Thursday, August 7, 2008

புலிகளை தோல்வியடையச் செய்தால் மட்டுமே மக்கள் உண்மையான சுதந்திரத்தை பெறமுடியும்

புலிகளைத் தோல்வியடையச் செய்வதன் மூலமே இந்நாட்டு மக்கள் உண்மையான சுதந்திரத்தை பெறமுடியும் என்பதுடன் மக்களுக்கான உரிய ஜனநாயகத்தைப்பெற்றுக் கொடுக்க முடியும் என்று ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் நந்தன குணதிலக தெரிவித்துள்ளார்.

நேற்று புதன்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அவசரகாலச் சட்ட பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

புலிகளை முழுமையாகத் தோற்கடிக்க அரசு விரும்பினால் வெள்ளைவான் கலாசாரம் மற்றும் கடத்தல் சம்பவங்கள் கப்பங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இதற்கான முழுப்பொறுப்பையும் அரசாங்கமே ஏற்கவேண்டும்.

புலிகளை ஒழிக்க வேண்டும் என்று நாம் கூறினால் மாத்திரம் போதாது அவர்களுக்கு உதவி செய்பவர்கள் சற்றுச் சிந்திக்க வேண்டியது அவசியமாகும்.

தற்போது பயங்கரவாதிகளை தோற்கடிக்கும் தருணம் வந்துவிட்டது. இதற்கமைய எமது படையினரும் வெற்றிகொண்டு, முன்னேறி வருகின்றனர். புலிகளை யுத்த ரீதியாகவே தோல்வியடையச் செய்யவேண்டும். மக்களுக்கான ஜனநாயகத்தை துரிதகதியில் பெற்றுக்கொடுக்க வேண்டும்.

இந்நாட்டை புலிகளிடமிருந்தும், ஏகாதிபத்தியவாதிகளிடமிருந்தும் மீட்டெடுக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்பதுடன் மக்களையும் பாதுகாக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

No comments: