Wednesday, August 6, 2008

இறுதி போருக்கு தயாராகும் புலிகள்

கிளிநொச்சி பிரதேசத்தில் இரணைமடு வாவிப் பகுதியின் வடமேற்குத் திசையில் சுமார் மூன்று கிலோமீற்றர் தூரம் வரையில் பரந்திருக்கும் காட்டுப் பகுதியை அண்டியும் அடுத்து திருவையாறு பிரதேசத்தை அண்டியும் புலிகள் இயக்கத்தின் இராணுவ பயிற்சி முகாம்கள் சில அமைந்துள்ளதாகவும் இந்தப் பயிற்சி முகாம்களில் புலிகள் இயக்கப் புலனாய்வுப் பிரிவின் தலைவர் பொட்டுஅம்மானின் நேரடிக் கண்காணிப்பிலேயே முக்கிய பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கரும்புலிகள் பிரிவு உறுப்பினர்களுக்காக விசேட தற்கொலைத் தாக்குதல் பயிற்சிகள் மேற்படி முகாம்களிலேயே பொட்டுஅம்மான் மற்றும் உயர்மட்ட புலிகள் இயக்கத்தலைவர்களின் கண்காணிப்பில் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கரும்புலித் தாக்குதல் உட்பட விசேட தாக்குதல் பயிற்சிகளை வழங்க புலிகள் இயக்கத்தின் மத்திய முகாம் நிலையங்கள் மேற்படி திருவையாறு பிரதேசத்தை அண்டியே அமைந்திருந்தன.

எவ்வாறாயினும் இந்தப் பிரதான முகாம்கள் பற்றிய புலனாய்வுத் தகவல்களை பாதுகாப்புத்துறைப் புலனாய்வுப் பிரிவினர் அண்மையில் அறிந்துகொண்டதைத் தொடர்ந்து கண்காணிப்பு விமானங்கள் மூலம் தீவிர அவதானிப்புச் செய்யப்பட்டுக் கடந்தவாரம் இந்தப் பிரதேசத்தில் முகாம் பகுதிகள் என்று சந்தேகிக்கப்பட்ட நிலையங்கள் மீது தீவிர குண்டுத்தாக்குதல்களை விமானப்படையினர் மேற்கொண்டனர். இந்தத் தாக்குதல்கள் வெற்றிகரமாக அமைந்ததாகவும் இதில் கரும்புலிகள் பயிற்சி முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும் விமானப்படை தரப்பு தெரிவித்துள்ளது. பயிற்சி முகாம்களிலிருந்த புலிகள் தரப்பில் ஏற்பட்ட உண்மையான உயிர்ச்சேதம் தெரியாவிட்டாலும் பிரதான கரும்புலிகள் பயிற்சி முகாம்களிலிருந்த கரும்புலி உறுப்பினர்கள் பலர் இத்தாக்குதலில் உயிரிழந்திருப்பதாக பாதுகாப்பு புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் இந்த திருவையாறு பிரதேசத்தை அண்டிய பகுதிகளில் இரகசியமான முறையில் அமைந்திருந்த முக்கிய பயிற்சி முகாம்களில் இருந்த புலிகள் இயக்கத்தினர் ஏதோ வகையிலான விசேட பயிற்சிகளை முடித்துக்கொண்டு வெளியேறியிருப்பதாக தகவல்கள் கிடைத்திருப்பதாக பாதுகாப்புப் புலனாய்வு பிரிவு குறிப்பிட்டுள்ளது. அதிலும் குறிப்பாக அப்பகுதியில் இரகசியமாக அமைந்திருந்த “லெப்டினன் கேர்ணல் சூட்டி’ பயிற்சிமுகாம் எனக்கூறப்படும் விசேட பயிற்சி முகாமில் அண்மையில் பெருந்தொகையான புலிகள் இயக்கத்தினருக்கு விசேடமான தாக்குதல் பயிற்சிகள் வழங்கப்பட்டு கடந்த 26 ஆம் திகதியே அதாவது விமானப்படைத் தாக்குதல்களுக்கு முன்னரே இவ்வாறு விசேட பயிற்சிபெற்ற புலிகள் இயக்கத்தினர் வெளியேறிவிட்டனர் எனவும் தெரிய வந்துள்ளது. இதில் பிரச்சினைக்குரிய விடயம் யாதெனில் குறித்த “லெப்டினன் கேர்ணல் சூட்டி’ முகாம்களில் அளிக்கப்பட்ட விசேடமான அந்தப் பயிற்சிகள் என்ன என்பதும் அந்தப் பயிற்சிகள் எந்த நோக்கத்துக்காக நடத்தப்பட்டது என்பதுமே ஆகும். இதுபற்றி பாதுகாப்புப் புலனாய்வுப் பிரிவு தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கேற்ப மேற்படி பயிற்சி மத்திய நிலையமாகக் கருதப்படும் லெப்டினன் கேர்ணல் சூட்டி முகாமில் புலிகள் இயக்கத் தலைமைத்துவம் திட்டமிட்டிருக்கும் பாரியதொரு தாக்குதல் நடவடிக்கைகளுக்காகவே குறித்த விசேடமான பயிற்சிகள் வழங்கப்பட்டிருப்பதாகவும் அந்த விசேட அணியினரையே இறுதித் தாக்குதல்களுக்காகப் புலிகள் இயக்கம் தயார்படுத்தியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

No comments: