ஆதிக்க பலம் இருந்தால் எதையும் செய்யலாம் என்று பழையகால மன்னர்கள் தங்களுக்கு விரும்பியதைச் செய்தார்கள். அது பற்றி மாற்றுக் கருத்துக் கேள்வி கேட்டவர்களைத் தேசத் துரோகிகள் என்று தூக்கில் இட்டார்கள். ஆங்கிலேயர் இந்தியாவைக் கொள்ளையடிக்கத் தன் ஆதிக்கத்தைப் பரப்பியபோது அதை எதிர்த்துக் கேள்வி கேட்ட கட்டபொம்மனைப் புளிய மரத்தில் தூக்கிலிட்டார்கள். அதேமாதிரி, இலங்கையின் தமிழ்ப்பகுதிகளில், அறிவுத்திறமையால், மக்களின் அங்கிகாரத்தால் அதிகாரத்துக்கு வராமல் ஆயுதத்தால் தங்களைத் தமிழ் மக்களின் ஏகபோகத் தலைவர்களாக உயர்த்திக்கொண்ட புலிகளும் தங்களுக்குப்பிடிக்காத விடயங்களைப் பேசியவர்களைப் பகிரங்கமாக விளக்குக் கம்பங்களிற் தூக்கிட்டார்கள். அவற்றையும், புலிகளாற் செய்யப்பட்ட எண்னிலங்கா பல கொலைகளையும் ( கந்தன் கருணைக்கொலைகள், டெலோ போராளிகளை நாற்சந்தியில் உயிருடன் கொழுத்தி நடத்திய கொலைகள்) எதிர்த்து எழுதப் பயப்பட்ட தமிழ்ச் சிந்தனையாளர்கள், வெளிநாடு வந்ததும், பல சிறு பத்திரிககைகளைத் தொடங்கினார்கள்.
மாற்றுக்கருத்துக்கொண்டோரின் படைப்புக்கள் மூலம்.புலிகளின் உண்மையுருவைச் சாதாரண மக்கள் படிக்கத் தொடங்கினார்கள். புலிகளுக்குப் பிடிக்காத கவிதை எழுதியதற்காக செல்வி கொலைசெய்யப்பட்டார். அதன் பின் ஒரு குறுகிய காலத்தில் ஆயிரமாயிமாயிரம் புலி எதிர்ப்புப் படைப்புக்கள் பல பத்திரிகைகளில் வரத் தொடங்கின.ஆரம்பகாலத்தில் கனடாவில் ''தாயகமும்,'' ஹொலாண்டில் ''அ, , இ'' பத்திரிகை போன்றவை செய்த 'மாற்றுக் கருத்துக்களுக்கான ஜனநாயக'' எழுத்துச்சேவை அளப்பரியது அதன்பின் பாரிசிலிருந்து ''அம்மா'' பத்திரிகை வரத் தொடங்கியது இப்படி ஏராளமான பத்திரிகைகள் வந்தன. புதிய சிந்தனைப் படைப்புக்கள் வெளிவர உதவி செய்தன. புலிகள் மட்டுமல்லாமல் மற்ற இயக்கங்களும் செய்த படுகொலைகளை எதிர்த்து நான் எழுதிய பல படைப்புக்கள் இந்தப்பத்திரிகைகளில் வெளிவந்தன.
அதன் பின் மாற்றுக் கருத்துள்ளவர்களைச் சாடவென்று புலிகளின் இணையத்தளங்கள் என்ற பெயரில் சிலர், தங்கள் மலவாயிலைத்திறந்து மாற்றுக் கருத்துள்ளவர்களைத் தனிப்பட்ட விதத்தில் தாக்கினார்கள். தாக்கப்பட்டவர்களில் ஜெயதேவன் குடும்பம், ராமராஜ், சிவலிங்கம் குடும்பம் என்று பல குடும்பங்கள் இந்தக் கேவலமான பத்திரிகைகளால் தீண்டாத வார்த்தைகள் திட்டித் தீர்க்கப்பட்டார்கள். கருத்தைக்கருத்தால் விவாதிக்க முடியாமல் காவாலித்தனமாக எழுதி எழுதுபவர்களை மட்டம் தட்டலாம் என்று நினைத்தார்கள்.
ஊடக சுதந்திரம் என்ற பெயரில் இன்று பலதரப்பட்ட, மனநோயாளிகள் தங்களுக்குப்பிடிக்காதவர்களைத்திட்டப்'' பத்திரிகைவாதிகள்'' என்ற முகமூடியிற் பவனி வருகிறார்கள். இவர்களுக்கு பத்திரிகா தர்மம் என்று ஒன்றிருப்பது தெரியாது. யாரையும் பற்றி எதையும் எழுதலாம் என்று நினைக்கிறார்கள். அவர்களைப்போற் சிலர் இப்போது, புனைபெயர்களில் மறைந்து நின்று பேடித்தனமாக, 'கருத்துக்கள்' என்ற போர்வையில் எழுத்தாளர்கள் பற்றிப்பல விதங்களில் உளறிக்கொட்டுகிறார்கள்.
மனிதன் எழுதத் தெரிந்த காலத்திலிருந்து தனது ஆக்கத்தின் மூலம் மற்ற மனிதர்களுடன் தொடர்பு கொள்கிறான். தனக்குத் தெரிந்தவற்றை எழுத்தில் பதிது அதைச் சரித்திரமாகவும் படைத்திருக்கிறான். அவன் எழுதியதும் படைத்ததும், அந்தப்படைப்பைப் படிக்கும் ஒட்டு மொத்தமான சமுதாயத்தின் அங்கிகாரத்தைப் பெறாமல் இருந்திருக்கலாம். ஆனால், எழுத்துக்குச் சுதந்திரம் இருந்தது. அந்தச் சுதந்திரத்தைத் தவறுதலாகப்பயன் படுத்துவது தர்மமல்ல. பத்திகையாளன் சிலவேளைகலில் ஒரு சமுதாயத்தின் வைத்தியன் மாதிரி வேலை செய்கிறான். கேவலமான அரசியவாதிகள் சிலரால் தங்களுக்குப்பிடிக்காதவர்களுக்கெதிராக ஒரு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு, சமுதாயப்பிளவுகள் உண்டாகும்போது, ஒரு உண்மையான பத்திரிகையாளன், தனது அறிவு, திறமை, கடமையுணர்வு, சமுதாயப்பொறுப்பு என்பவற்றை முன்வைத்து உண்மைகளைப் பாரபடசமின்றி எழுதுகிறான்.
கடந்த மாதம், கல்முனையில் இருதமிழ்ப் பெண்கள் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டார்கள் என்று , கிழக்கிலங்கைத் தேர்தலில் தோல்வி கண்டவர்களின் பத்திரிகை பிரசாரம் செய்தபோது, லண்டன் வாழ் சில மனித உரிமைவாதிகள் இந்தச் செய்தியின் உண்மையறியத் தங்களுக்குத் தெரிந்த இலங்கைப்பத்திரிகைவாதிகளை அணுகி விசாரணைகளை மேற்கொண்டார்கள். அதே நேரம் லண்டன் பத்திரிகையான ''தேசமும்'' தன்னாலான விசாரணையை முன்னெடுத்தது, உண்மையை வெளிக்கொண்டு வந்தது. யார் சொல்லும் பிரசாரத்தையும் நம்பாமல், தங்களது விசாரணைகள் மூலம் உண்மையைக்கொண்டு வருவதுதான் பத்திரிகா தர்மம்.
1970ல் அமெரிக்க ஜனாதிபதி நிக்ஸன் என்பவர், தனது எதிரிகளின் விடயங்களை வேவு பார்க்க எப்படித் தன் அதிகாரத்தைத் துற் பிரயோகம் செய்தார் என்பதை அறியச் சில பத்திரிகையாளர்கள் முன்வந்தார்கள். அமெரிக்க அதிகாரத்தின் தூண்களான சி. ஐ. ஏயும் எத்தனையோ கடும் பயமுறுத்தல் நடவடிக்கைகள் எடுத்தும், பத்திரிகையாளர்களான கார்ல் பென்ஸரயன்,ஹரி றோசன்பீல்ட், ஹவார்ட் சிமோன்ஸ், பொப் வோட்வர்ட் என்பவர்கள் தயங்காமற் தங்கள் விசாரணைகளைச் செய்து உண்மைகளைக்கொண்டு வந்தார்கள். ஜனாதிபதி நிக்சனின் பதவி பறிபோனது. அதுபோலவே மேற்கு நாடுகளில் மக்களுக்காகத் தெரிவு செய்யப்பட்ட அரசியல்வாதிகளின் ''இரட்டைவாழ்க்கை'' பற்றிய நிகழ்ச்சிகளையும், மக்களூக்குத் துன்பம் தரும் சட்டங்களையும் எதிர்த்து எழுதுகிறார்கள்.
2005ம் ஆண்டு, பிரித்தானியப்போலிசார், ஜீன் சார்ல்ஸ் மென்சஸ் என்ற தென்னமெரிக்க மனிதனை, முஸ்லிம் தீவிரவாதி என்று சந்தேகித்து ஸ்டொக்வெல் பாதாள புகையிரத நிலையத்தில் சுட்டார்கள். அந்தக்கொலையை எதிர்த்துக்குரல் கொடுப்பவர்களிற் பலர் பிரிட்டிஷ் பத்திரிகையாளர்களே. இப்படிப்பல விடயங்களை மேற்கோள்காட்டி ஏன் பத்திரிகைகள் தங்கள் வேலையைச்சரியாகச் செய்யப்படுபடுகிறது, செய்யவேண்டும் என்று வாதாடலாம்.
அண்மையில் ஐரோப்பாவில் நடந்த கலந்துரையாடல் ஒன்றில். தங்களை ஜனநாயகவாதிகள் என்று சொல்லும் ஒரு கூட்டம் , லண்டனிலிருந்து வரும் ஒரு பத்திரிகை பற்றிக் காரசாரமான கருத்துக்களை வைத்ததாகச் சிலசெய்திகள் வெளிவந்தன.அத்துடன் ''யாரும் அந்தப்பத்திரிகையைப் படிக்கக்கூடாது'' என்றும் சொல்லப்பட்டதாத் தெரிகிறது. பழைய புலிகளின் புதிய அடக்குமுறையா இது? யார் எதை வாசிக்கவேண்டும் என்பது அவரவர்களின் விருப்பம். அதை அடக்குவது எந்த ஜனநாயக் கோட்பாட்டில் அடங்கும்? ''எனக்கு அந்தப்பத்திரிகையில் வரும் கருத்துப்பிடிக்கவில்லை, அதனால் நான் அந்தப்பத்திரிகையைப்படிப்பத்தில்லை'' என்பது கவுரவம். 'அந்தப்பத்திரிகையை யாரும் படிக்கக்கூடாது''என்பது அடக்கு முறை.
வெட்கப்படத் தெரியாதவர்கள்!
ஒரு பத்திரிகையாளன் தனது படைப்பு வெளிவந்ததும் அந்தப்படைப்புக்கு எப்படியான தாக்கம் இருக்கும் என்று யோசித்தே எழுதுவான். வார்த்தைகளை இங்கிதமாகப்பவிப்பான். ,இன்று, புலம் பெயர்ந்த நாடுகளிலிருந்து வெளிவரும் பத்திரிகைகளில் பல தரப்பட்டோரின் கருத்துக்களைக் கொண்டுவர உதவுவது ஒரு சில பத்திரிகைகளே. எழுதுபவர்களும் சிலரே. பெரும்பாலான எழுத்தாளர்கள், புலிகளின் வசை வன்மொழிகளுக்குபயந்து மெளனமாகிவிட்டார்கள். இப்பத்திரிகைகளில் எழுதுபவர்கள் இன்று பல 'புனை பெயர்' வேடதாரிகளால் மிகவும் மோசமான விதத்தில் தாக்கப்படுகிறார்கள்.இந்தப்புனைபெயர் வேடதாரிகள் தங்களின் வெட்கமற்ற வார்த்தைகளாற் தாக்குகிறார்கள்.
''இனிய உளவாக இன்னாது கூறல், கனியிருக்கக் காய் கவர்ந்தற்கே'' என்றார் வள்ளுவர். இதன் கருத்து இவர்களுக்குப்புரியுமோ தெரியாது.
ஒரேவிடயத்தைப்பல தடவைகளிற் சொல்வதால் தாங்கள் சொல்வது நியாயப்படுத்தப்படும் என்று தப்புக்கணக்குப் போடுகிறார்கள். முதுகிற் குத்தவும் , மாற்றுக்கருத்துள்ளோருக்கு ஏதோ ஒரு 'முத்திரை' குத்தவும் மிகவும் வேகமாகத் தங்கள் இணயத்தளத்தைப் பாவிக்கிறார்கள்.இப்படி எழுதுவதால் மற்றவர்களைக் கொலைக்குக் கொடுக்கத்தயங்கமாட்டார்கள் என்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. தனக்குத்தான் எல்லாம் தெரியும் அதிலும் மற்றவர்களைக்கூடத்தெரியும் என்ற மமதையுடன் பேசுகிறார்கள், எழுதுகிறார்கள்.
பயப்படாமல் நேர்மையுடன் ஒரு விடயத்தைச்சொல்வது மதிக்கப்படவேண்டியது, ஆனால், மற்றவர்களைப் பயப்பட வைப்பதற்கு எழுதுவது மனித உரிமை மீறலான விடயமாகும். மிகவும் ஆற்றலுள்ள வீரன் என்றால் ஏன் மறைந்திருந்து எறியவேண்டும்? உண்மைப்பெயர்களுடன் வந்து தர்க்கம் செய்யலாம். நேரம் செலவளித்துத் தங்கள் கருத்துக்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள நினைக்கும் எழுத்தாளர்கள், தங்களைப்பற்றி புனை பெயர்களில் எழுதித் தாக்குபவர்கள் பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்ளத் தேவையுமில்லை.
இந்த 'ஜனநாயக வாதிகள்(!!)' வாதாடும் விடயம் குதர்க்கவாதமாக இருப்பது தர்மசங்கடமாகவிருக்கிறது.
உதாரணமாக, கொலைசெய்யப்பட்ட மஹேஸ்வரிக்கு ஒரு இரங்கள் கூட்டம் வைப்பதைத் தடுக்க பிரம்ம பிரயத்தனம் செய்தார்கள். அதாவது தங்களின் உத்தரவின்றி யாரும் எதையும் செய்யக்கூடாது, தங்களுக்குத் துதிபாடாத யாரும் பத்திகைகளில் எழுதக்கூடாது என்று நினைப்பதும் நடப்பதும் ஜனநாயகமா? புலிகள் தங்களுக்குப் பிடிக்காதவர்களைக் கொலைசெய்தால் அது தமிழரின் விடுதலைப்போரில் தவிர்க்கமுடியாது என்று சொல்லப்படுகிறது. களையெடுக்கப்பட்டுவிட்டது என்று அவர்கள் பத்திரிகைகள் சொல்கின்றன.
அப்படியே இன்று 'புனை' பெயர்களில் எழுத்தாளர்களைக் கேவலமாகச்சாடி எழுதுபவர்களும் ஒரு காட்டுமிராண்டிக்கூட்டமே. முதுகெலும்பற்ற அறிஞர்கள் இவர்கள். இன்று, தங்கள் சொந்தப் பெயர்களில் எழுதும் பெரும்பாலான எழுத்தாளர்கள், தங்களால் முடிந்தவரை, தங்களுக்குத் தெரிந்த விடயத்தை, அதாவது ,ஒரு அரசியற் கட்டுரையோ அல்லது சினிமா விமர்சனமோ எவையாயிருந்தாலும் முடிந்தவரை பொதுமக்களுக்காகவே (தைரியத்துடன் )எழுதுகிறார்கள். அது பிடிக்காவிட்டால் கருத்துக்களை வைக்கலாம் னால் காறித் துப்பவேண்டாம். இது எப்படியிருக்கிறது என்றால், ஒரு கழுதைக்கு முன்னால் முத்தைக் குவித்து வைத்தாலும் அது தன் புத்தியைத்தான் காட்டும் அதாவது காலால் எட்டி உதைக்கும் என்பதைப்போலிருக்கிறது..
அத்துடன் இவர்களின் வார்த்தைகளுக்கும் புலிகளின் பத்திரிகைகளில் வரும் வசன நடைக்கும் பெரிய ஒற்றுமை இருக்கிறது, இங்கிதமற்ற ஆக்கங்களாகவிருக்கிறது. தங்களுக்குப்பிடிக்காத எதையும் யாரும் சொல்லக்கூடாது என்பது 1960ம் ஆண்டுகளிள் சீனாவில் நடந்த கலாச்சாரப்புரட்சியை ஞாபகப்படுத்துகிறது. அவர்களும் முதலாளித்துவ அடையாளங்களான பியானோ, வயலின், என்ற இசைக்கருவிகளை உடைத்தார்கள். டென்னிஸ் விளையாடக்கூடாது என்று தடை போட்டார்கள். இன்று மேற்கத்தியக்கலாச்சாரம் சீனாவில் தாராளமாக்கப்படுகிறது. கொகோகோலாவும் மக்டோனால்ட்ஸ்சும் கண்ட இடமெல்லாம் காட்சிதருகிறது.
தங்களுக்குப்பிடிக்காத மாதிரி உடை உடுப்போரைத் தலிபான்கள் தாக்கினார்கள். ஆபுகானிஸ்தானிலிருந்த பழமைச்சரித்திரமுள்ள புத்தர்சிலையை உடைத்தார்கள். ஐரோப்பாவில் ஒரு காலத்தில் தங்களின் சமயக்கருத்தைக் கேட்காத விஞ்ஞானிகளை எரித்துப்பொசுக்கினார்கள் கத்தோலிக்கர், இந்தியாவில் ஒரு காலத்தில் தங்கள் கருத்துக்களை எதிர்த்தவர்களைக்கழுவேற்றினார்கள் பிராமணர்கள், ஜேர்மனியில் தங்களைவிடக் குறந்தவர்கள் என்று யூதர்களைக் கொலைசெய்தான் ஹிட்லர். பிடிக்காதவர்களை ஒழித்துக்கட்டுவது, ஓரம் கட்டுவது என்பது பாசிசத்தின் ஒரு அம்சம். பாசிசத்தை எதிர்க்கத் தனி மனிதர்களால் முடியாது. ஒட்டுமொத்தமான ஒரு அமைப்பாற்தான் முடியும். ஜனநாயப்பாதையாற்தான் அதை அடையலாம். அதைத் தவிர்த்துவிட்டு, தனி மனித 'அழிப்புக்க்களைச்' செய்வதும் தங்களைப்போன்ற தனிமனிதர்களைத் தூக்கிவைக்கும் ஒரு சிறு கூட்டத்தைப் பெரிதாக நினைப்பதும் ஜனநாயக வழியல்ல.
வாதம் என்பது ஆரோக்கியமான விதத்தில் இருக்கவேண்டும். உருப்படியாக எதையும் முன்வைக்காமல், மாற்று அரசியல் முறை, மாற்று பொருளாதார விளக்கம், மாற்று விதமான சமுதாய வளர்ச்சிக்கான ஆலோசனைகள் என்பவற்றை முன்வைக்காமல். வாதம் செய்வதையே, எதிலும் பிழை பிடிப்பதையே பிழைப்பாகக்கொண்டால் சமுதாயத்திலிருந்து விரைவில் தூக்கியெறியப்படும் நிலை வரும்.
நீண்ட கால வன்முறைப் போரால் மிகவும் நொந்துபோன தமிழ்ச்சமுதாயத்துக்குத் தேவை, தன்னலமற்று, தங்களைவிடப் பணிந்த நிலையில் துன்பப்படும் மக்களுக்குத் தேவையான விடிவுக்கு வழி சொல்லும் நல்ல மனிதர்களே. குதர்க்கவாதிகளல்ல!
- இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment