Thursday, August 7, 2008

கொழுந்து பறித்துக் கொண்டிருந்த பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சி

எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளர் வேலை நிறுத்தம்
தேயிலைக் கொழுந்து பறிக்கும் இளம் பெண் தொழிலாளி ஒருவர் மீது தேயிலைச் செடியினுள் வைத்து பாலியல் வல்லுறவு மேற்கொள்ள இளைஞர் ஒருவர் மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டது.

இச் சம்பவம் நேற்று புதன்கிழமை காலை பண்டாரவளை நாயபெத்த தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

வழமைபோல பெண் தொழிலாளர்கள் தேயிலைக் கொழுந்து பறிக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த போது அங்குள்ள தேயிலைச் செடிகளுக்குள் மறைந்திருந்த கிராமப்புற இளைஞர் ஒருவர் தனிமையான இடத்தில் தொழில் செய்த இப்பெண் மீது குற்றம் புரிய முயன்றுள்ளார்.

இதனையடுத்து அப்பெண் எழுப்பிய கூக்குரலால் அவ்விடத்துக்கு ஏனைய தொழிலாளர்கள் ஓடி வந்ததும், இவ்விளைஞன் தனது முயற்சியைக் கைவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

தொழிலாளர்கள் அவ்விளைஞனை பிடிக்க முயன்றும் அது பலனளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து பண்டாரவளை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

சந்தேக நபரை கைது செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பண்டாரவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமய கே.இரட்னாயக்க தெரிவித்தார்.

இதேவேளை, இச் சம்பவத்தைக் கண்டித்தும், தமது தொழிலுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கப்படவேண்டும் எனவும், சந்தேக நபரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் கோரியும் நேற்று இத்தோட்டத்தின் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

No comments: