Monday, August 18, 2008

வன்னிப்புகைப்படங்களை இஸ்ரேல் ""ஒபெக் செய்மதிப்பிரிவு' றோ அமைப்புக்கு வழங்கியது

கடந்த வாரம் சிங்கப்பூரிலிருந்து வெளியாகும் பிரபல ஆங்கில நாளேடாகிய ""ஸ்ரேற் ரைம்ஸ்' (State Times) செய்தித்தாள் சார்பில் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் செவ்வி காணப்பட்ட போது பத்திரிகையாளர் ஸ்ரீலங்காவில் தற்போது அரசபடையினருக்கும் புலிகள் இயக்கத்தினருக்குமிடையே வன்னியில் நடந்துகொண்டிருக்கும் யுத்தம் பற்றியும் எதிர்பார்க்கப்படக்கூடிய யுத்த விளைவு பற்றியும் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் இந்திய பாதுகாப்பு ஆய்வு அமைப்பாகிய ""றோ' அதன் அறிக்கையில் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் தொடர்ந்து யுத்தம் செய்ய முடியாத நிலையில் இருப்பதாக அறிவித்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், ""றோ' அமைப்பு இந்தப் பாதுகாப்பு நிலைமை ஆய்வை பாதுகாப்புத் தகவல்களின் அடிப்படையில் மட்டும் செய்யவில்லை எனவும் ஸ்ரீலங்கா இராணுவப் படையணிகள் புலிகள் இயக்கத்தின் பலக்கோட்டைகள் எனக்கருதப்படும் கிளிநொச்சி, முல்லைத்தீவு பிரதேசங்களுக்குள் பிரவேசித்து கேந்திரப் பகுதிகளில் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதைக் காட்டும் செய்மதிப் புகைப்படங்கள் ""றோ' அமைப்புக்குக் கிடைத்துள்ளதாகவும் அத்துடன் புதுடில்லியில் அமைந்துள்ள ""றோ' தலைமை அலுவலகத்தில் பாதுகாப்பு புலனாய்வுகளை மேற்கொள்ளுவதற்காகப் பொருத்தப்பட்டுள்ள அதிநவீன தொழில்நுட்பங்கள் கொண்ட ஆயுதக்கருவிகள், உபகரணங்கள் மூலம் கிளிநொச்சி முல்லைத்தீவு களநிலைமை அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வன்னியில் அரசபடையினருக்கும் புலிகள் இயக்கத்தினருக்கும் கேந்திரப் பகுதிகளில் நிகழ்ந்துகொண்டிருக்கும் யுத்தம் மற்றும் அரசபடையினர் வன்னிக்குள் முன்னேறித் தற்போது நிலைகொண்டுள்ள கேந்திரப் பகுதிகள் ஆகியவற்றைக் காட்டும் செய்மதிப் புகைப்படங்கள் இஸ்ரேலின் அதிஉயர் தொழில்நுட்பங்கள் கொண்ட ""ஒபெக்' செய்மதி மூலம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்தப் புகைப்படங்களை ""ஒபேக்' செய்மதிச் செயற்பாட்டுப் பாதுகாப்புப் பிரிவு அண்மையில் இந்திய அரச பாதுகாப்புப் புலனாய்வு அமைப்பு ""றோ'வுக்கு வழங்கியுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழமையான பாதுகாப்புத் தகவல்களுக்கு அப்பால் ""றோ' அதன் உயர்தொழில்நுட்பக் கருவிகள் மூலம் பெற்ற புகைப்படங்கள் மற்றும் முக்கியமாக இஸ்ரேலின் ""ஒபெக்' செய்மதி வழங்கிய புகைப்படங்கள் பெற்ற தகவல்களின் அடிப்படையிலேயே இவ்வாறு பிரபாகரன் தொடர்ந்தும் யுத்தம் செய்யமுடியாத நிலையில் முடங்கிவிட்டதாக ""றோ' அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஆதாரபூர்வமான ""றோ'வின் இந்த அறிக்கை காரணமாகவே அண்மையில் இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் மேற்படி சிங்கப்பூர் ""ஸ்ரேற் ரைம்ஸ்' பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் புலிகள் இயக்கம் பலமிழந்துவிட்டது என்று உறுதியாகத் தெரிவித்தார். இந்தக் கூற்றுக்கு ஆதாரமாக அவர் தெரிவித்த ஏனைய காரணங்களில் புலிகள் இயக்கம் ஆயுதங்களைக் கடத்த முடியாத வகையில் இறுக்கமான பாதுகாப்பு நடவடிக்கைகள் கடற்பிராந்தியங்களில் ஸ்ரீலங்கா கடற்படையினராலும் இந்தியக் கடற்படையினராலும் எடுக்கப்பட்டிருப்பதும் புலிகள் இயக்கம் பலமிழந்துபோய்விட்டதற்குக் குறிப்பிடும்படியான காரணம் எனக் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், பிரபாகரனின் புலிகள் இயக்கம் பலமிழந்துவிட்டது என்பதை இந்தியப் பாதுகாப்புப் புலனாய்வு அமைப்பாகிய ""றோ' அமைப்பும் இந்திய பாதுகாப்புத்துறை உயர்அதிகாரி ஒருவரும் வெளிப்படையாகக் கூறியிருப்பதும், ஏற்றுக்கொண்டிருப்பதும் இதுவே முதல் தடவையாகும்.

திவயின விமர்சனம் 17/08/2008

No comments: