சவுதி அரேபியா, ரியாத்துக்கு பிழைப்புத் தேடிப்போன 100 தமிழர்கள் - சம்பளம் கிடைக்கமால், சாப்பிட வழியில்லாமல், சிறைக் கம்பிகளுக்குள் 5 சக தோழர்களை உட்கார வைத்துவிட்டு தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
யாராவது உதவி செய்ய மாட்டார்களா? என்று ஏங்கித் தவிக்கின்றனர் - அந்த அப்பாவி மனிதர்கள். சிந்திய வியர்வைக்கு ஊதியமும், சிக்கல் இல்லமால் தாயகப் பயணமும் கிடைத்துவிடுமா? என்று கண்ணீர் சுமக்கும் கடித வரிகளை தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கு அனுப்பி இருக்கிறார்கள்.
அவர்கள் அனுப்பிய கடிதம் இங்கே:
மாண்புமிகு முதல்வர் ஐயா அவர்களுக்கு!
உங்கள் மீது கடவுளின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக
நாங்கள் சவூதி அரேபியா, ரியாத்தில் தனியார் நிறுவனத்தில் கடந்த சில ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறோம். இந்த நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள் குறிப்பாக பல நூறு இந்தியர்கள் அதில் 100-க்கும் மேற்பட்ட தமிழர்கள்.
AL-Wagaiah co, Ltd., AL-Omerini co, and AL-Faiq - என்ற மூன்று பெயர்களில் செயல்படும் இந்த நிறுவனங்கள் ஒவ்வொரு நிறுவனத்தின் பெயரில் மோசடிகளை செய்து விட்டு வெவ்வேறு பெயர்களில் இந்த 3 நிறுவனங்களையும் உருவாக்கிக் கொண்டனர்
நாங்கள் பணியாற்றிய நிறுவனத்தில் கடந்த 8 மாதங்களாக வேலை செய்யும் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்கவில்லை. நிறுவனம் மூடப்படும் மற்றும் சம்பளம் கொடுக்க முடியாத நிலையில் எங்களுக்கு கொடுக்க வேண்டிய சம்பள பாக்கிகளை கொடுத்து எங்களது தாய் நாடடிற்கு அனுப்பி வையுங்கள் என்று பல முறை கேட்டு வந்தோம். நிர்வாகம் எங்களது எந்த கோரிக்கையையும் ஏற்றுக் கொள்ளவில்லை.
பல மாதங்களாக உண்ண உணவின்றி, இருக்க இடமின்றி சொல்லிலடங்கா துயரங்களை சந்தித்து வருகிறோம். இந்நிலையில் பாதிக்கப்பபட்டுள்ள இந்தியாவைச் சேர்ந்த 28 பேர் கொண்ட ஒரு குழுவாக கடந்த 24/01/2008 அன்று இந்திய தூதரகத்தில் எங்களது நிலைமையை விளக்கி மனுக் கொடுத்தோம் அதன் கோப்பு எண்: File No: riy/cw/235/6/2007(18).
அதற்கிடையில் நாங்கள் பல முறை நிர்வாகத்திடம் எங்களுக்கு சேரவேண்டிய சம்பளத்தை கொடுத்து எங்களை தாயகத்திற்கு அனுப்பி வைக்கும்படி கெஞ்சி மன்றாடி வந்தோம். கடந்த வாரம் 27-ம் தேதி நிர்வாகத்தின் பதிலை கேட்கச் சென்றோம். எங்கள் குழுவில் நிர்வாகத்திடம் நீதி கேட்டு எங்களை வழி நடத்தி வந்த 5 பேரை சவுதி குடியுரிமை காவலாளிகளை வைத்து கைது செய்து சிறைக் கொட்டடியில் அடைத்து விட்டார்கள்.
மீதி உள்ள எங்களை மிரட்டி ‘உங்களுக்கும் இதே கதிதான்; உங்களது பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை சவுதி குடியுரிமை அமைச்சகத்தில் ஒப்படைத்து விட்டோம்’ என்று மிரட்டி அனுப்பி விட்டார்கள். வேறு வழியின்றி மீண்டும் நேற்று 30.03.2008 அன்று இந்தியத் தூதரகம் சென்று எங்களுக்கு உதவிட கையேந்தினோம். தூதரகத்தில் எங்களுக்கு 6 மாதம் செல்லத்தக்க அனுமதி பேப்பர் மட்டும் வழங்கி இதை வைத்து நீங்கள் நடமாடிக் கொள்ளுங்கள் என்று அனுப்பி விட்டார்கள்.
எந்தக் குற்றமும் செய்யாத நீதி கேட்ட ஒரே காரணத்திற்காக சிறைவாசம் அனுபவித்து வரும் எங்கள் நண்பர்களை விடுவிக்கவும், உண்ண உணவின்றி வேறு வழி தெரியாமல் பரிதவிக்கும் எங்களுக்கு உதவிடவும் மாண்புமிகு முதல்வர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் தலையிட்டு எங்களுக்கு வரவேண்டிய சம்பள பாக்கிகள் கிடைத்து தாயகம் திரும்பி வர இந்தியத் தூதரகக்தின் மூலம் துரித ஏற்பாடு செய்ய ஆவண செய்யும்படி உங்களை பணிவன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
நிறுவன முகவரி
AL-WAGAIAH CO, LTD.,
Sponsor Name: Osman Abdul Aziz Al-Omairini
CR No: - 66210, Post Box 91681, Riyadh11643
Phone : +966 1 2415202, Fax +966 1 2422201Sponsor Cell no: Mr. Ali Abdul Aziz 00966 504429661, Mr. Ashraf al jindi 00966 505848277
எங்களை தொடர்பு கொள்ள :
கந்தசாமி +966 556282148
முகைதீன் +966 508623067
முஹம்மது மீரா 00966 557048978
இப்படிக்கு
உங்கள் உதவியை நாடி நிற்கும் பாதிக்கப்பட்ட இந்தியர்கள்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment