Sunday, June 22, 2008

கிழக்கின் ஒற்றுமையிற்தான் கிழக்கின் முன்னேற்றம் தங்கியிருக்கிறது.

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்.....21.06.08

தேர்தலில் வெற்றி பெறுவதைவிடத் தேர்தலிற் பெற்ற வெற்றிக்கு, மக்களிடம் கொடுத்த வாக்குறுதிகள் காப்பாற்றப்பட்டு, முன்னேற்றத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதுதான் மிக முக்கியம். அந்த வளர்ச்சிக்குப் படித்தவர்களின் பங்கு கணிசமாகவுள்ளது. 1987ல் 13வது சரத்தின்படி வடகிழக்கு இணைக்கப்பட்டு திரு வரதராஜப்பெருமாள் அவர்கள் முதன் மந்திரியாய் வந்தபோது, அவரையும் எதிர்த்து, 13வது சரத்தின் அடிப்படையிலமைந்த அரசியல் அமைப்பையும் தகர்த்து எறிந்தார்கள். இன்று, பழையபடி 13வது சரத்தின் அடிப்படையில் ஒரு பிரதேச அரசியல் அமைப்பு கிழக்கில் உண்டாகியிருக்கிறது. அந்த அமைப்பு வெற்றி பெறப் பல்லின வல்லுனர்களின் உதவியும் தேவை. ஆங்கிலம் படிக்காதவர்கள் பதவிக்கு வந்ததாகக்கிண்டல் பண்ணுதலோ, அரசியல் முன்னேற்றத் திட்டங்களுக்கு இடையூறுகள் கொடுப்பதோ ஜனநாயகச் செயல்களல்ல. மக்களால், மக்களுக்கு, மக்களே தேர்ந்தெடுத்த அரசியல் அமைப்பு வெற்றிபெற உதவுவது அரச உத்தியோகத்தர்களின் கடமையாகும். அதேபோல, பல்லினங்கள் வாழும் கிழக்கில் வரும் மோதல்களைக்கவனமாகக் கையாண்டு ஒரு சுமுக நிலையைக் கொண்டுவருவதும் சமூகத் தலைவர்களின் அரியபணியாகும். மக்கள் தொண்டு மகாவலிமையுடையது. பிரிவினைகளுக்குள் ஒற்றுமை காண்பது மனித மேம்பாட்டுக்கு இன்றியமையாத விடயமாகும்.

இன்றைக்குப்பல ஆண்டுகளுக்கு முன், தமிழ் இளைஞர்கள், எங்கள் சமூகத்தின் விடுதலைக்குப்போராட வீறிட்டெழுந்தபோது, ''இவர்கள் என்ன செய்து முடிக்கப்போகிறார்கள்? சிறுபிள்¨ளை வேளாண்மை செய்யப்போன கதையாகத்தான் முடியப்போகிறது. விளைச்சல் ஒருநாளும் கிடைக்காது''என்று மிகப்படித்த தமிழ் சமுதாயம் கிண்டல் செய்தது. எத்தனையோ துயரை எங்கள் இனம் அனுபவித்தது. அதிலும் கிழக்கு மக்கள் பட்டதுயர் எழுத்தில் அடங்காது. அவர்களால் படகில் ஏறி இந்தியாவுக்கும் ஓடமுடியாது. வெளிநாட்டுக்கு ஓட உதவி செய்வார் யாருமில்லை. அவர்கள் பல இயக்கங்களிற் சேர்ந்தார்கள். வடக்கின் தலை¨மைக்குத் தலைவணங்கித் தங்கள் ஊரைவிட்டு, உறவினரைப்பிரிந்து பல்லிடங்களில் இராணுவத்துடன் போராடினார்கள். பல வெற்றிகளை வாங்கிக் கொடுத்தார்கள். யாருடைய விடுதைக்குத் தங்கள் உயிர்களைத்தியாகம் செய்தார்களோ, அதே விடுதலையைக்காரணம் காட்டிக் கிழக்கு மக்கள் நூற்றுக்கணக்காகக் கொல்லப்பட்டார்கள். ஆரியகுளம் சந்தியில் டெலோ என்ற இயக்கத்தில் சேர்ந்த குற்றத்துக்காக,அன்று கொல்லப்பட்ட கிழக்கு இளைஞர்களின் இரத்தக்கறை இன்னும் படிந்திருக்கிறது. ஒருகாலத்தில் செய்யப்பட்ட கந்தன் கருணைக்கொலைகளின் (இபிர் எல் எfவில் சேர்ந்திருந்த கிழக்கின் குழந்தைகள்) கதறல்கள் இன்றும் எங்கேயோ ஒலித்துக்கொண்டிருக்கிறது. கருணா தலைமையில் கிழக்குப் போராளிகளிற் பலர் பிரிந்தபோது, பிரிந்து வந்த நூற்றுக்கணக்கான இளம்போராளிகளை,வெருகலாற்று மணற்படுக்கையில் கொடூரமாகக்கொன்று குவித்தார்கள்.1991ம் ஆண்டு, முஸ்லிம் மக்களை யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றிய அன்றிரவு, கிழக்கைச்சேர்ந்த நூற்றுக்கணக்கான முஸ்லிம் இளைஞர்கள் இரவோடிவாகக் கொல்லப்பட்டார்கள். 2006ம் ஆண்டு, மூதுரிலிருந்து ஓடிவந்த தமிழ்பேசும் மக்களுக்குள். முஸ்லிம் மக்களை இனம் கண்டு, முஸ்லிம் இளைஞர்களைக்கடத்தியும் கொலையும் செய்தழித்தார்கள்.

இப்படிப்பல கொடுமைகளைக் கிழக்கு மக்களுக்குச் செய்தவர்கள் இன்று, ஒரு சில முஸ்லிம் தலைவர்களைத் தூண்டிவிட்டு 'கிழக்கில் முஸ்லிம் அலகு' எடுத்துதருவதாக ஆசை காட்டிக் கிழக்கு மக்களின் ஒற்றுமையைக் குலைக்கப் பார்க்கிறார்கள். தமிழர் விடுதலைப்போராட்டத்தில் இதுவரை (1974-2008) கிட்டத்தட்ட 100.000 மக்கள் இறந்ததாகச் சொல்லப்படுகிறது. இதில் 21051இளைஞர்கள்-இளைஞிகள் விடுதலைப்புலிகளைச் சேர்ந்தவர்கள். பெரும்பாலான போராளிகள் பலவந்தமாகக் கடத்தப்பட்ட தமிழ் ஏழைகள். இவர்களின் இழப்பால் என்ன பயன் யாருக்கு வந்தது?

முஸ்லிம் மக்கள் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் வாழ்கிறார்கள். கிழக்கில் முஸ்லிம் அலகு கேட்டுப் ''பிரிவுப்'' பிரச்சினையைத் தூண்டி விட்டால் அதில் அழியப்போவது யார்? தமிழ் மக்களுக்குத் 'தமிழ் ஈழம் ' என்ற கோரிக்கையை முன்வைத்துவிட்டு ஆங்கிலம் பேசும் தமிழ்தலைமை ஊரை விட்டோடியது. அப்பாவி ஏழைகள் அழிந்தார்கள். முஸ்லிம் பிரச்சினையைத் தூண்டிவிட்டால் அதில் முகம் கொடுத்து அழியப் போவது யார்? இலங்கையில் ஆயுதம் தூக்கிய யாரும் இதுவரையும் எந்தவித முன்னேற்றமும் காணவில்லை.

1971ம் ஆண்டு, ஜேவிபி யின் ஆயுதப்புரட்சி வந்தபோது, திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கா, இந்தியப்பிரதமர் இந்திரா காந்தியின் உதவியுடன் கிட்டத்தட்ட 30.000 சிங்கள இளம் தலைமுறையினரை மூன்று மாதத்தில் கொன்று குவித்தனர். கிராமம் கிராமமாக அழித்துக்கொட்டினர். நூற்றுக்கணக்கான சிங்கள இளம் பெண்கள் பாலியற் கொடுமைக்காளானார்கள். 1989ல், இந்திய -சிறிலங்கா ஒப்பந்தத்தை எதிர்த்த ஜேவிபியை திரும்பவும் அழித்தார்கள். புலிகளின் உதவியுடன் பிரேமதாசா கிட்டத்தட்ட 60.000 சிங்கள இளம் தலைமுறையை வேட்டையாடினார்கள். தற்போது, இலங்கை இராணுவம், தனக்கு எதிராக, ஆயுதம் தூக்குபவர்களுக்குப் பாடம் படிப்பிக்க உலக மட்டத்தின் பல பயிற்சிகளைப்பெற்றிருக்கிறது. இந்த சக்திகளுக்கு முன்னால், இன,சமய உணர்ச்சி வசப்படுத்தி இளைஞர்களை அழிவுப்பாதைக்கு அனுப்புவது தர்மமல்ல.

இலங்கையில் இதுவரை எத்தனையோ விடுதைப்போராட்டங்கள் நடந்திருக்கின்றன. ஜே.வி.பியினரின் ஆயுதப்போராட்டம் தோல்வியடைந்து இன்று அவர்கள் ஜனநாயகவாதிகளாக, அரசியலின் முக்கியசக்திகளாக இருக்கிறார்கள். ஈபிடிபியினர் இன்று வடக்கின் ஆளுமையைக்கையில் வத்திருக்கிறார்கள். அதேபோல், ஒருகாலத்தில், விடுதலைப்புலிகளும் ஜனநாயவழிக்கு வரலாம். உலகம் பரந்திருக்கும் அவர்களின் பொருளாதாரச் செல்வத்தால் தமிழ்ப்பகுதியைப் பத்துமடங்கு பெரிதான சிங்கபூராக மாற்றிக்காட்டலாம். அந்தநாள் விரைவில் வரும். அதற்கு முன், இன்று கிழக்கில் ஜனநாய முறையில் தேர்தலில் வெற்றிபெற்று, மக்களுக்கு பல முன்னேற்றங்களைக்கொண்டுவரும் பிரதேச அரசாமைப்புக்கு இடர் கொடுக்காமல் இருப்பது கிழக்கின் ஏழைகளின் வாழ்க்கையை உயர்த்துவதற்குச் செய்யும் பணியாகவிருக்கும்.

கடந்த சிலநாட்களாகப் புலிகளின் தாக்குதலில், கல்முனைப்பகுதியில் இரு போலிசார் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.19.06.08, காலை 8,45 மணியளவில், சமாந்துறைப்பொலிஸ் ஸ்டேசனிலிருந்து கல்முனைக்கோர்ட்டுக்கு மோட்டர் சைக்கிள் வந்து கொண்டிருந்த (ஆயுதம் தாங்காத) இரு சாதாரண போலிஸ்காரர்கள் புலிகளின் துப்பாக்கிச்சூட்டுக்கு ஆளாகி இறந்திருக்கிறார்கள். இச்சம்பவம் கல்முனைக்கும் சாய்ந்தமருதுவுக்கும் இடையிலுள்ள தமிழ்ப் பகுதியில் நடந்திருக்கிறது. காரைதீவைச்சேர்ந்த ஒரு தமிழ் போலிசாரும் சம்பாந்துறையைச்சேர்ந்த ஒரு முஸ்லிம் போலிசாரும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். விசாரணைக்கு வந்த, கிழக்குப் போலிஸ் மாஅதிபர் திரு லியனகே, விசாரணைக்கு வந்தபோது அங்கிருந்த மக்கள் ஒருதகவலும் சொல்ல முடியாத பயத்துடன் இருக்கிறார்கள். இதுதான் இன்றைய கிழக்கின் நிலை. இந்த, அபாய நிலை நீடித்தால், சமுதாய முன்னேற்றங்களை முன்னெடுப்பது சிரமமாயிருக்கும்.

நீண்ட போர் நடந்த பிரதேசத்தில் ஒரு சில மாதங்களுக்குள் சுமுக நிலை வரும் என்று எதிர்பார்ப்பது யாதார்த்தமல்ல, ஆனாலும், தங்களின் எதிர்கால முன்னேற்றத்திற்கு மக்களின் ஒத்துழைப்பும் தேவை.
அண்மையில், இத்தாலி நாட்டில் புலிகளின் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கனடாவில் அவர்களின் ஸ்தாபனம் ஒன்று கனடிய அரசால் மூடப்பட்டிருக்கிறது. வெளிநாட்டில் பிரச்சினைகளை எதிர்நோக்கும் புலிகள், பழையபடி, தங்கள் படை பலத்திற்கு ஆள் சேர்க்கக் கிழக்கைக்குறி வைத்திருக்கிறார்கள். கிழக்கின் முன்னேற்றத்தில் அக்கறையற்ற சில காட்டிக்கொடுக்கும் ஒற்றுப்படை பழையபடி கிழக்கில் உள்ள பெண்களை விதவைகளாக்குவதிலும், குழந்தைகளைக்கொலைக்கு அனுப்புவதிலும் மக்களைப்பீதியில் வைத்திருக்கவும் முயற்சிக்கிறார்கள்.

போரின் கொடுமையால் துன்பப்பட்ட கிழக்கு மக்கள் வாழ்க்கையின் பொருளாதாரம், கல்வி, தொழில் வாய்ப்புக்கள் விருத்தி செய்யப்படவேண்டும். இல்லாவிட்டால் , திரும்பவும் கிழக்கில் பயங்கரவாதம் தலைதூக்கும் நிலைவரும். கடந்த காலங்களில் போராட்டத்தில் அகப்பட்டுக் கொண்ட சிறுவர்கள், சுதந்திர, சிந்தனை, தமிழ் ஈழம், விடுதலைப் போராட்டம் என்பது போன்ற பாரிய பரிமாணங்களைப் புரிந்து கொண்டவர்கள் அல்லர். கிழக்கின் வறுமை மிகக்கொடியது. போர் தொடர்ந்த காலகட்டத்தில்,நிலத்தை நம்பி வாழந்த மக்கள், போரின் உக்கிரத்தால் விவசாயம் செய்யமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். விவசாய நிலங்களில் இராணுவ முகாம்கள் போடப்பட்டன. கண்னி வெடிகள் புதைக்கப்பட்டன, பாதுகாப்பு உயர்வலையங்களாக்ப் பிரகடனப்படுத்தப்பட்டன.

விவசாயத்தை நம்பி வாழும் ஏழைச் சிறுவர்களும். மாணவர்களும் பலவந்தமாகக் கடத்தப்படார்கள். அந்தக் கொடுமைகள் தணிந்து கொண்டு வந்தாலும், எப்படியும் இனக்கலவரத்தை உண்டாக்கவும், சாதாண மக்களின் வாழ்க்கையை அல்லோலகல்லோல நிலைக்குள் தள்ளவும் , கிழக்கிலங்கைத் தேர்தலில் தோல்விகண்ட சிலர் முயற்சித்துக்கொண்டேயிருப்பார்கள். இவர்கள், 'ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாடம்' என்று நினைப்பவர்கள். எரியும் வீட்டில் எதையும் எடுத்துக்கொள்ள நினைப்பவர்கள்.

இந்த நிலையை மக்கள்தான் மாற்றமுடியும்.

கிழக்கில் நடந்த தேர்தலும் மக்கள் கொடுத்த வாக்குகளும் ஒரு சரித்திர மாற்றத்தைக் கிழக்கில் மட்டுமல்ல இலங்கை முழுக்கவும் கொண்டுவரக் கூடியவிடயமாகும். ஒன்றுபட்டால் உண்டுவாழ்வு, அது இல்லையென்றால் அனைவருக்கும் தாழ்வு என்பதைக்கிழக்கு மக்கள் கட்டாயம் உணரவேண்டும். முவ்வின மக்களும் வாழும் பகுதியில் ஒருசாரார், பலமுள்ளவர்களாகவும் அடுத்தவர்கள் அடக்கப்படவேண்டியவர்கள் என்று நினைப்பதும் தார்மீகமல்ல.

சுனாமியில் அழிவு வந்தபோது பொங்கிய கடலுக்கு சாதி ,மத, இனவேறுபாடு தெரியவில்லை. எல்லோரையும்தான் அள்ளிக்கொண்டுபோனது. அந்தத் துயரில் அல்லற்பட்ட கிழக்குக்கு உணவு கொண்டோடி வந்தபோது உணவுகொண்டுவந்தவர்கள் சாதி, மதம், இனம் என்ற வேறுபாடு பார்த்துவரவில்லை. மனிதநேயம் முன்னின்றது. மக்களின் அன்பு வெளிப்பட்டது. அடுத்தவனுக்கு உணவில்லை என்றால் இந்த அகிலத்தை அழித்து விடுவோம் என்று முழங்கிய பாரதி மாதிரி, சுனாமியில் துவண்டுபோன சகோதர்களுக்குப் பாணும் சம்பலும் கொண்டுவந்தவர்கள் அம்பாரைச் சிங்களச்சகோதரிகள், மீன்குழம்பும் சோறும் பார்சலாக்கட்டிக்கொண்டு ஓடி வந்தவர்கள் சம்பாந்துறை முஸ்லிம் சகோதரிகள். அயல் நாட்டுக்காசு யுதம் வாங்கக்கொடுபடுகிறது. உள்நாட்டன்பு ஒரு நேரச்சோறு போடுகிறது. சுனாமி வந்து ஒரு சில நாட்களின் பின் ஊருக்குப்போயிருந்தேன். அப்போது. சுனாமியில் இறந்த பிணங்கள், அழுகி நாற்றமெடுத்தபோது , அவற்றை அப்புறப்படுத்திகொண்டிருந்தவர்கள் முஸ்லிம், தமிழ். சிங்கள இளஞர்கள். இறந்த பிணங்கள் கடல் உப்பு நீரில் ஊதிப்போய் அடையாளம் தெரியாத பிணக்குவியல்களாகக் கிடந்தன. காரைதீவு, கோமாரி, சாய்ந்தமருது, திருக்கோவில் போன்றபகுதிகள் பிணக்காடாயிருந்தது. அங்கே, பிணவாடை தாங்காது, முகத்தில் துணியைக்கட்டிக்கொண்டு பிணங்களை அகற்றிக்கொண்டிருந்தவர்கள் முவ்வினங்களைச் சேர்ந்த இளைஞர்கள்.

சுனாமி அகதிகளின் முகாம்களுக்குப்போனபோது அங்கு அகதிகளுக்கு உதவி செய்து கொண்டிருந்தவர்கள் அப்பகுதி இராணுவவீரர்கள். அப்போது, அகதி முகாம்களில் தங்கள் குடும்பத்தை இழந்த துயரில் பலர் துவண்டுபோய்க்கிடந்தார்கள். சிலர் , அழுவதற்கும் திராணியற்று வெற்றுப்பார்வைகளுடன் வெறித்துப்பர்த்துக்கொண்டிருந்தார்கள். உலகில் என்ன நடந்தாலும் உயிருடன் இருப்போர்களுக்கு உணவு தயாரிக்கச் சிலர் பாடுபட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு உதவி செய்து கொண்டிருந்தவர்கள் அதிரடிப்படை வீரர்கள். தமிழர்களுக்கும் அவர்களுக்கும் மொழித் தடையிருந்தது, ஆனாலும் பார்வைகளில் அன்பு, பணிவிடைகளில் மனிதாபிமானம் பிரதிபலித்தது. அன்புக்கு மொழி தேவையில்லை. வாய்மொழியை விட, செய்வழிகள் சிறந்தவை. பெரிய பானைகளில் அன்னம் பொங்கிக்கொண்டிருந்தது. அடுப்புக்கு விறகு போட்டுக்கொண்டிருந்த, ஒரு இராணுவ இளைஞன் தன் குடும்பத்துக்கு உதவுவதுபோல் உதவிக்கொண்டிருந்தான். ''இவர்களின் உயிரைக்காப்பாற்றி இவ்வளவு அன்புடன் வேலை செய்கிறீர்களே, ஒரு சந்தர்ப்பத்தில் இவர்களுக்கு எதிராக உங்கள் ஆயுதங்களைத் திருப்ப நேர்ந்தால் என்ன செய்வீர்கள்?'' என்று கேட்டபோது, ''நாங்கள் உத்தரவுக்குப்பணியும் உத்தியோகத்தில் இருப்பவர்கள்'' என்ற மறுமொழி வந்தது.

மக்களுக்கு எதிராகத் துப்பாக்கிகள் திரும்பாமல் இருப்பதற்கு மக்களின் ஒத்துழைப்பு தேவை. தங்கள் சமூகத்தை யார் வந்து பிழவு செய்ய முனைந்தாலும் நாட்டுப்பற்றுள்ள மக்கள் திடமான ஒற்றுமையுடன் நின்று மக்களின் உயிர்களைப்பாதுகாக்க வேண்டும். போருக்குப்பணம் கொடுத்து , தாங்கள் பிறந்தநாட்டைப் பிணக் காடாகப்பண்ணுவது அறிவல்ல, படித்தவர்களின் வேலையல்ல. பண்புள்ளவர்களின் செயலல்ல.
எனது இரு மைத்துனிகளின் உயிரையும் (திருக்கோவில், கோமாரிப்பகுதிகள்) காப்பாற்றியவர்கள் சிங்கள இராணுவத்தினர். ஒரு மைத்துனியைக்காப்பாற்றிய இராணுவ அதிகாரி தன்னுயிரைச் சுனாமியில் இழந்து விட்டார். இப்படி, மரணத்தில் ஒன்றுபட்டவர்கள் எங்கள் மக்கள்.


புலம் பெயர்ந்த தமிழருக்கு ஒரு வேண்டுகோள்:

கிழக்கு மக்கள் பலர் எத்தப்படித்தவர்கள் அல்லர் அவர்களால் வெளிநாட்டுக்கு ஓடும் வசதியும் கிடையாது. நிம்மதியான வாழ்வுக்கும் வளத்துக்கும் தேர்தலில் வாக்குப்போட்டு ஒரு ஜனநாயவழியில் தங்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்கத் துடிக்கிறார்கள். மிகவும் வறுமையான மக்கள், வாழத் துடிக்கிறார்கள். ஏழ்மையில் போராளிகளானவர்கள், இன்று தங்கள் எதிர்காலத்தைத் தங்களால் முடிந்தவரை நிம்மதியாக வைக்க ஏங்குகிறார்கள். இலங்கையிற் தொடரும் போருக்குப் பணம் கொடுக்கும் புலம் பெயர்ந்த, படித்த, பெரிய மக்களை, இந்த ஏழைகளின் சார்பில் கெஞ்சிக்கேட்டுக்கொள்கிறேன், '' இவர்களும் உங்களைப்போல் தமிழ் மொழி பேசுபவர்கள், பணத்தால், பிரதேசத்தால் ஒன்று படாவிட்டாலும் ஒரு அழகிய மொழியின் தொடர்பால் ஒன்று பட்டவர்கள். ''இவர்கள் பட்ட துயர் போதும், தயவு செய்து வாழவிடுங்கள், இவர்களுக்குகாகக் குரல் கொடுக்க அகில உலகம் பரந்த பிரச்சார ஊடகங்கள் இல்லை. இவர்கள்தான் மிகக்கூடிய தொகை மாவீரகளைப்படைத்தவர்கள். ஆனால் இன்று அவர்களின் பெயர்கள் கூடப் பிரஸ்தாபிக்கப்படுவதில்லை. அது போகட்டும், இன்று இருப்பவர்களை வாழவிடுங்கள். தொடரும் போரை நிறுத்துங்கள். இன்னும் இருபதல்ல எத்தனை வருடங்கள் உயிர்ப்பலி கொடுத்தாலும் ஈழம் கிடைக்காது. நாங்கள் வெளிநாடுகளில் வசதியாகவாழ்கிறோம், இவர்களோ ஒரு கஞ்சிக்கு ஏங்குபவர்கள். போராடி அலுத்துவிட்டவர்கள். அழிந்ததுபோதும் என்று வாக்குப்போடுத் தங்களுக்கு ஒரு தலைமையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அது அவர்களின் முடிவு. அவர்கள் தெரிவு செய்தவர்களை உங்களுக்குப்பிடிக்காமல் இருக்கலாம். பானையில் இருந்தாற்தான் அகப்பையில் வரும், படியில் அழும்போது பாயாசம்தான் தேவை என்று அடம் பிடிப்பது முட்டாள்த்தனம். ஜனநாயக வழியில் ஒரு அமைப்பு வந்திருக்கிறது, பழிவாங்கும் நினைவுகளை நீக்கிவிட்டு இந்த ஏழைகளைத் தயவி செய்து வாழவிடுங்கள்.

''ஈழம் கிடைப்பது என்பது, கிழக்கில் தங்கியிருக்கவில்லை. உங்கள் சிந்தனைகளை நல்ல வழியில் திருப்புங்கள். கிழக்கு மக்களுப்பல கல்லூரிகள் கிடையாது, ஒரு சில பாடசாலைகள் உண்டு. உங்கள் குழந்தைகள் புலம் பெயர்ந்த நாடுகளில் மேற்படிப்புப்படிக்கும் போது இக்குழந்தைகள் சாதாரண ஓ' லெவல் படித்து ஏதோ ஒரு வேலையிற் தொக்கிக்கொள்ள வழி விடுங்கள். புலம் பெயர்ந்த நாடுகளி¢ல் இறந்தவர்களுக்கு அஞ்சலி என்ற பெயரில் கொண்டாட்டம் வைக்கக் கோடி பணம் செலவழித்துக் குதுகலிக்கிறீர்கள். கிழக்கு மக்களி¢ற் பெரும்பாலோர், ஒரு நேர உணவுக்குப் போராடி கும்மிருட்டில் தவிக்கிறார்கள். இவர்களும் தமிழ் பேசுகிறார்கள் என்ற குற்றத்திற்காக இவர்களி¢ன் பிரதேசத்தில் உங்கள் யுதங்களைப் பாவிப்பது தார்மீகமா? புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள அத்தனை மனித உரிமை வசதிகளையும் அனுபவித்துக்கொண்டு, அதேவழியில் ஜனநாயகப் பாதையில் வாக்களித்த, உங்கள் மொழி பேசும் மக்களைக்காட்டு மிராண்டிகளாக நடத்துவது என்ன விதமான தர்மம்? வேலைக்குப்போகும் போலிசாரைக்கொலை செய்வதால் ஈழம் கிடைத்து விடுமா''.

கிழக்கு மக்களுக்கு:

கிழக்கு மக்கள், இன்று நடக்கும் யதார்த்த நிலையைப்புரிந்து கொள்ள வேண்டும். முன்னேற்றத்துக்கான நடவடிக்கைகளை அவர்கள்தான் முன்னின்று நடத்தவேண்டும். மிக முக்கியமானது இன ஒற்றுமை. மசூதியும், விகாரையும், கோவிலும் ஒரே குரலில் சமாதானம் இன ஒற்றுமை பற்றிக் குரல் கொடுக்கவேண்டும் . விரும்பியோ விரும்பாமலோ நாங்கள் ஒன்றாகச் சேர்த்து விடப்பட்டிருக்கிறோம். உடைந்து போன, தொய்ந்துபோன சமுதாயத்தைத் தூக்கி விடுவது உங்கள் கையிற்தானுண்டு .இ¢வ்வளவு காலமும் யாரோ ஒருத்தரின் தலைமைக்குத் தலையாடியதுபோது. இனிவரும் எதிர்காலத்தை நீங்களே நிர்ணயிங்கள். விதவைகளுக்கு வாழும் வழிகள் கொடுக்கத் தொழில் வசதிகள் செய்து கொடுபடவேண்டும். இளமையிற் கல்வியைத் தொலைத்த இளைஞர்களுக்குத் தேவையான புனத்தாருணக் கல்விமுறை கொண்டுவரவேண்டும். மழுங்கிப்போய்க்கிடக்கும் தொழில் வசதிகள்(மாட்டுப்பண்னைகள்,சிறு கைத்தொழில்கள், சிறுவிவசாயம்) என்பன சீர்படுத்தப்படவேண்டும். போரின் உக்கிரத்தால் அகதிகளாய் ஓடிப்போன மக்கள் மீழ் குடியிருப்புக்கள் செய்யப்படவேண்டும். சட்டங்களும் பாதுகாப்பும் ஒவ்வொரு சாதாரண மக்களின் வாழ்க்கைக்கும் இன்றியமையாதது, எனவே, புல்லுரிவிகள் களையெடுக்கப்படவேண்டும். ஊடுருவிகள் அடையாளம் காணப்படவேண்டும். ஒற்றுமையும் புரிந்துணரலும் மிக முக்கியம். புலம் பெயர்ந்த தமிழர்களி¢ன் ஒத்துழைப்பு மிக முக்கியம். இன்று, வந்திருக்கும் புதிய ஜனநாயக சூழநிலையால், பல நாடுகளி¢ன் உதவியுடன் பல அபிவிருத்திகளை முன்னெடுக்கலாம். அவற்றின் நிலை பற்றிக் கலந்தாலோசனைகள் நடத்தப்படவேண்டும். படிப்பு, கைத்தொழில்கள், புனத்தாருணவேலைகள் முன்னெடுத்தல் மிகவும் முக்கிய விடயங்களிற் சிலவாகும். இவற்றிற்கெல்லாம், ஒட்டு மொத்த தமிழினத்தின் ஆதரவு தேவை. நடந்தவை, துன்பகரமானவை, நடப்பது நல்லவையும் பிரயோசனமானவைகளாகவுமிருக்க நல்ல மனிதர்களின் உதவிதேவை. அவர்களின் ஒத்துழைப்பு மிகவும் இன்றியமையாதது.

இதுவரை நாங்கள் எங்கள் தமிழ்ப்பகுதிகளில் விதைத்தவை பல பிணங்கள், அதுவும் தமிழ்ப்பிணங்கள். தயவு செய்து அவற்றை இனியும் தொடரவேண்டாம். முல்லையும், மருதமும் நெய்தலும் எங்கள் வளம். நெல்லும், சோழமும், கனிகளும், பூக்களும் சோலைகளாகட்டும். நல்ல மனங்களின் அன்பு அவற்றிகுப் பசளைகளாகட்டும். நம்பிக்கையே வாழ்வு, நாளைக்கு நல்லது நடக்கும் என்று ஒரு அடி எடுத்து வைப்போம் அதன்பின் ''விடிவு, மலர்ச்சி, மறுவாழ்வு'' என்ற மலையேறி ஒரு வெற்றிக் கொடிநடலாம்.

தேணி இணையம்

No comments: