Showing posts with label டாக்டர் ராமதாஸ். Show all posts
Showing posts with label டாக்டர் ராமதாஸ். Show all posts

Monday, June 16, 2008

"இலங்கைத் தமிழருக்காக போராடுவதற்கு தமிழகத்தில் 10,000 சான்றோர் திரட்டப்படுவர்"

இலங்கைத் தமிழர்களுக்காக போராட 10 ஆயிரம் சான்றோர்களை ஒருங்கிணைத்து அரசியலுக்கு அப்பாற்பட்ட நிகழ்ச்சியொன்றை விரைவில் நடத்தவுள்ளதாக பாட்டாளி மக்கள் கட்சித்தலைவர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழ் படைப்பாளிகள் பேரியக்கம் என்ற அமைப்பொன்றை ராமதாஸ் ஏற்படுத்தியுள்ளார். இதன் தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றபோது அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

எனது கட்சியை வளர்ப்பதற்காக இந்த இயக்கத்தை ஆரம்பிக்கவில்லை. தமிழை வளர்க்க, தமிழனை வளர்க்க பேரியக்கம் தேவை என்பதால் தொடங்கியுள்ளேன். இலங்கைத் தமிழர்கள் விடுலைக்காக எந்தளவுக்கு நாம் பாடுபடுகின்றோம் என்பதை ஒவ்வொருவரும் எண்ணிப்பார்க்க வேண்டும். இலங்கைத் தமிழர்கள் மட்டுமல்ல இங்கிருந்து மீன்பிடிக்கச்செல்லும் தமிழ்நாட்டு தமிழர்களும் இலங்கைக் கடற்படையால் தினமும் கொல்லப்படுகின்றனர்.

இலங்கைத் தமிழர் பற்றியும் அவர்கள் போராட்டம் குறித்தும் தமிழ் படைப்பாளிகள் பேரியக்கம் எழுத வேண்டும்.

இலங்கைத் தமிழர்களுக்காக போராட 10 ஆயிரம் சான்றோர்களை ஒருங்கிணைத்து அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒரு நிகழ்ச்சி நடத்த வேண்டுமென எதிர் பார்க்கின்றேன். அது விரைவில் நடக்கும்.

நம் இளைஞர்களை இன்று திரையரங்கு மற்றும் மதுபான சாலைகளில்தான் காண்கின்றோம். இதை மாற்ற குரல்கொடுக்க வேண்டும்.

எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்கிறார்கள். தமிழகத்தில் எங்கே தமிழ் இருக்கிறது. இது குறித்து பொது மேடையில் விவாதம் நடத்த வருமாறு சம்பந்தப்பட்டவருக்கு நான் சவால் விடுத்தேன் ஆனால் இன்று வரை பதிலில்லை.