இலங்கையிலிருந்து அகதிகளாக வருபவர்களில் பெரும்பாலானவர்கள் ஆயுதப் பயிற்சிப் பெற்றிருப்பது தெரியவந்துள்ளதால், இவர்கள் புலிகள் இயக்கத்தில் தொடர்புடையவர்களா? என்ற குழப்பம் கியூ பிரிவினருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, அகதிகள் அனைவரையும் தீவிரமாகக் கண்காணிக்க உளவுப் போலீசார் முடிவு செய்துள்ளனர்.இலங்கை ராணுவத்துக்கும், புலிகளுக்கும் இடையே நடந்து வரும் உச்சக்கட்டப் போரினால், வாழ வழியில்லாத நிலையில் ஏராளமான அகதிகள் தமிழகத்துக்கு வந்துகொண்டிருக்கின்றனர். 2006ம் ஆண்டு முதல் இதுவரை 22 ஆயிரத்து 350 அகதிகள் வந்துள்ளனர். இவர்களில் அகதிகள் போர்வையில் வந்த புலிகள் அமைப்பைச் சேர்ந்த 42 பேரை விசாரணை மூலம் கியூ பிரிவு போலீசார் கண்டறிந்து, செங்கல்பட்டு சிறப்பு முகாமுக்கு ஏற்கனவே மாற்றியுள்ளனர்.
அகதிகள் தமிழகம் வரும்போது கட்டணமாக அதிகபட்சமாகத் தலா ரூ.25 ஆயிரம் வரை இலங்கைப் படகோட்டிகளுக்குக் கொடுக்கின்றனர். ஒரு படகில் கூடுதலாக 15 அகதிகள் வரை வந்து கரையிறங்குகின்றனர். இலங்கையில் கூலி வேலை செய்து வருவதாகக் கூறும் இவர்கள், படகுக் கட்டணமாக ரூ. பல ஆயிரங்களைச் சேமித்தது எப்படி என்ற கேள்விக்கு இதுவரை விடையில்லை. அதே போன்று, தமிழக முகாம்களில் இருந்து இலங்கைக்குத் திரும்பிச் செல்லும் அகதிகளை, அதிகாரிகள் காரணம் கேட்டுத் தடுத்து நிறுத்துவதும் இல்லை.
தமிழக முகாம்களில் அகதிகளுக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டதால் அகதிகள் போர்வையில் பயிற்சி பெற்ற புலிகள் இலங்கைக்குப் பொருட்களை சர்வ சாதாரணமாகக் கடத்திச் செல்கின்றனர். பிடிபடும் கடத்தல்காரர்களில் பெரும்பாலானோர் அகதிகள் என்பது தெரிய வந்ததால், அதிர்ச்சியடைந்த உளவுப் பிரிவினர் தங்கள் விசாரணையை விரிவுபடுத்தியபோது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.
கடந்த சில நாட்களுக்கு முன் பிடிபட்ட அகதி நவீன் என்பவர், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் 10 ஆண்டுகள் பணியாற்றி, அவர்களுக்குத் தேவையான பொருட்களைக் கடத்தி வருவதற்காக தமிழகத்துக்கு அகதியாக வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவருடன் தொடர்புடைய அகதிகள் பலர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து முகாம்களில் நடத்தப்பட்ட ஆய்வில், சமீபத்தில் தமிழகத்துக்கு வந்த ஏராளமான அகதிகள், தற்காப்பு என்ற பெயரில் ஆயுதப் பயிற்சிப் பெற்றிருப்பது உளவுப் பிரிவுப் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இலங்கையில் 25 வயதுக்குட்பட்டவர்களுக்கு, இலங்கை ராணுவம் தாக்கினால் எப்படித் தற்காத்துக் கொள்வது, விமானத் தாக்குதலில் இருந்து எப்படித் தப்புவது போன்ற பயிற்சிகளை புலிகள் அளித்துள்ளதாக கூறப்பட்டபோதும். இதில் ஆர்வம் காட்டும் இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற பயிற்சி பெற்ற இளைஞர்கள் ஆயிரத்துக்கும் அதிகமான எண்ணிக்கையில் அகதிகளாகத் தமிழகத்தில் பல்வேறு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களா? அல்லது அவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பவர்களா? என்ற குழப்பம் உளவுப் பிரிவினருக்கு ஏற்பட்டுள்ளது. இலங்கைக்குப் பொருட்களைக் கடத்துவதில் இவர்களின் ஆதிக்கம் அதிக அளவில் இருப்பதால் ஆயுதப் பயிற்சிப் பெற்ற அனைவரையும் செங்கல்பட்டு முகாமுக்கு மாற்ற வேண்டும் என்றும் உளவுப் பிரிவினர், அரசுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment