விடுதலைப் புலிகள் தமிழர்கள் என்பதாலும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் என்பதனாலும் ஒட்டுமொத்த தமிழர்களையும் பயங்கரவாதிகளாகக் கருதி செயற்படக்கூடாதென கம்பளை பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ரஞ்சித் கஸ்தூரிரட்ண தெரிவித்தார்.
கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புசல்லாவ, நாவலப்பிட்டி, கலஹா, கம்பளை, குருந்துவத்தை பொலிஸ் பகுதிகளின் சிவில் பாதுகாப்புக் குழு உறுப்பினர்களின் கூட்டமொன்று அண்மையில் கம்பளை நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் பேசுகையில்;
பயங்கரவாதிகளுக்கு இன, மத, மொழி பேதம் கிடையாது. இலங்கையில் சகல சமூகங்களிலும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் இருக்கின்றனர். 1971 இல் சிங்கள இளைஞர்கள் ஆயுதம் ஏந்தினர் என்பதற்காக அன்று நாம் முழுச் சிங்கள சமூகத்தையும் பயங்கரவாதிகளாக அல்லது கிளர்ச்சியாளர்களாகக் கருதவில்லை.
வடக்கில் இடம்பெறும் மோதல்களில் தோல்வியடையும் பயங்கரவாதிகள் தெற்கில் குண்டுகளை வெடிக்கச் செய்வதன்மூலம் படையினரின் கவனத்தை திசை திருப்ப முனைகின்றனர். எனவே, பொலிஸாரும் இராணுவத்தினரும் சிவில் சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும்.
அரச மற்றும் தனியார் நிறுவன நிர்வாகங்கள் தத்தமது நிறுவனங்களின் பாதுகாப்பு தொடர்பில் முன்னெச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும். பாதுகாப்பு கட்டமைப்பொன்றை உருவாக்கிக் கொள்ளல் வேண்டும். இதற்கு உதவுமுகமாக பொலிஸாரின் ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்ள முடியும்.
கம்பளை பொலிஸ் பிரிவிலுள்ள 38 தோட்டங்களில் விழிப்புக் குழுக்களை உருவாக்கி தோட்ட தலைவர்களை விழிப்புணர்வூட்டும் வேலைத் திட்டமொன்றை மேற்கொள்ளவுள்ளோம். இதேவேளை, கிராமசேவகர் மட்டத்திலும் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இத்தகைய பாதுகாப்பு ஏற்பாடுகள் யாவும் தேசிய பாதுகாப்புக்கு கைகொடுக்கும் வகையில் மேற்கொள்ளப்படுகின்றன என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment