Monday, June 16, 2008

பிரபாகரனின் நெருங்கிய சகா சுட்டுக்கொலை

புலிகள் இயக்கத்தின் பிரபல தலைவர்களில் ஒருவராகிய மேஜர் கலைஞர் கடந்த 12 ஆம் திகதி திருகோணமலை கிண்ணியா பிரதேசத்தில் வைத்து பொலிஸ் பிரிவினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இவர் அரச படையினர் மற்றும் பொலிஸ் பிரிவினருக்கு எதிரான பல்வேறு தாக்குதல்களிலும் மற்றும் இராணுவ முகாம் தாக்குதல்களிலும் முக்கிய பங்கெடுத்துக்கொண்ட பிரபல புலிகள் இயக்க மேஜர் எனவும் மேற்படி தாக்குதல்களில் சுமார் 35 அரச படையினர், பொலிஸ் பிரிவினர் கொல்லப்பட்டார்கள் எனவும் முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறு குறித்த மேஜர் கலைஞர் கொல்லப்பட்டது சம்பந்தமாக பாதுகாப்புப் பிரிவு தரப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டிருக்கும் தகவல்களுக்கேற்ப மேற்படி மேஜர் கலைஞர் முன்னர் கிழக்கின் பிரதேசங்கள் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த சமயத்தில் திருகோணமலை கும்புறுப்பிட்டியிலிருந்த பிரதான புலிகள் இயக்க முகாமாகிய "பாஸ்கரன் பேஸ்' முகாமில் பொறுப்பாளராகச் செயற்பட்டவர் எனவும் கிழக்கில் புலிகள் அரச படையினரால் தோற்கடிக்கப்பட்டவேளையில் இவர் தப்பியோடி விட்டார் எனவும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் இவர் திருகோணமலை கணேசபுரம் பகுதியில் மறைந்திருந்த பொழுது பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார் எனவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து இவரிடம் தீவிர பொலிஸ் விசாரணையின் போது கிண்ணியாவில் புலிகள் இயக்கத்தால் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையம் பற்றி தெரிவித்தார் எனவும் கடந்த 12 ஆம் திகதி பகல் குறித்த நிலையத்தை அடையாளம் காட்டுவதற்காக மேஜர் கலைஞர் பொலிஸ் குழுவினரால் கூட்டிச் செல்லப்பட்டார் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஆயுதங்கள் பதுக்கிவைக்கப்பட்டிருந்த இடத்தை பொலிஸ் குழுவினர் கண்டுபிடித்த வேளையில் மேற்படி மேஜர் கலைஞர் அங்கிருந்த கைக்குண்டை எடுத்து பொலிஸார் மீது தாக்குதல் நடத்த முயன்றார் எனவும் உடனே பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் குறித்த நபர் உயிரிழந்தார் எனவும் மேலும் பொலிஸ் குழுவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மேற்படி புலிகள் இயக்கத் தலைவர் மேஜர் கலைஞர் கிண்ணியா பிரதேசத்தில் அடையாளம் காட்டிய இடத்திலிருந்து சி.4 வகை வெடிகுண்டுப் பொருட்கள், கைக்குண்டுகள், ரி.என்.ரி. வெடிகுண்டுப் பொருட்கள், வயர் சுருள்கள் என்பன பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுக் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த மேஜர் கலைஞர் பற்றி மேலும் பொலிஸாருக்குத் தெரியவந்துள்ள தகவல்களுக்கேற்ப இவர் நீண்டகாலமாகவே புலிகள் இயக்கத்தில் முக்கிய பொறுப்பாளராக இருந்துவந்துள்ளார் எனவும் இந்த வகையில் அவர் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுடனும் நெருங்கிய தொடர்புகள் உடையவர் எனவும் தேவை ஏற்படும் வேளையில் இவர் பிரபாகரனை நேரடியாகச் சந்திக்கும் அளவுக்கு பிரபாகரனுக்கு நெருக்கமாக இருந்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.

மேலும், திருகோணமலை, கும்புறுப்பிட்டி, மூதூர் ஆகிய பிரதேசங்களில் வைத்து அரச படையினருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பல தாக்குதல்களை இந்த மேஜர் கலைஞரே தலைமை தாங்கி நடத்தியுள்ளார் என்பது விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

திவயின: 13/06/2008

No comments: