புலிகள் இயக்கத்தின் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் சிவசங்கர் கடந்த 30 ஆம் திகதி அவருடைய இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கிழக்கு பிரதேசத்தை மீட்டெடுப்பதற்காக புலிகள் இயக்கத்தின் ஜெயந்தன் படையணி தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழர்களிடையே புலிகள் இயக்கம் பற்றிப் பிரசாரம் செய்வதில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் மேற்படி பொட்டு அம்மானின் இணையத் தளத்தில் அவருடைய அறிக்கை வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து அந் நாடுகளில் வாழும் தமிழர் தரப்பில் கூறப்பட்டு வரும் கருத்துகளுக்கேற்ப இவ்வாறு கிழக்கு மாகாணத்தை மீட்கத் தயாராகியிருக்கும் ஜெயந்தன் படையணி கிழக்குப் பிரதேசம் அரச படையினரால் கைப்பற்றப்பட்ட வேளையிலும் அதற்குப் பின்னரும் இத்தனை காலம் என்ன செய்து கொண்டிருந்தது என்று கேள்வி கிளம்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னர் கிழக்கு மாகாணத்தில் புலிகளின் யுத்த நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாகச் செயற்பட்ட விசேட படையணிகள் அரச படையினரின் தீவிர தாக்குதல்களுக்கு முகம் கொடுக்க முடியாமல் வன்னிக்குத் தப்பியோடியதுடன், விசேட படையணிகளுக்குத் தலைமை தாங்கிய கீர்த்தி எனப்படும் தலைவரும் வன்னிக்கு தப்பியோடினார். தற்போது இந்த கீர்த்தியின் தலைமையில் ஒரு குழுவினரை கிழக்குப் பிரதேசங்களுக்கு அனுப்பவும் அங்கு முக்கிய பகுதிகளில் மர்மத் தாக்குதல்களை மேற்கொள்ளுவதன் மூலம் கிழக்கு மாகாணத்தில் குழப்பநிலையை உருவாக்கவும் புலிகள் இயக்கம் திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இவ்வாறான திட்டத்தின் அடிப்படையிலேயே புலிகள் இயக்கத்தின் மேற்படி பொட்டு அம்மானின் ஐரோப்பிய இணையத்தளத்தில் கடந்த 30 ஆம் திகதி அவர் கிழக்குமாகாண நடவடிக்கை பற்றித் தெரிவித்துள்ளார். இதில் மேலும் கூறப்பட்டிருக்கும் தகவல்களில் வன்னியிலுள்ள புலிகள் இயக்கத்தின் தலைமைத்துவம் கிழக்கு பிரதேசத்தில் மீண்டும் தாக்குதல் நடவடிக்கைகளை ஆரம்பிக்கும்படியும் இழந்த கிழக்குப் பிரதேசங்களை மீண்டும் கைப்பற்றும்படியும் இதுவரையில் கட்டளையிடவில்லை என குறித்த விசேட ஜெயந்தன் படையணித் தலைவர்கள் தெரிவித்திருப்பதாகவும், தலைவர் பிரபாகரனின் கட்டளை கிடைத்தவுடன் ஜெயந்தன் படையணியினர் கிழக்குப் பிரதேசத்தில் பிரவேசித்து அரச படையினருக்கும் பிள்ளையான் குழுவினருக்கும் எதிரான தீவிர தாக்குதல்களை ஆரம்பிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது புலிகள் இயக்கத்தின் தலைமைத்துவம் புதிய முறையிலான தாக்குதல் திட்டங்களை இட்டிருப்பதாகவும் இவைபற்றி பிள்ளையான் குழுவினருக்குத் தெரியாதெனவும், பிள்ளையானுக்கும் அவருடைய குழுவினருக்கும் விரைவில் புலிகள் இயக்கம் கடும் தண்டனைகளை வழங்கும் விதத்தில் புலிகளின் விசேட ஜெயந்தன் படையணி தீவிரமாகவும் திட்டமிட்ட முறையிலும் செயற்படும் எனவும் மேலும் புலிகள் இயக்கத்தின் தண்டனைகளுக்கு அவரும் குழுவினரும் முகம் கொடுத்தே ஆக வேண்டுமெனவும் மேற்படி கீர்த்தி எனப்படும் படையணித் தலைவர் எச்சரித்துள்ளார்.
பொட்டு அம்மானின் இணையத் தளம் மூலம் அவரும் மற்றும் தலைவர்களும் மேற்படி தகவல்களை வெளியிட்டிருப்பதிலிருந்து தெரியவரும் விடயம் என்னவெனில், இவ்வாறு கிழக்கு பிரதேசத்தை மீண்டும் பிடிக்கப்போவதாக அறிவிப்புகள் மூலம் புலிகள் இயக்கத் தலைமைத்துவம் ஐரோப்பாவிலும் கனடா மற்றும் நாடுகளிலும் வாழும் தமிழர்களை ஏமாற்ற முயலுகிறது என்பதே. இது போலவே கருணா புலிகள் இயக்கத்தை விட்டு வெளியேறிய காலகட்டத்திலும் பிரபாகரன் கருணாவைப் பிடிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருந்தார். கருணாவைப் பிடிப்பதற்காக சிரேஷ்ட தலைவர்களான பால்ராஜ், பானு, சொர்ணம் போன்றவர்களின் தலைமையில் படையணிகளை அனுப்பி கருணா மறைந்திருப்பதாகக் கூறப்பட்ட வாகரைப் பிரதேசத்தில் தீவிர தேடுதல் மற்றும் தாக்குதல் நடவடிக்கைகளை பிரபாகரன் நடத்துவித்த போதிலும் அவர்களால் கருணாவைப் பிடிக்க முடியவில்லை. தற்போது கிழக்குமாகாணத்தை மீண்டும் பிடிப்பதற்காக அனுப்பப் போவதாகக் கூறப்படும் விசேட ஜெயந்தன் படையணியும் மேற்படி காலகட்டத்தில் கருணாவைத் தேடிப் பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டது. அந்த வேளையில் ஜெயந்தன் படையணியில் 200 பேர் மட்டுமே இருந்தனர். அவர்களால் கருணா இருக்கும் இடத்தை நெருங்கக்கூட முடியவில்லை.
தற்போது இப்படிப்பட்ட ஜெயந்தன் படையணியைத் தான் கிழக்கு மாகாணத்தை அரச படையினரிடமிருந்தும் மீட்க பிள்ளையான் குழுவினரிடமிருந்தும் கிழக்குப் பிரதேசங்களுக்கு அனுப்பப் போவதாகக் கூறி ஐரோப்பிய நாடுகள், கனடா மற்றும் நாடுகளில் வசிக்கும் தமிழர்களை ஏமாற்றப் பார்க்கிறது புலிகள் இயக்கத் தலைமைத்துவம்.
திவயின விமர்சனம் : 01.06.2008.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment