Monday, June 23, 2008

திருமணத்திற்கு முன் குழந்தை பெற்றதால் 18 ஆண்டுகள் தனியறையில் கொடுமை

இத்தாலியைச் சேர்ந்த பெண் ஒருவர் திருமணத்துக்கு முன் குழந்தை பெற்றதால் 18 ஆண்டுகள் தனியறை ஒன்றில் சித்திரவதைப்படுத்தப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இத்தாலியின் நொப்லஸ் நகருக்கு சற்றுத் தொலைவில் அமைந்துள்ள சான்ந் மரியா கபுவா வெடிரே என்ற நகரைச் சேர்ந்த 47 வயதுடைய மரியா மனோகா என்பவரே திருமணத்துக்கு முன்பு குழந்தையைப் பெற்றுக் கொண்டார்.

இதனால், சமூகத்தில் தங்களின் குடும்ப அந்தஸ்து குறைந்துவிடும் என்று அஞ்சிய மரியாவின் தாய் மரியாவின் சகோதரர் பிரிஸ்கோ, சகோதரி மிசெலினா ஆகியோர் மரியாவை தங்கள் வீட்டில் தனியறையில் அடைத்துப் பூட்டி விட்டனர்.

மரியா காணாமல் போனதாக மற்றவர்களிடம் கூறிவிட்டனர். மரியாவின் ஆண் குழந்தையை தாங்கள் தத்தெடுத்து வளர்த்து வருவதாகவும் கதை விட்டனர். 18 ஆண்டுகளாகத் தொடர்ந்து தனியறையில் அடைக்கப்பட்டுக் கிடந்தார் மரியா.

இதுதொடர்பாக பொலிஸாருக்கு அநாமதேயத் தகவல் கிடைத்தது. மரியா அடைத்து வைக்கப்பட்டுள்ள அறை வீடியோவில் படம் பிடிக்கப்பட்டு ஒளிபரப்பாகியது. இதையடுத்து, சுதாகரித்துக்கொண்ட பொலிஸார் மரியா அடைத்து வைக்கப்பட்டிருந்த வீட்டில் அதிரடிச் சோதனை நடத்தினர்.

அப்போது, துர்நாற்றம் வீசும் அறையில் உணர்விழந்த நிலையிலும் மனநிலை குழம்பிய நிலையிலும் மரியா இருந்தார். அவர் பயன்படுத்திய கழிவறை சுத்தப்படுத்தப்படாமலும் அறை முழுவதும் பழைய உடைகள் சிதைந்தும் இருந்தன.

மரியாவை மீட்ட பொலிஸார் அவரை நாப்பில்ஸ் நகரில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மனநிலை தவறிய நிலையில் எதையும் பேச முடியாமல் சிகிச்சை பெற்று வருகிறார் மரியா. மரியா குறித்த முழுவிபரங்களும் அவரது 17 வயது மகனுக்குத் தெரியும் என்பது விசாரணையில் தெரியவந்தது. மரியாவின் தாய் அன்னா ரோசா மட்டும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவரது சகோதரர் , சகோதரி தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

No comments: