகவரி சரியாகத் தெரியாது என்று கூறியது பொலிஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதுபோல் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் பொலிஸாருக்கு மேலும் சந்தேகம் ஏற்பட்டது.
தீவிரமாக விசாரித்ததில் "நான் இலங்கையைச் சேர்ந்தவன். 1992 ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து முகவர் மூலம் சுற்றுலா விசாவில் சிங்கப்பூருக்குப் சென்றேன். அங்கு மூன்று மாதம் கழித்து மலேசியா சென்றேன். மலேசியா முகாமில் என்னை அடைத்து வைத்தனர். அங்கிருந்து கடந்த 2001 ஆம் ஆண்டு தப்பி போலிக் கடவுச்சீட்டு மூலம் சென்னை திருவல்லிக்கேணியில் தங்கியுள்ளேன். சென்ட்ரல் மற்றும் வால்டாக்ஸ் சாலையில் உள்ள ஹோட்டல்களில் சிறிது நாட்கள் பணிபுரிந்தேன். பின்னர் பார்டர் தோட்டம் முருகவிலாஸ் ஹோட்டலில் ஓராண்டாக பரோட்டா மாஸ்டராக பணிபுரிந்து வருகிறேன்' என்றார்.
சூரியகுமாரை பொலிஸார் கைதுசெய்து சென்னையில் தங்கியிருந்து சதிவேலைகளில் ஈடுபட்டாரா என்றும் விடுதலைப் புலிகளின் கூட்டாளியாக செயல்பட்டாரா என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment