Sunday, June 22, 2008

தீர்க்கமான கட்டத்தில் அரசுபுலிகள் உறவு; பேச்சுக்கு வருவதைத் தவிர அவர்களுக்கு வேறு தேர்வு இல்லை

சென்னையில் அமைச்சர் அமுனுகம
விடுதலைப்புலிகளின் பலம் கிழக்கில் தற்போது குறைவடைந்து விட்டதால் மிக விரைவில் அவர்கள் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டியிருக்கும். வடமாகாணம் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டால் கிழக்கில் போன்று அங்கும் தேர்தல் நடத்தப்படும். 9/11 இற்குப் பின்னரும் கிழக்கை இழந்தபின்னரும் தற்போதைய சூழ்நிலைக்கேற்ப விடுதலைப்புலிகள் தாங்களே நல்லிணக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டிய நிலைமை உள்ளது என்று நிறுவன அபிவிருத்தி முதலீட்டு ஊக்குவிப்புத்துறை அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.

சென்னையில் "இந்து' பத்திரிகையின் சிரேஷ்ட பத்திரிகையாளர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் தனது ஆரம்ப உரையில் தெரிவித்ததாவது;

அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான உறவில் இப்போது தீர்க்கமான கட்டத்தை நாம் எட்டியிருக்கிறோம். இப்போது கிழக்கில் மாகாணசபைத் தேர்தல் இடம் பெற்று கருணாவின் உதவியாளராக இருந்த பிள்ளையான் முதலமைச்சராகியுள்ளார். சிறுவராக படையணியில் சேர்ந்து விடுதலைப் புலிகளூடாக உயர் மட்டத்திற்கு வந்தவர். ஆனால் பாதுகாப்பு படையினருடனான மோதலின் போது கருணா குழு எம்முடன் இணைந்தது. கிழக்கில் விடுதலைப் புலிகளின் பலம் பெருமளவு குறைக்கப்பட்டு விட்டது. ஆரம்பத்தில் நாம் உள்ளூராட்சி தேர்தல்களை நடத்தினோம். பின்னர் மாகாணசபைத் தேர்தல் இடம் பெற்றது. பிள்ளையான் வெற்றி பெற்றார்.

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் பிள்ளையானும் அரசாங்கமும் வெற்றி பெற்றனர். தற்போது அவர் முதலமைச்சர். ஏனைய முதலமைச்சர்கள் போன்று தற்போது அவர் பிரபல்யம் பெற்று வருகிறார். அண்மையில் முதலமைச்சர்கள் பேரவைக்கு அவர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அதிகளவிலான விளைவுகளுக்கு இது இட்டுச் சென்றுள்ளது.

முதலாவதாக கிழக்கு மாகாணத்தில் இது இன ரீதியான பதற்றத்தை முன்னணிக்கு கொண்டு வந்துள்ளது. இலங்கையிலுள்ள சகல மாகாணங்களிலும் கிழக்கே இன மோதலின் வழமையான தன்மையை வெளிப்படுத்துவதாகும். ஏனெனில் 1/3 தமிழர்களும் 1/3 முஸ்லிம்களும் 1/3 சிங்களவர்களும் அங்குள்ளனர். அவர்களிடையே சில வித உறவுகள் எதிர்காலத்துக்கான சகுனமாக உள்ளது. முதற்தடவையாக மூன்று சமூத்தவர்களுக்கு மிடையிலான மிகவும் நெருக்கடியான உறவு தொடர்பான பிரச்சினையை நாம் கையாண்டு கொண்டிருக்கிறோம். முதலாவது முதலமைச்சரைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென எதிர்பார்த்த முஸ்லிம்கள் சிறியளவில் விசனமடைந்தனர். ஆனால் அரசு சரியான தீர்மானத்தை எடுத்திருக்கின்றது என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் இது வடமாகாணத்திற்கு ஒரு செய்தியாகும், அவர்கள் ஜனநாயக வழியில் பிரவேசிப்பதற்கான செய்தியாகும். விடுதலைப்புலிகள் போன்ற அமைப்போ அல்லது ஏனைய தமிழ் அமைப்புகளோ தமது சொந்த முதலமைச்சரை வடக்கிற்கு கொண்டிருக்கலாம். ஏனெனில் வடக்கு தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியாகும். தெற்கிலுள்ள மாகாணங்கள் போன்றே வடக்கிற்கும் கிழக்கிற்கும் இரு மாகாண சபைகள் இருக்கும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

அமைச்சர் அமுனுகமவிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களும் வருமாறு.

வடக்கு, கிழக்குமாகாணங்களின் இணைப்பு தொடர்பான நிலைமை என்ன?

இலங்கை இந்திய உடன்படிக்கையில் நிரந்தர இணைப்பு இடம் பெற்றிருக்கவில்லை. தற்காலிக இணைப்பே இடம் பெற்றிருந்தது. கிழக்கு மாகாண மக்கள் மத்தியில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி அவர்களே இணைந்திருப்பதா இல்லையா என்று தீர்மானிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டிருந்தது. இனவாரியான தரவுகளின் பிரகாரம் அவர்கள் இணைப்புக்கு ஆதரவாக வாக்களிக்க மாட்டார்கள் என்பது மிகத் தெளிவானது.

உடன்படிக்கை கைச்சாத்திட்டதை தொடர்ந்து இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் ராஜிவ் காந்தியுடன் அருகிலிருந்து மாநாட்டில் கருத்துதெரிவித்த ஜே.ஆர்.ஜயவர்த்தனா நானும் இணைப்புக்கு எதிராக பிரசாரம் செய்வேன் என்று தெரிவித்திருந்தார். பின்னர் தற்காலிக இணைப்பு இருந்தது. அது கூடுதலாகவோ குறைவாகவோ அரசின் மனப்போக்கில் தங்கியிருந்தது. இப்போது அது அரசியலமைப்பு ரீதியானதல்ல என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இணைப்பை சிங்கள மக்களும் முஸ்லிம் சமூகமும் கிழக்கிலுள்ள தமிழ் மக்களும் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவில்லை. இது புலிகளின் நோக்கத்திற்கு அடியாக இருந்தாலும் நிலைமை தெளிவாகியுள்ளது. ஆதலால் அரசின் நிலைப்பாடானது மிகத் தெளிவானதாகும்.

வடக்கு மாகாணம் படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் போது கிழக்கில் பயன்படுத்திய சூத்திரத்தையே நாம் பின்பற்றுவோம். தேர்தல் இடம் பெறும். யார் தெரிவு செய்யப்பட்டாலும் அவர் வடக்கின் முதலமைச்சராவார். மீண்டும் நாம் பிரிட்டிஷாரின் பழைய முறைமையான 9 மாகாண முறைமைக்கு செல்வோம். இந்தியா இலங்கை உடன்படிக்கை 8 மாகாணங்களாக மாற்றப்பட்டிருந்தது. ஆதலால் அரசு அந்தத் திட்டத்தைப் பின்பற்றுகின்றது.

வடக்கில் இடம் பெறும் மோதல்களின் நிலைமை என்ன?

புலிகள் முற்றுகைக்குள்ளாக்கப்படும் ஒவ்வொரு தடவையும் கிழக்கிலிருந்து படையணிகள் வந்துவிடும். அடிப்படையில் வடக்கிலுள்ள துருப்புகளின் எண்ணிக்கை குறைவானதாகும். கருணா அகன்றபின்னர் பாரியளவிலான யுத்தமிடும் படையை வைத்திருப்பது புலிகளுக்கு கடினமான விடயமாக இருந்தது. நடவடிக்கைகளின்போது அவர்கள் அதிகளவு ஆயுதங்களை இழந்து விட்டனர். அதன் பின் புலிகளின் சண்டையிடும் ஆற்றல் குறைந்து விட்டது. அதேசமயம் அரச பாதுகாப்பு படையினரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

பேர்லினில் கிட்லரின் பதுங்கு குழிகள் மீதான தாக்குதல் குறித்து நான் வாசித்துள்ளேன். ரஷ்யர்கள் வெவ்வேறு முனைகளிலிருந்து வந்தனர். பேர்லின் உதாரணத்தின் பிரகாரம் மோதல்கள் வெவ்வேறு இடங்களில் இடம் பெற்றுக் கொண்டிருந்தன. ஒரு உப எல்லைக்குள் ஊடுருவினால் நேரடியாகவே பேர்லினுக்குள் பிரவேசிக்க முடியும். இங்கு நான்கு முன்னரங்குகளில் மோதல்கள் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன. இது ஒரு தீர்க்கமான (காரணி) நான் நினைக்கிறேன். எந்தவொரு முன்னரங்க நிலை வீழ்ந்தாலும் முல்லைத்தீவுக்கு செல்வதற்கு வழி வகுத்து விடும். இது பேர்லினில் இடம் பெற்றதைப் போன்றதொன்றாகும். இறுதியான, தீர்க்கமான மோதல் இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த முனைகள் இழக்கப்பட்டு விட்டால் உதாரணமாக முகமாலை போன்று அது ஒரு முக்கியமான நிலை, முகமாலை நிலையை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தால் நேராக முல்லைத்தீவுக்கு செல்ல முடியும்.

புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியின் பரிமாணம் என்ன?

பிரபாகரனின் விடுதலைப்புலிகள் தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப செயற்படுவார்களென நீங்கள் நினைக்கிறீர்களா?

முன்னர் இந்த இரு மாகாணங்களிலும் 8 மாவட்டங்களை புலிகள் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தனர். இப்போது முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய இரு மாவட்டங்களே அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. கிழக்கை இழந்ததால் இதுவென கூறுகிறேன். கருணாவும் கிழக்கும். அவர்களுக்கு வேறுதெரிவுஇல்லை. விரைவில் பேச்சுவார்த்தை மேற்கொள்ள வேண்டியநிலை உள்ளது. சர்வதேச சமூகமும் அவர்களுக்கான நிதி வளங்களைக் கட்டுப்படுத்திவிட்டது. 9/11 இற்குப் பின்னர் (அமெரிக்க உலக வர்த்தக நிலையத் தாக்குதல் ) அவர்கள் பயங்கரவாதப்பட்டியலில் அமெரிக்கா, சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தியா என்பன அவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்துள்ளன. சகல இடங்களிலும் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்திய இலங்கை உடன்படிக்கைக்கு ஆதரவளித்த சிலரும் மற்றும் அதிகாரப் பரவலாக்கல் மூலம் சமாதான வழியில் தீர்வு காண்பதற்கு மேற்கொள்ளப்பட்ட ஒவ்வொரு முன் முயற்சிகள் குறித்தும் உங்கள் நாட்டின் முன்னால் இருப்பது தொடர்பாக ஜனாதிபதியின் தொலைநோக்கு குறித்து எவ்விதம் தங்களைப் புரிந்துகொண்டீர்கள்?

அடிப்படையில் இந்த இனப்பிரச்சினையில் இரு உப விடயங்கள் உள்ளன. அதிகாரப் பகிர்வு அலகு ஒன்று மற்றையது பகிர்ந்தளிக்கப்படவுள்ள அதிகாரங்கள் .

அந்தக் கேள்விகளை மையப்படுத்தியதே சகல விடயங்களுமாகும். அதிகாரப் பகிர்வு அலகுப் பிரச்சினை தீர்க்கப்பட்டு விட்டது. வேறு வார்த்தையில் சொன்னால் நாம் மீண்டும் 9 மாகாணங்களுக்குச் சென்றுள்ளோம். இது பிரிட்டிஷ் ஆட்சியின் மூலம் ஏற்படுத்தப்பட்டதொன்றாகும்.

பகிர்ந்தளிக்கப்பட வேண்டிய அதிகாரங்களைப் பொறுத்தவரை நாம் இந்திய இலங்கை உடன்படிக்கைக்கு செல்ல முடியும்.

அதாவது 13 ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்துக்கு செல்ல முடியும். அவை இந்திய மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டவை போன்றதொரு பிரதிமையாகும். இந்திய அரசியலமைப்பின் பிரகாரம் நாம் அதிகாரங்களை பகிர்ந்தளித்தால் அது நியாயமானதாக இருக்கும் என்பது மட்டுமல்லாமல் இந்தியாவும் புகார் தெரிவிக்காது. ஏனெனில், அது தனது சொந்த மாநிலங்களுக்கு வழங்கிய அதிகாரங்களாக இருக்கும். இது ஜெயவர்த்தனாவின் திட்டமாகும். இது தேவையற்ற விவாதங்களை தவிர்த்து விடும்.

அதுமிகவும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வாகும்.

இந்தத் தொலைநோக்கில் ஜனாதிபதி ஈடுபட்டு உள்ளாரா?

ஜனாதிபதி முழுமையான ஈடுபாட்டுடன் உள்ளார். நிரம்ப அழுத்தங்கள் அவர் தற்போதும் முழு அளவிலான ஈடுபாட்டுடன் இருக்கிறார்.

No comments: