
அமெரிக்க நாட்டு இந்து மதத் துறவியும் அகில இலங்கை இந்து சமய அபிவிருத்திச் சபைத் தலைவருமான ஸ்ரீமத் சுவாமி தந்திரதேவா மகராஜ் இன்று திங்கட்கிழமை அதிகாலை 3.00 மணிக்கு அவருடைய 58 ஆவது வயதில் இறைபதம் அடைந்தார்.
கடந்த சில தினங்களாக திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெறறு வந்த அவர் சிகிச்சை பலனளிக்காத நிலையில் இயற்கை எய்தியுள்ளார். Lawrence Anthony Schafaka என்ற இயற்பெயர் கொண்ட அவர் 1950 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16 ஆம் திகதி பென்சில்வேனியாவில் பிறந்தார். 20 வயதில் இந்து மதத்தில் நாட்டம் கொண்டு இந்தியா சென்று இந்து சமயத்தைத் தழுவி தமிழையும் சமஸ்கிருதத்தையும் கற்று தந்திரதேவா என்னும் துறவிப் பெயர் பூண்டு இந்து மத துறவியானார்.
பின்னர் இலங்கை வந்த இவர் 1983 ஆம் ஆண்டில் பாடல் பெற்ற தலைமான திருகோணமலையில் உவர் மலையில் ஆசிரமம் அமைத்து அங்கு நிரந்தரமாக தங்கினார். இலங்கை உட்பட 23 நாடுகளில் இந்து சமயப் பணிகளிலும் பிரசாரங்களிலும் ஈடுபட்டதுடன் ஆன்மீக சொற்பொழிவுகளையும் ஆற்றி வந்தார்.
பசுவதைக்கு எதிராகவும் எம்மதமும் சம்மதம் என்ற கொள்கைக்கும் எதிரானவரான சுவாமி நாட்டின் பல பகுதிகளிலும் அனாதை இல்லங்களை அமைத்து அவற்றை பராமரிப்பதற்கு உதவிகளை வழங்கி வந்துள்ளார். அத்துடன் ஆலயத் திருப்பணிகளுக்கும் விதவைகளுக்கும் அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கும் வறிய மாணவர்களுக்கும் வேண்டிய உதவிகளை நல்கியுள்ளார்.
அத்துடன் ஞானகோசம் உட்பட பல நூல்களையும் துண்டுப் பிரசுரங்களையும் கை நூல்களையும் ஆக்கிய பெருமை சுவாமிகளைச்ய சாரும். எண்ணம் சொல் செயல் ஆகிய மூன்று செயற்பாடுகளினாலும் இந்து ஒருவன் உண்மையான இந்துவாக வாழ வேண்டும் என்பதை வாழ்ந்து காட்டியவர் அவர். இறக்கும் வரை அவர் பாதரட்சை அணிந்ததில்லை. தொலைக்காட்சி பார்ப்பதையும் வானொலி கேட்பதையும் அவர் தவிர்த்து வந்தார்.
No comments:
Post a Comment