Showing posts with label குமுதம். Show all posts
Showing posts with label குமுதம். Show all posts

Sunday, July 6, 2008

என்றெ கண்முன்னே கதறக் கதற......



இப்போது நினைத்தாலும் நித்திரை கொள்ள கண்கள் மறுக்கிறதய்யா... எங்கடப் பெண்டுப் பிள்ளைகளை சிங்களக் காடையர்கள் இழுத்துச் சென்று கற்பழிக்கிறார்கள். ஆம்பளைப் பசங்களின் ஆண்குறியை ஆர்மிக்காரன் லத்தியால் நசுக்குகிறான். கண் முன்னே நடந்தும் முகம் திருப்பிக் கொண்டு விட்டேன். என்னால் ஏதும் செய்ய இயலவில்லை. நான் கையாலாகாத தமிழனாக இருந்து விட்டேன் ஐயா...'' பல வருட காலமாக கேட்ட ஈழத்தமிழரின் குரல் இல்லை இது.சிங்களப் படையில் வேலைபார்த்த தமிழர் சண்முகநாதனின் குரல்.

கைகளால் முகத்தை இறுக அப்பிக் கொண்டு பெருமூச்சோடு பேச ஆரம்பிக்கிறார் இந்த முன்னாள் சிங்கள போலீஸ் அதிகாரி.

``இலங்கையில் திரிகோணமலைதான் என்னோட சொந்த ஊரு. ஒரு சிங்களப் போலீஸ்காரனா பதினேழு வருஷம் நான் வேலை பார்த்திருக்கேன்.இலங்கை அரசாங்கத்தோட தந்தி ரங்கள் அத்தனையையும் அத்துப்படியாகச் சொல்ல முடியும். சிங்களர்கள் மட்டுமே இலங்கையில வாழணும். மத்தவங்களை முடிஞ்ச வரை சாகடிக்கணும். அரசாங்கத்தோட நோக்கமே இதுதான்.

இன்னைக்கும் அந்தக் கொடுமை தொடருது. தேதி சரியா ஞாபக மில்லே. ஆனா, இப்போ நினைச்சாலும் அந்த சம்பவம் என் மனசை உறுத்திகிட்டே இருக்கு.

ஒரு அழகான தமிழ்க் குடும் பம் அது. ஏதோ கோயிலுக்குப் போறதுக்காக வந்துட்டிருந்தாங்க. வழியிலேயே சிங்கள போலீசு மடக்கிடுச்சு. அப்பா, அம்மாவோடு நின்று கொண்டிருந்த அந்த அப்பாவி இளம்பெண்ணைச் சூழ்ந்து கொண்டு `குட்டி நல்லா இருக்கு தில்லே'னு வக்கிர மாய் சிரித்துக் கொண்டே நெருங்கினார்கள். சோதனை என்கிற பெயரில் அந்த இளம் பெண்ணின் மார்பகங்களை அழுத்திப் பிடித்துக் கொண்டு `என்னடி குண்டு ஏதாவது வைச்சிருக்கியா'னு ஒருத்தன் சிரிக்கிறான். `குண்டு வைச்ச பெல்ட் போட் டிருக்கியா'னு இன்னொரு காடையன் அந்தப் பெண் பிள்ளையின் பாவாடையை அவிழ்க் கிறான். துப்பாக்கி முனை யில் இப்படி எவ்வளவோ சம்பவங்கள் நடக்கின்றன. ஒரு தமிழனா இருந்துகிட்டு அந்தக் கொடுமையை நேர்ல பார்த்தும் ஒண்ணும் செய்ய முடியாத வேதனை இருக்கே... அப்படியே துப்பாக்கிய என் நெஞ்சுல வைச்சு சுட்டுக்கலாம் போல இருந்துச்சு.

1977-ல் ஒரு பெரிய கலவரம் மூண்டது. அப்போ கொழும்புவில் இருக்குற பொருளை ஸ்டேஷன்ல நானும் ஒரு போலீஸ். கண்ணுக்குச் சிக்கின பொண்ணுங்களையெல்லாம் ஒரு கும்பல் துரத்திகிட்டு ஓடுது. ஆனா, எங்களால எதுவுமே செய்ய முடியலை. ஒரு அறைக்குள்ளே எங்களை அடைச்சு வைச்சு பூட்டிட்டாங்க. அப்போ சன்னல் வழியா `நீயெல்லாம் ஒரு தமிழனாடா'ன்னு ஒரு குரல் கேட்டுச்சு. இன்றைய வரைக்கும் அந்தக் குரல் என்னோட காதுல எதிரொலிச்சிகிட்டே இருக்கு.'' சண்முகநாதனின் முகத்தில் கனமான இறுக்கம்.

``வெகு நேரம் கழிச்சு ஒரு பெண்ணையும், பையனையும் எங்காளுங்க கூட்டி வந்தாங்க. அந்தப் பொண்ணு அழுதுகிட்டே இருந்துச்சு. மொதல்ல காரணம் புரியாம இருந்தேன். எதேச்சையா பார்த்தப்பதான் ஒரு கணம் என் இதயமே நின்னு துடிக்க ஆரம்பிச்சது. அந்த இளம்பெண்ணின் பாவாடை முழுக்க ரத்தம். உள்ளுக்குள் இருந்து ரத்தம் ஒழுகுவது நிற்கவேயில்லை. கைது செய்யப் போன அந்த மூன்று சிங்கள போலீஸ்காரர்களும் ஜீப்பில் வைத்து அடுத்தடுத்து அந்த இளம் பெண்ணை நாசப்படுத்தியிருக்கிறார்கள். தூக்கம் தொலைந்து போன இரவு அது.''

புலிகள் மீது பகையென்றால் அவர்களிடம் மட்டும் மோத வேண்டியதுதானே...?

``இலங்கை அரசாங்கம் ஒருபோதும் அப்படி செய்யத் துணியாது. எந்த கோர்ட்டும் அனுமதி தராமல், உயரதிகாரிகள் உத்தரவும் இல்லாமல் தமிழர்களின் வீடுகளில் போலீஸ் நுழையலாம். அங்கே அப்பாவியாகத் தூங் கிக் கொண்டிருப்பவனை விடுதலைப்புலி ஆதரவாளன் என்று கைது செய்யலாம். இதையெல்லாம் நேரடியாகப் பார்த்தவன் நான். அத்தோடு விடமாட்டார்கள். இலங்கையில் பூசா என்றொரு இடம் உண்டு. தமிழர்களைச் சித்ரவதை செய்வதற்கே உருவாக்கப்பட்ட கூடம்னு சொல்லலாம். துணிகளை உருவி விதவிதமா சித்ரவதை செஞ்சு, கடைசியில ஒரு குப்பை வண்டியில நிர்வாணக் குவியலா பிணங்கள் குவிஞ்சு கிடக்கும். இது பற்றி எதுவுமே தெரியாத உலக நாடுகள் இலங்கை அரசை உச்சி மோந்து கை கோர்த்துகிட்டு நிற்கறதைப் பார்க்கும் போது வருத்தம்தான் ஏற்படுது.''

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சார்பில் மக்களுக்கு தற்காப்புப் பயிற்சி கொடுக் கப்படுகிறதாமே?

``வேறு என்ன செய்ய முடியும்? கற்பை காப்பாற்றிக் கொள் வதற்காகவாவது ஒரு பெண் போராட வேண் டாமா?''

பாலசிங்கம், தமிழ்ச் செல்வன் என அடுத்தடுத்து துயரமான இழப்புகள். உண்மையில் புலிகள் இயக்கம் பலவீனமடைந்துவிட்டதா..?

``ஈடு செய்ய முடியாத இழப்பு என்று சொல்லலாம். இதனால் பிரபாகரனுக்கு எந்தத் தளர்ச்சியும் ஏற்படலை. அவரே இறந்து விட்டதாகக் கூட சில சமயங்கள்ல செய்தி பரப்புறாங்க. புத்த பிக்குகள், ஜனதா விமுக்தி பெரமுனா கட்சிகளோட சதி வேலைதான் இது. பிரபாகரன் ஆரோக்யத்தோடதான் இருக்கார். எதையும் கால நேரச் சூழல் பார்த்து செய்வதுதான் அவரின் வழக்கம்.''

பயங்கரவாத அமைப்பாக விடுதலைப் புலிகள் இயக்கத்தை உலக நாடுகள் அறிவிப்புச் செய்திருக்கின்றனவே?

``இலங்கையில் என்ன நடக்கிறதென உலக நாடுகளுக்கு இதுவரை தெரிந்ததே இல்லை. கருணா போன்ற சில தமிழ்த் துரோகிகளும் இதற்குக் காரணம். வெளிநாடுகளில் புலிகளின் இயக்கத்தை மோசமாகச் சித்திரித்து துண்டுப் பிரசுரம் விநியோகிப்பதுதான் அவர்களின் வேலை.''

சினிமாவின் மூலம் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு சொல்லிவிட முடியுமா?

``தீர்வு சொல்ல முடியாவிட்டாலும் உலக நாடுகளின் கவனத்திற்காகவாவது கொண்டு செல்லலாம்.''

இரு தரப்பினருக்கும் நடுவே நார்வே சமரசம் செய்கிறது. இது சமாதானத்தில் முடியுமா...?

``வாய்ப்பே இல்லை. எத்தனையோ சமாதானக் கூட் டங்களைப் பார்த்தாயிற்று. எதுவும் நடக்காததுதான் மிச்சம். போர் நிறுத்த ஒப்பந்தத்தில் புலிகள் மிகவும் நாணயமாக இருப்பார்கள். அமைதி காப்பார்கள். சிங்கள அரசாங்கம் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு எந்நேரமும் காத்திருக்கிறது. ரத்தம் சுவைப் பதுதான் அவர்களின் நோக்கம்''.

- மா. மணிவண்ணன்
படங்கள் : சித்ரம் மத்தியாஸ்

பலவீனமாகிவிட்டார்களா புலிகள்?

விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையேயான போர் தற்போது உச்சகட்டத்தை எட்டி யிருக்கிறது.இந்நிலையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் நடேசனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகின்றன. புலிகள் தொடர்ந்து பின்னடைவைச் சந்திப்பதாகச் சொல்லப்படுகிறதே?

``புலிகள் பலவீனப்பட்டுவிட்டார்கள் என்ற தோற்றத்தை உருவாக்குவதற்காகப் பொய்யான செய்திகளை சிங்கள அரசு தொடர்ந்து பரப்பி வருகிறது. இதில் உண்மை ஏதும் இல்லை. மேலும், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் வரலாற்றில் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகள் தங்கள் இன்னுயிர்களைத் தேசத்தின் சுதந்திரத்துக்காக அர்ப்பணித்துள்ளார்கள். கடந்த முப்பது வருடங்களில் பல தளபதிகள் வீரமரணம் அடைந்துள்ளனர். புதிய தளபதிகள் உருவாக்கப்பட்டுள்ளார்கள். இது விடுதலைப் போராட்ட வரலாறுகளில் சாதாரண விஷயம்.''

இந்திய அரசு இலங்கை ராணுவத்துக்கு ராடார்கள் வழங்குவதும், விமானிகளுக்குப் பயிற்சி அளிப்பதுமாகத் தொடர்ந்து உதவி செய்கிறதே?

``இலங்கைத் தீவில் சிங்கள ராணுவம் தமிழ் மக்களை தொடர்ச்சியாகக் கொன்றொழித்து வருகிறது. அவ்வாறான ஒரு அரசுக்கு இந்தியா ராணுவ உதவி செய்வது எமக்கு வேதனை அளிக்கிறது. சிங்கள அரசு இன்னும் அதிகளவில் தமிழர்களைக் கொல்வதற்கே இத் தகைய நடவடிக்கைகள் உதவும். இதை இந்திய அரசு விளங்கிக் கொண்டு ராணுவ உதவிகளை நிறுத்த வேண்டும் என உலகில் உள்ள எட்டுக் கோடி தமிழர்களும் எதிர்பார்க்கிறார்கள்''

விடுதலைப்புலிகளுக்கு மருந்துப் பொருள்கள், பெட்ரோல், வாக்கி டாக்கி கடத்தியதாகத் தமிழகத்தில் பலர் கைது செய்யப்படுகிறார்கள். இந்த நடவடிக்கைகளால் புலிகள் முடக்கப்படுகிறார்களா?

``அத்தகைய கடத்தல் விவகாரங்களுக்கும் புலிகள் இயக்கத்துக்கும் இடையே எந்தத் தொடர்பும் இல்லை. இது ஒரு விஷமப் பிரசாரம். தமிழ் ஈழ ஆதரவாளர்களைப் பயமுறுத்த சொல்லப்படும் பொய்யான பிரசாரங்கள்.''

தமிழக மீனவர்களுக்கு இலங்கை ராணுவம் நிரந்தர அச்சுறுத்தலாகிவிட்டது. சில சமயங்களில் மீனவர்களை விடுதலைப் புலிகள்தான் தாக்குவதாகச் சொல்லப்படுகிறதே?

``இது எமது போராட் டத்துக்கு எதிரான சக்திகளால் பரப்பப்படும் கட்டுக்கதைகள். தமிழக மீனவர்கள் எமது உடன்பிறப்புகள். நாம் என்ன விலை கொடுத்தாவது எமது உடன்பிறப்புகளைப் பாதுகாப்பதில் உறுதியாக இருக் கிறோம்.''

ஈழத்தமிழர் பிரச்னையில் தமிழக முதல்வர் கருணாநிதியின் அணுகுமுறை எப்படி இருக்கிறது?

``கலைஞர் கருணாநிதி அவர்கள் தமிழுணர்வு மிக்கவர். ஈழத்தமிழர் மீது கரிசனை உடையவர். தான் ஆடாவிட்டாலும் தசை ஆடும் என்ற வகையில் ஈழத்தமிழரின் துன்பநிலை கண்டு கொதித்துப் போயிருக்கிறார். கலைஞரின் சொந்த உணர்வு தி.மு.க. என்ற பேரியக்கத்தின் உணர்வாகி, மற்ற தமிழக அரசியல் கட்சிகளுடன் ஒன்று சேர்ந்து, எமது விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக, ஈழத் தமிழரின் எதிரிகள் திகைப்படையும் அளவுக்கு எழுச்சி அடைய வேண்டும் என விரும்புகிறோம்.''

மத்திய அரசின் நெருக்கடிக்காக கருணாநிதி புலிகளிடம் கறாராக நடந்து கொள்வதாக நினைக்கிறீர்களா?

``மத்திய அரசுக்கு எதிராக, தமிழ் உணர்வுடன் எத்தனையோ போராட்டங்கள் நடத்தியவர் கலைஞர். அவர் மத்திய அரசுக்குப் பணிந்து ஆட்சி நடத்துகிறார் என்று சொல்வது தவறு. எனினும்,இந்திய? தேசிய அரசியல்- மாநில அரசியல் என்ற எல்லைகளைக் கடந்து ஈழத் தமிழரின் விடுதலைக்கு உதவ வேண்டியது அத்தியாவசியம் என்ற உண்மைக்கு கலைஞர் முதலிடம் கொடுக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்ப்பதில் தவறில்லையே!''

இலங்கைப் பிரச்னையைக் கையாள்வதில் சந்திரிகா குமாரதுங்கா, ரணில் விக்கிரமசிங்கே, மகிந்தா ராஜபக்சே ஆகியோரிடையே என்ன வித்தியாசம்?

``எந்த வித்தியாசமும் இல்லை. சந்திரிகாவும், ராஜபக்சேயும் வெளிப் படையாக இனவாதம் கக்கும் போர் வெறியர்கள். ரணில் விக்கிரம சிங்கேயை மட்டும் உலகம் ஒரு சமாதானப் பிரியராக அடையாளப் படுத்துகிறது. உண்மையில், அவர் ஜெயவர்த்தனே போல குள்ளநரித் தந்திரமுள்ளவர். ராஜபக்சே போர் நடத்துவதை அவர் ஆதரிக்கிறார்.''

நெருக்கடி மிகுந்த இன்றைய சூழ்நிலையில் தமிழக அரசுக்கும் இந்திய அரசுக்கும் புலிகள் சொல்வது என்ன?

``இந்திய - சீனப்போரின் போதும்; இந்திய -பாகிஸ்தான் போர்களின் போதும் இந்தியாவுக்கு எதிரான நிலைப் பாட்டையே சிங்கள அரசு எடுத்திருந்தது வரலாறு.அப்போதெல்லாம் ஈழத்தமிழர்கள் இந்திய அரசுக்கு ஆதரவாகவே செயல்பட்டனர். ஆனால், இப்போது ஈழத்தமிழர் தமது சொந்த விடுதலைக்காக ரத்தம் சிந்திப் போராடும்போது, இந்திய அரசு சிங்கள அரசுக்கு உதவுவதை நிறுத்தி, எமது விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவாகச் செயல்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு.''

பழ.நெடுமாறன் ஈழத் தமிழர் பிரச்னை மூலமாகத் தனது நலனைப் பெருக்கிக் கொள்வதாகச் சமீபத்தில் கருணாநிதி கூறினாரே?

``நீண்டகாலமாக எந்தவிதச் சலிப்பும் இல்லாமல் எமது விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவாகச் செயல்படுபவர் நெடுமாறன் ஐயா. அவரது பணியை ஈழத்தமிழர்கள் என்றும் மனதில் இருத்தி மரியாதை செலுத்துவார்கள்.''

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட நளினியை பிரியங்கா சந்தித்ததை விடுதலைப்புலிகள் எப்படிப் பார்க்கிறார்கள்?

``பிரியங்கா எந்த அரசியல் நோக்கமும் இல்லாமல் மனிதாபிமான உணர்வோடு சென்று பார்த்திருக்கிறார் என கருதுகிறேன்..

குமுதம்

Monday, June 16, 2008

ஒரு உண்மை ரிப்போர்ட்


குண்டுகளின் குவியலால் குலுங்கிய கும்மிடிப்பூண்டி!
கோயம்பேடு மார்க்கெட்டில் குவித்துப் போட்ட கத்தரிக்காய், தேங்காய் ஸ்டைலில் கும்மிடிப்பூண்டியில் குவியல் குவியலாகக் கிடைத்துள்ள குண்டுகள், தோட்டாக்கள் தமிழகத்தில் குபீர் பீதியைக் கிளப்பி உள்ளன.`ஒருவேளை இது தீவிரவாதிகளின் ஆயுதக்களஞ்சியமாக இருக்கலாம்' என ஜெயலலிதா அவரது வழக்கமான பாணியில் இதை வைத்து அரசியல் செய்ய, ஆரம்பமாகி விட்டது அமர்க்களம்.

கும்மிடிப்பூண்டி சித்திரராஜ கண்டிகையைச் சுற்றியுள்ள தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக்குழு (சிப்காட்) வளாகத்தில் பதினேழு இரும்பு உருக்காலைகள் செயல்படுகின்றன.இந்த உருக்காலைகள் வெளிநாடுகளில் இருந்து பழைய இரும்புச்சாமான்களை கப்பல்கள் மூலம் இறக்குமதி செய்து, அவற்றை உருக்கி இரும்புப் பொருட்களைத் தயாரிக்கின்றன. இதே பகுதியில் தாசில்தார் அலுவலகமும் இலங்கை அகதிகள் முகாம்ஒன்றும் உள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அகதிகள் முகாமைச் சேர்ந்த சிறுவர்கள் சிலர் அந்தப் பகுதியில் உள்ள பழைய கிணறு ஒன்றில் குளிக்கச் சென்றிருக்கிறார்கள்.அதில் ஒரு சிறுவன் துண்டுபீடி ஒன்றை அணைக்காமல் அருகில் இருந்த புதரில் தூக்கியெறிய, புதர் தீப்பிடித்து... அடுத்தநிமிடம் ஒரு வெடியோசை! அந்த படுபயங்கர வெடிச் சத்தத்தைக் கேட்டு சிறுவர்கள் அருகே சென்றபோது,மீண்டும் ஒரு வெடியோசை.அவ்வளவுதான். இரண்டு சிறுவர்கள் அதில் காயமடைய, உடனடியாக அவர்கள் சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

`இலங்கை அகதிகள் முகாம் அருகே குண்டுவெடித்து விட்டது' என்ற செய்தி இதற்குள் காற்றில் பரவ, அந்த மர்மப் பொருள் வெடித்த பகுதிக்கு திருவள்ளூர் மாவட்ட உதவி ஆட்சியர் சங்கீதா, எஸ்.பி. செந்தாமரைக் கண்ணன், கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி. நவீன் சந்திரன் ஆகியோர் வந்து சேர்ந்தனர். அந்தப் பகுதியை ஆராய்ந்தபோது கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக,அங்கே குவியல் குவியலாகக் குண்டுகள், தோட்டாக்கள்,ராக்கெட் லாஞ்சர்கள்,கண்ணிவெடிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றின் மொத்த எடை ஒரு டன்னுக்கும் மேலே.

தொட்டுவிடும் தூரத்தில் இலங்கை அகதிகள் முகாம். அதனருகில் குண்டுகள், தோட்டாக்கள். இது போதாதா? உடனே இலங்கை அகதிகளுக்கும், இந்த ஆயுதக்குவியலுக்கும் முடிச்சுப் போட்டு பரபரப்பு இறக்கை கட்டிப் பறக்க ஆரம்பித்தது.இது நக்ஸல் இயக்கத்தினரின்ஆயுதக்களஞ்சியம் என்ற வதந்தியும் அமளிதுமளிப்பட்டது. இந்த நிலையில்தான் மேற்படி பிரச்னையை அரசியலாக்கி, அறிக்கை விட்டு பெருமை தேடிக் கொண்டார் ஜெ. `அப்படியில்லை. கும்மிடிப்பூண்டியில் கண்டுபிடிக்கப்பட்டவை அங்குள்ள இரும்புத் தொழிற்சாலைகளில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட பழைய இரும்புகள், அதாவது பயன்படுத்தப்பட்ட குண்டுகள்' என்று அவசர அவசரமாக அறிக்கை விட்டார் டி.ஜி.பி. ஜெயின்.

அதன்பிறகு அந்தப் பகுதியில் உள்ள ஏனைய பதினாறு இரும்புத் தொழிற்சாலைகளிலும் காவல்துறையினர் ஆய்வு நடத்தினர், அதில் `ஷ்ரீவிநாயகா அலாய் ஸ்டீல்' என்ற தொழிற்சாலையில் ஆய்வு நடத்தியபோது, அங்கே குவித்து வைக்கப்பட்டிருந்த பழைய இரும்புகளில் பீரங்கிக் குண்டுகள், ராக்கெட் லாஞ்சர்கள், துப்பாக்கித் தோட்டாக்கள், ஏ.கே. 47 எந்திரத் துப்பாக்கிகளுக்கான குண்டுகள் எல்லாம் கண்டுபிடிக்கப்பட்டன. அத்துடன் கிணற்றில் குண்டு மற்றும் தோட்டாக்களைப் போட்டு பதுக்கி வைத்திருந்தவர்களும் இதே தொழிற்சாலைக்காரர்கள்தான் என்பது தெரிய வந்தது. அதையடுத்து, ஆலை உரிமையாளர் அசோக்குமார் ஜெயின், மேலாளர் மனோஜ்குமார் ஜெயின் மற்றும் சூப்பர்வைசர் ராகேஷ்குமார் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

கும்மிடிப்பூண்டியில் உண்மையில் என்னதான் நடந்தது என்பதை அறிய, அங்கு நாம் விசிட் அடித்தோம்.முதலில் சிப்காட் பகுதியில் சில தொழிற்சாலை ஊழியர்களிடம் பேசினோம்.

``வெளிநாடுகளில் இருந்து கப்பல் மூலம் வரும் இரும்புக்கழிவுகளை இங்குள்ள ஆலைக்காரர்கள் கொதிகலனில் இட்டு உருக்கி கம்பி மற்றும் கட்டுமானப் பணிக்குத் தேவையான இரும்பு உபகரணங்களைத் தயாரிக்கின்றனர். இப்படி வரும் பழைய இரும்புக் கழிவுகளில் பயன்படுத்தப்பட்ட பழைய குண்டுகள், தோட்டாக்களும் இருப்பதுண்டு. தோட்டா மற்றும் பீரங்கிக் குண்டுகளில் இருந்து அதிகஅளவில் தரமான இரும்பை உருக்கி எடுக்க முடியும் என்பதால், இதுபோல குண்டுகள் வந்தால் தொழிற்சாலை உரிமையாளர்கள் குஷியாகிவிடுவார்கள். இரண்டாண்டுகளுக்கு முன்பு ஒரு தொழிற்சாலையில் இப்படி இறக்குமதி செய்யப்பட்ட குண்டுகளை உருக்கும் போது உஷ்ணம் தாங்காமல் அவை வெடித்துச் சிதறின. அந்த விபத்தில் தொழிலாளர்கள் சிலர் இறந்தும் போனார்கள்.

அந்த அசம்பாவிதத்துக்குப் பின், `இதுபோல குண்டுகள், தோட்டாக்கள் இரும்புக்கழிவுடன் சேர்ந்து வந்தால் அவற்றை எங்களிடம் ஒப்படைத்துவிட வேண்டும்' என்று போலீஸார் அறிவித்தனர். அதோடு சரி. அதன்பிறகு இது தொடர்பாக போலீஸார் பெரிய அளவில் எந்த முயற்சியும்மேற்கொள்ளவில்லை. இதன்பிறகு பழைய இரும்பில் கலந்து வரும் அபாயகரமான வெடிபொருட்களை என்ன செய்வது என்று தெரியாமல்தொழிற்சாலை உரிமையாளர்கள் திணற ஆரம்பித்தார்கள். அப்படிப்பட்ட குண்டுகளையும் தோட்டாக்களையும் சிலர் பாழடைந்த கிணறுகள், புதர்களில் மறைக்க ஆரம்பித்தார்கள். அந்தநிலையில்தான் இப்படி ஒரு பிரச்னை வெடித்திருக்கிறது'' என்று ஆதங்கப்பட்டனர் அவர்கள்.

சர்ச்சையில் சிக்கிய ஷ்ரீவிநாயகா அலாய் ஸ்டீல்ஸ் தொழிற்சாலைக்குள் நாம் நமது புகைப்படக்காரருடன் நுழைந்தோம்.போலீஸாரால் கண்டுபிடிக்கப்பட்ட ராக்கெட் லாஞ்சர்கள், பீரங்கிக் குண்டுகள், கண்ணி வெடிகள், தோட்டாக்கள் ஆகியவை அங்கு ஆயுதக்கிடங்கு ஸ்டைலில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அந்தத் தொழிற்சாலை ஊழியர்கள் சிலரிடம் பேச்சுக் கொடுத்தோம்.

``இறக்குமதியாகும் இரும்புகளுடன் இதுபோன்ற குண்டுகள், தோட்டாக்கள் வந்துவிட்டால் அவற்றை யாரிடம் ஒப்படைப்பது என்பதில் எந்தத் தெளிவான நடைமுறையும் இங்கு இல்லை. யாருக்கும் ஆபத்து வந்துவிடக் கூடாது என்றுதான் அவற்றை கிணற்றில் கொட்டினோம்(!) ஆனால், சிறுவர்களின் விளையாட்டால் அசம்பாவிதம் அரங்கேறிவிட்டது. எங்கள் தொழிற்சாலையில் பீரங்கிக் குண்டுகள், தோட்டாக்களைப் பறிமுதல் செய்து எங்களை ஏதோ நக்ஸல் போல போலீஸார் சித்திரிக்கிறார்கள். ஆனால், இங்கே எந்தத் தொழிற்சாலையில்தான் இது போன்ற பழைய குண்டுகள், தோட்டாக்கள் இல்லை? இங்குள்ள மற்ற பதினாறு தொழிற்சாலைகளிலும் போலீஸார் சோதனை நடத்தினால் இதைவிடப் பயங்கர ஆயுதங்கள் வெளிச்சத்துக்கு வரும்'' என்று நம் புருவங்களை உயரச் செய்தனர் அந்த ஊழியர்கள்.

இதனிடையே, தடய அறிவியல் துறை இயக்குனர் விஜயகுமார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று, பறிமுதலான கண்ணிவெடி மற்றும் குண்டுகளின் மாதிரியையும் அதில் ஒட்டியிருந்த வெடி மருந்துகளையும் சேகரித்துள்ளனர். சிப்காட் காவல் நிலையத்தில் டி.எஸ்.பி.யுடன் ஆலோசனையில் இருந்த தடய அறிவியல் இயக்குநர் விஜயகுமாரிடம் பேசினோம்.

``பொதுவாக, பீரங்கி, துப்பாக்கியில் பயன்படுத்தப்படும் குண்டுகள், தோட்டாக்களில் வெடி மருந்துகள் கலந்திருக்கும். அவற்றை பீரங்கி, துப்பாக்கியில் வைத்து ஒருமுறை சுட்டால் அதிலுள்ள வெடிமருந்து சாம்பலாகிவிடும். அதன்பின் ஆபத்தில்லை. அவை பழைய இரும்புப் பொருட்களாகக் கருதப்பட்டு இறக்குமதி செய்யப்படுகின்றன. ஆனால் சிலசமயம், அவற்றில் வெடிக்காத குண்டுகள், தோட்டாக்களும் கலந்து வருவதால் அசம்பாவிதம் நடக்க வாய்ப்புண்டு. இப்போது நாங்கள் சேகரித்துள்ளது வெடிமருந்தா? அல்லது வெறும் மண்ணா? என்பது ஆய்வில்தான் தெரியவரும்.

இதுபோன்ற பயங்கர ஆயுதங்களை உருக்கி இரும்புப் பொருட்களைச் செய்யவே கூடாது. காவல்துறையிடம் தான் ஒப்படைக்க வேண்டும். இங்கே கிடைத்திருக்கும் கண்ணிவெடிகள், பீரங்கி ஷெல்கள் தற்போது புழக்கத்தில் இல்லாத பழைய ரகங்கள். இவை 1917 முதல் 1967 வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம். அதில் உள்ள கழுகு சின்னத்தை வைத்துப் பார்க்கும்போது இரண்டாம் உலகப்போரின்போது இவை அமெரிக்காவால் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் போலத் தோன்றுகின்றன. இதில் ஏதாவது சதி இருக்கிறதா? என விசாரிப்பது நாட்டின் பாதுகாப்புக்கு உகந்தது'' என்று முடித்துக் கொண்டார் அவர்.

தென்னை மரத்தில் தேள்கொட்ட பனை மரத்துக்கு நெறி கட்டிய கதையாக இந்தக் காயலான் கடை சம்பவத்துக்குத் துளியும் சம்பந்தமில்லாத இலங்கைத் தமிழ்அகதிகள் இப்போது பீதியில் இருப்பதுதான் வேதனை.

படங்கள்: ஞானமணி
வே. வெற்றிவேல்

குமுதம் ரிப்போட்டர்