Thursday, August 7, 2008

நாராயணனின் பாதுகாப்பில் பாரதூரமான குறைபாடு

உறுதிப்படுத்துகிறது இந்திய தூதரகம்
சார்க் உச்சி மாநாட்டு வேளையின்போது இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணனின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் இடம்பெற்ற பாரதூரமான குறைபாட்டுக்காக இலங்கைப் பாதுகாப்பு அதிகாரிகள் மன்னிப்பு கேட்டதாகவும் அந்த விடயம் தற்போது முடிவுக்கு வந்துவிட்டதொன்று என்று தாங்கள் கருதுவதாகவும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் நேற்று புதன்கிழமை தெரிவித்தது.

இது தொடர்பாக உயர்ஸ்தானிகராலயம் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

அண்மையில், நடந்துமுடிந்த 15 ஆவது சார்க் உச்சி மாநாட்டின் போது இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணனுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வெளியான பல்வேறுபட்ட ஊடக அறிக்கைகள் தொடர்பாக தூதரகம் கவனத்திற்கு எடுத்துள்ளது.

முன்கூட்டியே கலந்தாராயப்பட்டு இணக்கம் காணப்பட்ட சில பாதுகாப்பு ஏற்பாடுகள் அமுல்படுத்தப்படவில்லையெனவும் பாரதூரமான குறைபாடுகள் காணப்பட்டதாகவும் தூதரகம் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றது. இந்த விடயம் குறித்து உடனடியாக இலங்கை பாதுகாப்பு தரப்பினரிடம் ஆராயப்பட்டு கூட்டாக பரிகாரம் காணப்பட்டது.

பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பாக விரிவான முறையில் கருத்து தெரிவிக்கப்பட்டது. உயர் ஸ்தானிகராலயத்தின் நடைமுறை விடயமல்ல. இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் நாராயணனிடம் மன்னிப்பு கேட்டுள்ளனர். இப்போது இந்த விடயம் முடிவுற்றதொன்று என்று நாம் கருதுகிறோம்.

No comments: