Wednesday, June 25, 2008

நாளை புலிகள் ஆயுதங்களை கீழே வைத்தால் அவர்களுடன் கைகோர்த்துச் செயற்பட தயங்கமாட்டேன்

எம்.ஏ.எம்.நிலாம்

இந்த நாட்டில் வாழும் எந்தவொரு தரப்புடனும் யுத்தம் செய்யவேண்டுமென்று ஒருபோதும் எண்ணவில்லையெனத் தெரிவித்திருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்காகவே சில நடவடிக்கைகளைக் கடுமையாக எடுக்கவேண்டியநிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகள் நாளை ஆயுதங்களைக் கீழே வைப்பார்களானால் நாட்டின் சமாதானத்துக்காக அவர்களுடன் கைகோர்த்துச் செயற்பட ஒருபோதும் தயங்கப்போவதில்லையெனவும் ஜனாதிபதி வலியுறுத்திக் கூறியுள்ளார்.

நேற்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற சர்வமதத் தலைவர்களுடனான சந்திப்பின்போதே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்திருக்கின்றார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது:

நாட்டினதும், மக்களினதும் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக எந்தத் தியாகத்தையும் செய்ய நான் தயாராகவிருக்கின்றேன். பயங்கரவாதச் சவாலுக்கு நான் ஒருபோதும் அடிபணியப்போவதில்லை. இந்த நாட்டை எவருக்கும் காட்டிக்கொடுக்கும் துரோகத்தனத்தை ஒருபோதும் செய்யப்போவதில்லை. நாட்டையும் மக்களையும் பாதுகாத்தபடி எனது அரசாங்கம் தொடர்ந்தும் சமாதான முயற்சிகளில் அர்ப்பணிப்புடன் செயற்படும்.

சில ஊடகங்களும்,குழுக்களும் நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொள்ளாமல் பொறுப்பற்றவிதத்தில் செயற்பட்டுவருவதையிட்டு வேதனையும் கவலையும் அடைகின்றேன். நாட்டினதும், நாட்டு மக்களினதும் பாதுகாப்புக்காக சில கடுமையான முடிவுகளை எடுக்கவேண்டிய கட்டாயத்திற்குள் நான் தள்ளப்பட்டுள்ளேன்.

சட்டபூர்வமான விடயங்களைக் கூட சிலர் தமது தனிப்பட்ட நோக்கங்களுக்காக திரித்துக் கூறமுற்படுகின்றனர். நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகச் செயற்படும் எத்தகைய முயற்சிகளையும் முறியடிக்கக் கடுமையான நடவடிக்கை எடுக்கத் தயங்கப்போவதில்லை எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தச் சந்திப்பில் பேராசிரியர் பெல்லன்வில விமலரத்ன தேரோ, மாதுரை வாவே சோபித தேரோ, கலாநிதி பிரஷ்மனவத்தே சீவலி தேரோ, மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப், அல்ஹாஜ் மௌலவி தியாஸ் முஹம்மத், மௌலவி பி.ஏ.எஸ்.சுப்யான், மௌலவி எஸ்.எச்.ஆதம்பாவா, உலக மதத்தலைவர்கள் அமைப்பின் கியோஷி சுகினோ, பா.சண்முகரத்னசர்மா, பாபு சர்மா குருக்கள், பவ்ரல் அமைப்பின் தலைவர் கிங்ஸ்லி ரொட்ரிகோ ஆகியோருடன் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவும் கலந்துகொண்டனர்.

No comments: